Sunday, October 20, 2013

கலவையான உணர்வுகள்

*
**
ஒரு மழை நாளில், நான் பாதி நனைந்தபடியும் அந்த கர்ப்பவதி முழுக்க நனையாமலும் ஒரே குடையின் கீழ் சாலை கடந்தோம்.சாலையின் மறுபுறம் சென்றடையவும் அவளது பேரூந்து வரவும் நன்றி கூடச் சொல்லாமல் கடந்து போனாள் அந்தப் பெண். சுணங்கிப் போனது மனது. நன்றிக்கென உதவி செய்யவில்லையெனினும் நன்றிகள் பெரும்பாலும் நாகரிக பழக்கத்தின் விடைபெறும் அடையாளமாக மாறி விட்டது.

என் குடையில் வீடு வரை தனியே நனையாமல் தான் வந்தேன். எவருக்கும் நன்றி சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று இறங்கிய கணத்திலிருந்த மகிழ்வும் நிம்மதியும் தனித்த என் பயணத்தில் இல்லை. அற்புதமான அந்த கணங்களுக்காகவேணும் நன்றி சொல்லியாகவேணும் மானசீகமாக. இப்படியே நினைத்துக் கொண்டிருந்தேனா பிறகு வந்த விடியலில் வழக்கம் போல் மறந்தும் போனேன்.

காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த நாட்களில் பிஸியோதெரபிஸ்டுக்கென காத்திருக்கையில் அங்கே உதவியாளராக இருந்த முகம் பரிச்சயமானதாயிருக்கவே யோசித்துக் கொண்டிருக்கும் போதே முகமெல்லாம் சிரிப்பாக கையைப் பிடித்துக் கொண்டு ஏதோ சொல்ல வந்தவள் என் தளர்நடையில், ‘என்னாச்சு மேடம்? அடியா? காலிலயா? எங்க காட்டுங்க? என்றபடி பெரிய வயிற்றுடன் குனிந்து சரிபார்த்தாள். அதில், கடமையைத் தாண்டிய சினேகமிருந்தது.

*
**
எங்கள் தெருவில் கூர்க்காக்களே இல்லை.

நேற்றைய தினம் பத்து ரூபாய் வேண்டி நடுத்தர வயதில் ஒருவர் வந்து நின்றார்.தான் இந்த ஏரியாவின் கூர்க்கா என்றார். எப்படி நம்புவதென்று பெரிதாய் விவாதங்களை நீட்டி முழக்கிக் கொண்டிருந்தேன். எனக்கும் ஹிந்தி
தெரியுமென்று பீற்றிக் கொள்ளும் தருணங்களவை. ”ஜீ! மேடம்” என்றவாறே ஆமோதித்துக் கொண்டிருந்தார். வேலையே செய்யாது என்னை ஏமாற்றப் பார்க்கிறார். எப்படி சகிப்பது? தர முடியாதென சொல்லவா இத்தனை பேசினாய் என்பாரே! போனால் போகிறது பத்து ரூபாய் தானே? அவரிடம் ஐம்பது ரூபாய் தந்து பால் பாக்கெட் ஒன்று வாங்கி வரச் சொன்னேன். நகர்ந்ததும் தான்உறைத்தது. பத்து ரூபாயோடு போக வேண்டியது. ஐம்பது ரூபாய் தந்து ....இப்படியா இருப்பாங்க. நீ சரியான ஏமாளிடீ! பதினைந்து நிமிட இடைவெளியில் அவரைக் குறித்து ஏதும் சிந்திக்காமல் நான் ஏமாளியாகப் போகும் கணங்களை வெறுப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரின் நம்பகத்தன்மை குறித்த எனது பார்வை எப்படி சரியானவையாக இருக்க முடியும்? சற்று நேரத்திற்கெல்லாம் 17 ரூபாய் போக 33 ரூபாய் சில்லரையுடன் வந்து நின்றார். மன்னிப்பு கேட்டிருந்திருக்கலாம். எங்கேவிட்டது என்னுள்ளிருக்கும் முரட்டுக்குணம். மாறாக ஒரு பிஸ்கெட் பாக்கெட்டுடன் பத்து ரூபாய் தந்து அனுப்பினேன்.

