Tuesday, October 1, 2013

ஆகையினால்...

யானை ந்னா கம்பீரமா தான் இருக்கணும். அதால கூனிக் குறுகி உறுத்தலோட இருக்க முடியாது/கூடாது. அந்தப் பெரும் யானையின் கம்பீரத்தின் மீது காதல் கொண்டவள் நான். என்றாவதொரு நாள் அது சில்லறைகளுக்குள் தொலைந்த இருட்டின் வடிவமென்று உணர்ந்தேனாகில் சுக்கல் சுக்கலாய் சிதைந்து போவேன்.

ஆக, யானை என் பொருட்டும் அதன் கம்பீரத்தை காப்பாற்றுவது கடமையாகிறது.

ஏன் சூழ்நிலையின் பிடியில் சுயமழிந்து போகிறார்கள்.

சாதாரணனில்லை என்பது தான் பொய்யா? ஒரே குழப்பமா இருக்கு.

உரையாடும் மனிதர்களைத் தான் சொல்கிறேன்.  போலிகளைக் கண்டால் பற்றிக் கொண்டுவருகிறது.

அரசியல்வாதியோ இலக்கியவாதியோ பேசிட்டிருக்கும் போது பதில் சொல்ல நேரமெடுத்துட்டேருந்தா இன்னும் புதுசா ஒரு கதை சொல்ல டைம் எடுக்கறாங்கன்னு அர்த்தம். இல்ல இடைச்செருகலா ஏதோ சொருகி பேச்சு திசைமாறும் வாய்ப்புண்டு. ஆனா டைமிங் சென்ஸ்ல சிக்ஸர் அடிச்சா ‘வாவ்’ ஒரு ஆச்சர்ய கைதட்டல் நிச்சயமுண்டு.

மடைதிறந்த வெள்ளம் போல யாரையும் பேசவிடாம தானே பேசிட்டு இருந்தா நல்லா ஹோம்வொர்க் பண்ணி மனப்பாடம் பண்ணிட்டு வந்திருக்காங்கன்னு அர்த்தம். பாவம் பார்த்து, காதை மூடி அவருக்கு பின்னாலிருப்பவற்றை வேடிக்கை பார்க்கலாம்.அவர் பேசிக் கொண்டிருக்கட்டும்.

தயங்கி மெதுவா பேச ஆரம்பிச்சி எதோ ஒரு புள்ளியில அடைமழை பொழிஞ்சாத் தான் உண்மையான மனித போராளி/சுகவாசி கிட்ட பேசறோம்ன்னு அர்த்தம். அந்த மழையும் கூட மிகையுணர்ச்சி இல்லாம மண்வாசனையோட இருந்தா தான் அடுத்தமுறை பேசப் பிடிக்குது.

எனக்குத் தெரிந்த ஒரு புதுமைப் போராளி பெண்ணின் மாதவிடாய் குறித்து அத்தனை உருகிக் கொண்டிருந்தார். சிரிப்பாய் இருந்தது. தன் மனைவிக்கும் தன்னைச் சுற்றியுள்ள பெண்களுக்கும் இது பொது தான் என்றாலும் எத்தனை வலி எத்தனை துன்பமென்று முகத்துக்கு நேரே பிரசங்கிப்பதில் என்ன பயன்? வலி உணர்ந்தவர் அதை அடிக்கோடிட்டு பரிதாபப்படுவதில்லை. அத்தனை மிகைப்படுத்தலுக்கும் நன்றிப் பெருக்கேதுமில்லாமல் ‘ஹேய்! நீ என்ன சொல்ல வர்ற’ என்றேன். நான் திமிர்ப் பிடித்தவளென்றார். நன்றி சொன்னேன்.

பெண்ணுரிமை/பெண் சுதந்திரம்ன்னா என்னான்னு கேட்டாங்க. பெண் பெண்ன்னு அடிக்கடி சொல்லாம சகஜீவின்னு பேசப் பழகு. அப்புறம் உரிமை பத்தியும் சுதந்திரம் பத்தியும் பேசலாம்.

மௌனம் அழகாக இருக்கிறது. இப்போதைக்கு புறவெளிக் கிரணங்கள் எரிச்சலூட்டுகின்றன.
என் வனத்தில் சில் வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் வரத்துவங்கிவிட்டன.

நான் கவிதை பழகுகிறேன்.

வேண்டாம் மனிதர்கள்.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

மௌனம் அழகாக இருக்கிறது. இப்போதைக்கு புறவெளிக் கிரணங்கள் எரிச்சலூட்டுகின்றன.
என் வனத்தில் சில் வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் வரத்துவங்கிவிட்டன.

நான் கவிதை பழகுகிறேன்.

வேண்டாம் மனிதர்கள்.

முத்தாய்ப்பான வரிகள் கவர்கின்றன.. பாராட்டுக்கள்..!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!