 நல்லிரவில் கவனித்தேன் கூர்க்காவின் விசில் சத்தம். அது அவராகவும் இருக்கலாம். நம்பிக்கையுடனிருப்பதற்கும் வாழ்வில் காரணங்கள் இருக்கின்றன.

*
**

வெள்ளிக் காசுகளுக்காக காட்டிக் கொடுக்க இருப்பவனையும் மூன்று முறை தன்னைத் தெரியாதென மறுதலிக்க இருப்பவனுக்கும் சேர்த்தே தன் உடலையும் செந்நீரையும் அப்பமும் திராட்சையுமாக அந்த கடைசி விருந்தில் பந்தியிட்டார் இயேசு. அதே புன்னகையுடன் ஆரத்தழுவி உச்சி முகர்ந்து என்னை சுவாசித்து பிரிந்ததொரு நல்உறவு.

மெசியா போலில்லை.

விம்மி விம்மியழுதேன். என்னை துவேசித்து உமிழ்ந்ததற்காகவும், யாரென்றே தெரியாதென சொன்னதற்காகவும்.

யோசித்துப் பார்த்ததில் பிடிபட்டது பிழை. இடியாப்பமும் குடல் குழம்பும் பரிமாறிவிட்டேன். ஆப்பமும் திராட்சை ரசமும் உண்ணத் தந்திருந்தால் ஒரு வேளை நான் மெசியாவின் மனனிலையில் ஜீவித்திருக்கக் கூடும்.

தேற்றுதலுக்கென சப்பைக் காரணங்களுக்கா பஞ்சம் நம்மிடத்தில்...

#நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா...

*
**
நண்பர் ஒருவர்.

பைக் ஆக்சிடெண்டாகி பிழைத்ததே அதிர்ஷ்டம். அதிலும் தலையில் அடிப்பட்டதில் இன்னும் நினைவு ரீதியான பிரச்சினைகள் சரியாகவில்லை. உணவின் சுவை கூட இன்னும் விளங்கவில்லை.

’தீபாவளிக்கு ஊருக்கு போகலயா?’

’இல்லப்பா’

’ஏன்?’

’நான் பஸ்ல ஊருக்கு போயி பத்து பதினைஞ்சு வருசமாச்சு.’

’ஓ அப்ப டிரைன்லயா போறீங்க?’

’இல்ல’

’பிளைட்? உங்கூருக்கு கப்பல் ப்ளைட்லாம் போகாதே!’

’நக்கலா? நான் எங்க போனாலும் பைக்ல தான் போவேன்.’

அவருக்கு ஏதோ ஒரு கிராமம் நாகர்கோவில் பக்கத்துல. 600 கிமீ க்கு மேலேயே இருக்கும். தீபாவளி அன்னிக்கு ஊரு நினைவு வந்து ஆக்சிடெண்ட் ஆனது மறக்கக் கூடாது.

கவனமா இருங்கப்பா. இதிலெல்லாம் என்ன கெத்து வேண்டிக் கெடக்கு.. பஸ்ஸோ ட்ரைனோ பிடிச்சி போறதுக்கென்ன? டிக்கெட் கிடைக்குமா என்பது தனி.. ஆனா பயமில்லாம இருப்பமில்ல நாங்களும் ? இதுல போற போக்குல என்னையும் மெரட்டிவுட்டுறது.. இன்னிக்கு தான் இது மாதிரி டென்சன்லாம் என் தலையில ஏறும்.
*

கனவில் பயணங்கள் - 2

உன்னைத் தேடிய பயணங்களில்
நான் மடிவதுவும்
நம் காதல் பிழைத்துக் கிடப்பதும்
நித்தியப் பிழையெனினும் நீட்டித்தே
கனவு பழகுகிறேன்
நெடும்பயணத்தின் முடிவில்
இறங்கிய பேரூந்தொன்றில்
பயணச்சுமைகளேதுமற்று
மனச்சுமை தாங்கி வருகிறேன்
புது நிலம்
புது மக்கள்
புது மொழி
தென்படும் முகங்களிலெல்லாம்
தமிழே இல்லை
விரல் பிணைத்து நடந்த பாதைகளையெல்லாம்
கால்கள் புலனாய்வு செய்கின்றன
தடங்கள் எதுவும் தென்படவேயில்லை
வீடு திரும்பலுக்கென அல்லாடும் மனதை
கூடலின் கனவுகளினுள் திருப்புகின்றேன்
கடக்கும் கண்களில் சில ஏதோவொரு கொடூரத்தின்
ஞாபகம் தெளித்து மறைகின்றன
சடாரென்று மழை வருகிறது
நிழற்குடையில்லா மண் சாலையில்
மரக்குடைக்கென ஒதுங்குகிறேன்
வெட்டும் மின்னலும் உறுமும் இடியும்
‘அர்ச்சுனா’வென்று சுவாதீனமற்று
மொழிகின்றன இதழ்கள்
சூத்திரங்களேதுமில்லா சுந்தரக் கனவு போல
சக்கராயுதமேந்தி அர்ச்சுன முகத்தோடு
வில்லம்பு சகிதம் அந்நியனொருவன்....
குழம்பிய மனம் தெளியுமுன்
கழுத்தை நெருங்குகிறது சக்கராயுதம்
பிழையென்ன செய்தேன் மாதவ அர்ச்சுனனே!
குரல்வளை வெட்டி பேச்சுத் திண்றுகிறேன்
பளீரிட்ட மின்னல் வாரிக் கொண்டு போகிறது
மின்வெட்டு விடியலில் அழுத்திய சங்கிலி
நான்குமுறை யோசித்தும்
ஒன்று மட்டும் விளங்கவில்லை
அர்ச்சுனன் ஏன் மாதவன் வேடமேற்று வந்தான்?

பயணம் தொடரும்....

Wednesday, October 16, 2013

என் (கிராமத்து) வீடு


வட்டக் குடிசையிலிருந்து மச்சு வீடுயர்த்த
அண்ணனும் தம்பியும்
காடாறு மாதம் வீடாறு மாதமென
திரைகடலோடி திரவியம் சேர்த்தார்களாம்
ஒண்டக் குடிசையிலாத
கருப்பனையும் ஆண்டியையும்
உயர்த்தி அழகு பார்த்தது

உழைப்பு

வியர்வையையும் கனவையும்
விதைத்தார்கள்
அடையாளமாய் நின்றிருந்தது வீடு
பிரமாண்ட கல்வெட்டென...

தேக்குமரக் கதவுகளும்
எட்டறை தடுத்து
நடுவிலோர் முற்றமும்
முகப்பும் பந்திக்கட்டும்
வழவழக்கும் சுண்ணாம்புச் சுவரெனவும்
அட்டகாசமாயிருக்கும் என் கிராமத்து வீடு

இரட்டை மாடிகளும்
ஆனையடிக்கல் பதித்த மொட்டைமாடியும்
சீட்டிப்படி அறைகளும்
வெள்ளைக் கற்படிகளும்
சங்கு பதித்த முன்வாசலும்
உள்ளறை அலமாரிகளும்
எப்போதும் மிளிர்ந்தபடியிருக்கும்
சாமி விளக்கும்...

அப்பத்தாவும் அய்யாவும்
ஆன்மாவாய் நிறைந்தயென் வீடு

நகரத்து எலிவளைக்குள் வாழ்ந்தாலும்
கிராமத்திலென் வளை அரண்மனையென
கர்வப்பட்டுக் கொண்டிருந்தேன்
திருமணக் கனவுகளிலெல்லாம்
முற்றத்துப் பந்தலில் தான்
தாலிகட்டுவான் மாப்பிள்ளை

சித்தப்பாவின் திருமணமும்
பெரியத்தான் திருமணமும்
அக்காக்களின் திருமணமும்
பிள்ளைப்பேறுகளும்
பூப்பெய்தல்களும்
கோலாகலப் பூரிப்புகளோடு
அவ்வீடு கண்டு சிரித்திருக்கிறது

ஏகப்பட்ட காதல்களை
ஏகப்பட்ட திருமணங்களை
ஏகப்பட்ட மரணங்களை
ஏகப்பட்ட உறவின் விரிசல்களை
இன்னும் எத்தனையோ
பார்த்தபின்னும் உருக்குலையாமல்
கம்பீரமாய் தானிருந்தது

ஒவ்வொரு பொங்கலும்
ஒவ்வொரு தைப்பூசமும்
ஒவ்வொரு பங்குனி உத்திரமும்
சின்னதொரு கல்யாணம்

உறவுகள் சூழ விருந்து வைத்து
உச்சி முகர்ந்து கொண்டாடி
சீண்டிப் பேசி சிரித்து மகிழ்ந்து
இளவரசியென மிதப்பாய்
செறுக்குற்றிருந்த பொழுதுகள்

மூத்தவனை பிணமாய் கிடத்திய
அதே கிழக்கு பார்த்த
சன்னல் முற்றத்தில்
அப்பத்தாவும் அய்யாவும்
சின்னப்பத்தாக்களும்
பெரியப்பாவும் பெரியம்மாவும்
நின்று எரிந்தார்கள் தீபமாய்....

சங்கரண்ணா வீட்டை இடித்துக் கட்டுகிறான்
சேதி சொன்னான் சின்னத்தம்பி

காரணங்கள் ஆயிரம்
ஏசி பாயிண்ட் வைக்கமுடியவில்லை
வாயில்கள் தலையிடிக்கின்றன
அட்டாச்டு பாத்ரூம் இல்லை
நவீனத் தோற்றமேயில்லை
கிராமத்து சாயலிருக்கிறது
கவனிப்பாரற்று கரையான் பூத்திருக்கிறது
மனைவி மக்களுக்கான புழக்கம் போதவில்லை
தேவைகளுக்குள் சமரசமாகி சத்தமின்றி
தேய்ந்து போகின்றன எதிர்ப்புக் குரல்கள்

ஒவ்வொரு கல்லாய் கட்டிச் சேர்த்த
அப்பத்தாவின் கண்ணீர்
கைகளில் பிசுபிசுக்கிறது
அவளரற்றும் ஓசை செவி நிறைக்கிறது

அய்யா அப்பத்தா போலவே
எழுபது வயது தாண்டிய
அவ்வீடும் மரணிக்கவிருக்கிறது

இடிக்கும் சப்தமேதும் கேட்காத தொலைவிலிருக்கிறேன்
கையாலாகாத என்னிடமேன் முறையிடுகின்றன
என்வீட்டின் தெய்வங்கள்?






Tuesday, October 15, 2013

அபிசேக மழை

கலச நீர்த்துளி பட்டுத்தீர
ஆயிரம் பாவங்களோடொரு கூட்டம்
கருடனின் வரவுக்கென...

யாக தூபத்தின்
ஆகுதீ வாசம் பிடித்தபடி
நெடுநேரக் காத்திருப்புக்குப் பின்
வட்டமிட்டதொரு கருடன்

உச்சிக் கோபுரத்தில்
மாவிலை நனைத்து
அள்ளித் தெளித்தார் அர்ச்சகர்

அத்தனை தலையிலும்
வைரம் மினுங்கி
நீரானது

நவதானியங்கள் சேர்த்தடைத்த
பொன் முலாமிட்ட
ஐம்பொன் கலசங்கள்
சூரியன் பட்டுத் தகதகத்தபடியிருக்க

தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு
ஓடி வந்த மழை
அளவிலாக் கூட்டத்தை விரட்டிவிட்டு
தான் மட்டும் தழுவி
மகிழ்கிறது

கங்கைநீரை விட மழைத்தீர்த்தம்
புனிதமென நனைந்தபடி கிடக்கிறான்
தெருப் பிச்சைக்காரன்

பாவங்களற்ற அவன் மேனியினின்று
அழுக்கை கழுவிப் போகிறது மழை

Monday, October 14, 2013

நானாகவேயிருந்தால்...

யாரையோ என்னில் தேடிக்கொண்டிருந்தாய்
யாரெனக் கேட்டேன் பதிலேயில்லை
யாராயிருந்தாலுமென்ன தாயாயிருப்பதென்றானபின்?
எண்ணித் துணிந்தவொரு தேவகணத்தில்
என்னுள் நீ தேடியது யாரென்று விளங்கியது
யாராகவுமில்லாதிருந்த நீ யாரோவாக முயல்கிறாய்
பாசமிகு தாயா?
பருவம் நிறை காதலியா?
பால்யத்து சினேகிதியா?
இப்போது சொல் நான் யாருனக்கு?
எத்தனை கேட்டாலும்
எப்படி பதிலளித்தாலும்
அவளைப் பற்றிய பிரதிபலிப்புகளில்
சஞ்சலப்பட்டு
அதிர்ந்தலைவுறுகிறது
அமைதிக்கு பெயர் போனயென் ஆழ்மனம்....
அவளாகவுமில்லாமல்
உனதாகவுமில்லாமல்
நானாகவேயிருந்தால் ஏற்காதோ உன் மனம்?

காதலா!

எல்லாப் பொழுதுகளிலும் நினைவுகளாய் இருப்பதாகவும்
தனிமை அவனால் நிரம்பிக் கிடப்பதாகவும்
பிதற்றிக் கொண்டிருந்தான்
அன்றாடங்களை அச்சுப்பிசகாமல்
சொன்னபோதெல்லாம் சுவர்களிலிருக்கும்
கண்களைத் தேடிக்கொண்டிருந்தேன்
விட்டுப் பிரிதலும் விரகத் துயரும்
சாதலினும் கொடிதென்றாய்
சிற்றின்ப போகியென்று சீற்றம் கொண்டு
மூதுரை சொல்லிவைத்தேன்

கூற்றுகளையும் இளக்காரப் புன்னகைகளையும்
கிழித்தெறிவதற்கெனவே
வேடமிட்டுக் கொண்டேன்
வாட்டமிகு முகத்தை புன்னகை பூசி மறைத்தேன்
ஏக்கங்களத்தனையும் எழுத்தில் வராமல்
பார்த்துக் கொண்டேன்
நட்பின் வட்டத்தை நீயின்றி செதுக்கிக் கொண்டேன்
இனியொருமுறை எதிரில் வந்தால் காறியுமிழ்வதென
கணக்கற்ற வெறுப்பினை வளர்த்துக் கொண்டேன்
செல்பேசி அழைப்பிலெல்லாம்
இதழ்பூட்டிக் கொண்டன வார்த்தைகள்

எங்கோயிருந்த நீ இங்கே வந்துதித்த போது...
என்னையுமறியாமல்
ஏதேதோ மாற்றங்கள்

ஆம்!
முன்போல் இருட்டுக்கு பயமில்லை
பல்லிகளையும் பாசமாய் பார்க்கிறேன்
மின்வெட்டுத் தருணங்களிலெல்லாம் விதிர்த்தெழாமல்
கவிதை பேசிக் கொண்டிருக்கிறேன்
இசையை இன்னும் அதிர்ந்து உள்வாங்குகிறேன்
நேரில் பார்த்துக் கொண்டபோது
ஏன் கட்டிக் கொண்டழுதேன்?
விடாமல் நீயுமேன் விசும்பிக் கொண்டிருந்தாய்?

Saturday, October 12, 2013

துவேஷம்

துவேசத்தின் மழையின் நனையும்
எனதன்பின் நட்புகள்
சறுக்கிய இடங்களையே
கவனமாய் சேகரிக்கிறார்கள்

எழுதி வைத்தவைகளில்
சாதகமானவைகள் மட்டும்
அவரால் படிக்கப்படுகிறது
தவறாமலொரு அறிவிப்பு
என் முகவரிக்கு

நண்பர்களாய் இருந்தார்களென்று
கடந்ததில் சொல்வதில்
இரண்டு பக்கமிருக்கிறது

மகிழ்வின் கணங்களை மறுபடி ஓட்டிப்பார்ப்பது
அதன்பின்
இழைக்கப்பட்டதை நினைத்து வருந்துவது

இரண்டும் நடக்குமெனினும்
முதலாவதையே
முழுதாய் விரும்புகின்றேன்

பேரன்பில் மூழ்கிப் பயணிக்கும்
மீனாய் இருந்துவிட்டுப் போயேன்
நதியின் மீது நட்புக் கொண்டதாய்
சொல்லிக் கொண்டு
ஏன்
வலைவிரித்துக் காத்திருக்கிறாய்?
மிதப்பவைகளை வைத்துக்கொண்டு
என்ன செய்துவிடுவாய்
கரை சேரும் படகின் நகர்வே
மிஞ்சிக் கிடக்கும் நட்பின் தயவால் தான்...

Friday, October 11, 2013

அவர்கள் தோற்றுப் போன தெய்வங்கள்

தோற்றுப் போனவர்களை குடும்பமும் மறந்து போகிறது...

நினைப்பை அவரிடத்தில் இருத்தி வைக்கவே ஜெயிப்பது அவசியமாகிறது. தன்முனைப்போடு போராடும் பெண்களில் பலருக்கு பால்யத்தின் பாசமென்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தாத்தா பாட்டிகளின் அரவணைப்பில் வாழ்ந்த பேரன் பேத்திகளுக்கு அவர்களில்லாதவொரு தருணத்தில் வாழ்க்கைக்கான போராட்டமும் சேர்ந்து ஒரு வித சுமையைத் தந்துவிடுகிறது. கூட்டுக் குடும்பம், குடும்பப் பாங்கு என்றெல்லாம் பேசி வளர்த்தவர்கள் வளர்ப்பில் தனக்கென வாழாது வாழ்வைத் தொலைத்த அறிவிலிகளைத் தான் சொல்கிறேன்.


சில பல வருடங்களில் வருமானத்திறகென வரவேற்கப்படுகிறாள் அப்பெண். இவளின் வருமானம் அவசியமில்லாத போதும் இவள் குறித்த உறவினர்களின் தேவைகள் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டு விடுகின்றன. தன்னை விடவும் சின்னவர்கள் தன்னால் முன்னேறி குடும்பம் குழந்தையெனும் போது பெருமிதப்படும் மனது தனக்கென்றெதுவுமில்லாது போகுமொரு நாளில் பால்யத்தின் பாசத்திற்கென தவம் கிடக்கிறது. தன்னிறவு பெற்ற குடும்ப உறவுகளோ தனித்து விட்டுவிடுகின்றன. எத்தனை சுதந்திரமிருந்தும் தனக்கென ஒரு கூட்டிற்காக ஏங்கித் தவிக்கிறது பாழும் மனது. கூண்டில் அடைபட்ட பறவை பறந்து இரவுக்கு கூண்டுக்கு வருமாம் பழகிய தோஷத்திற்கு... நான் புறாக்களைத் தான் சொல்கிறேன்.

வீட்டிற்கென ஓடி ஓடி.. அவள் நிற்குமிடம் பெண்மையின் பலவீனங்கள் எட்டிப்பார்க்கும் அந்த வயோதிகத்தின் முன்வாசல். சமூகத்தின் பார்வையில் தன்னை நல்லவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் காட்டிக் கொள்ள அப்பெண் மீது அவமதிப்பெனும் சுமையையும் போர்த்துகிறார்கள் குடும்ப உறுப்பினர்கள். குற்றப்பெருக்கு. சுமை தாங்கி தானே! ஊமையாய் பாரம் சுமக்கும் எதிர்பார்ப்பில்லாத போராளிகள் நானறிந்த வரையில் ஆயிரம் பேர்.

சம்பாதிக்கும் பெண்.
தான் தோன்றிப் பெண்.
மனமுதிர்வான பெண்.
பொறுமையான பெண்.
அன்பான பெண்.
அடங்காப் பிடாரி பெண்.
அறிவுத் தெளிவுள்ள பெண்.

இத்தனைக்கும் பின்னர் அவள் சுமக்கும் இன்னொரு பட்டமுமிருக்கிறது....

தனித்த பெண்.

வயோதிகத்தில் இல்லாத வாலிபத்துக்கு இளப்பமும் எள்ளலும்... இவர்தம் கண் முன்னே தானே தீர்ந்தது அவள் இளமையும் வயதும். சுயநலத்துக்கென சுமை தூக்க விட்டுவிட்டு கூன் விழுந்த முதுகைப் பரிகசிக்கிறார்கள் தங்கைகளும் தம்பிகளும்....

இதெல்லாம் நடுத்தர வர்க்கத்து சாமான்ய சராசரிப் பெண்களைக் குறிப்பவை. ஒரு செக்கு மாட்டின் நகர்தலைப் போல அவர்களுக்கு வாழ்க்கை கனவுகளோடு மட்டும் முடிந்து விடுகிறது.

இதற்கிடையில் அவர்கள் பாலியல் துன்புறுத்தல்,சாதி,தற்காப்பு,மானம்,
சமூக மதிப்பென்று ஆயிரம் தீவேலிகளை அன்றாடம் கடந்தாக வேண்டும்.

இப்போது சொல்லுங்கள்!

உடலைக் கட்டிக் கொண்டழுதும் அவள் தெய்வமாகத் தெரியவில்லையா? நிர்வாண மனது வாய்த்தும் போர்த்திய உடைகளுடன் ஒரு தெய்வத்தை நீங்கள் அன்றாடம் தரிசிக்காமல் பரிகசிக்கிறீர்கள்....

உங்களால் உங்கள் ஊனக் கண்களால் தரிசிக்க இயலாது

ஆம்!

கருவறையில்லாத அவர்கள் தோற்றுப் போன தெய்வங்கள்

பொன்வண்ணக்காரிளை

நுட்பத்திற்கென செவி கூர்ந்திருக்கும் தருணம்
செம்மொழிக் கலைஞனொருவன்
மேடையேறுகிறான்
ஆன்மாவை விளக்கத் துவங்கியதும்
ஆன்மீகமா என்றவாறு பின்னுக்குச் சாய்கிறேன்
எனை வசதியாக இருத்திக் கொள்கிறதந்த
பொதுக்கூட்ட நாற்காலி
இருளின் கரங்களில் பூமி துவள்கிறது
ஒற்றை ஒளியென
அவனையே பார்ததபடியிருக்கின்றன
ஓராயிரம் கண்கள்
ஆரம்பித்த இடத்திலிருந்து
அரசியல் அன்றாடமென
அரிய சொல்லாடல்கள்
அநாயாசமாய் அள்ளித் தெளிக்கிறான்
ஆன்மக் கவிதைக்கான தேடலில்
இன்றுவரை காத்திருந்து தோற்றதாகச் சொல்கிறான்
வெளுத்த கேசம் வெண் தாடி
மாசடைந்த கண்கள்
கறுத்த உதடுகள் பேசுவதத்தனையும்
ஒளிரும் மனதின் திமிர்ந்த கருத்துக்கள்
பார்த்துக் கொண்டேயிருந்தேன்
பேசிக் கொண்டேயிருந்தான்
பெருமழையடித்த பின் சொட்டும் நீர்போல்
என்னுள் இலக்கியம் சேகரமாகியது
வெற்றுக்கால்கள் நாலுமுழ வேட்டியுடன்
மேடை விட்டிறங்கியவன்
காலில் விழ எத்தனிக்கையில்
எப்போதும் போல
தடுத்துவிட்டதென்னுள்ளிருக்கும் மிருகம்
குறைந்தபட்சம் கைகுலுக்கி
அறிமுகமேனும் நடந்தேறியிருக்கலாம்
அதுவுமின்றி ....
வெளிச்சத்தில் சிக்கினால்
நகக்கண்ணில் படிந்திருக்கும் கந்தகச் சேர்மங்கள்
எழுத்தின் வழியிறங்கி
ஏதோவொரு ஆதிக்க வர்க்கத்தை
எரியூட்டும் நிச்சயம்

சுயவிளக்கம்....

யார் கைதூக்கிவிட்டும் யாராலும் முன்னுக்கு வர முடியாது.யார் இகழ்ந்தும் காழ்ப்பில் ஒதுக்கியும் யாரையும் பின்னுக்குத் தள்ள முடியாது.
அவருக்கென்று சுயமாக திறமையோ தெளிவான அறிவோ இல்லாத வரை அவர் முன்னேற தான் மட்டுமெ காரணமென்று அலுத்துக் கொள்ளும் கூட்டம் முளைத்துக் கொண்டேயிருக்கும்.

இன்னும் சில இடங்களில், வளர்ந்து வரும் சிலர் தான் தாக்கப்படுவதாகவும் ஒடுக்கப்படுவதாகவும் தானே புரளியைக் கிளப்பி பெரிய பச்சாதாபத்தையும் கருணையும் கொண்டு தன்னை நிலை நிறுத்தத் துடிக்கிறார்கள். படுகேவலமான விளம்பர யுக்தி. ’என்னடா விளம்பரம்? அந்த சினிமாக்காரங்க தான் அப்டின்னா’ கரகாட்டக்காரன் காமெடி தான் நினைவுக்கு வருது.

இந்த நவீன இலக்கிய உலகை, இலக்கியவாதி என்கிற தகுதியில்லாமல் பொதுவான பார்வையாளராக வெகுநாட்களாக கவனித்து வருகிறேன். எனக்கெல்லாம் எழுத்தென்பது மனதில் நினைப்பதை எழுத்தாக்கும் முயற்சி. முயற்சித்துக் கொண்டேயிருக்கும் மாணவி தான் நான் இன்னும். நவீன இலக்க்கியவாதிகள் பேசித் திரியும் ஆயிரம் வரிகளில் ஒன்றிற்கு கூட அவர்கள் எழுத நினைத்த அந்த மறைபொருள் கருவை உள்வாங்குமளவு அத்தனை பெரிய அறிவுஜீவியுமில்லை. அதே சமயம் எழுத்துக்கும் நடத்தைக்கும் இம்மியளவு சம்பந்தமுமில்லாத பல ஆளுமைகளைப் பார்த்து எரிச்சலடைந்து இருக்கிறேன். தனிமனித அறம் கடைபிடித்தலென்ன அத்தனை கஷ்டமா? ’நீ வாழ அடுத்தவனைத் தூற்றாதே’ இந்தமட்டும் கூடவா கஷ்டம்?

தலித்தியம் பெரியாரிஸம் பெண்ணியம் இதெல்லாம் முன்னெடுக்கும் பெரும்பாலோர் தன் சுய விளம்பரத்துக்காக,அரைகுறை உணர்வோடு பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். மிகவும் வருத்தமான விசயம் இது. லைக்கும் கமெண்டுக்குமென இது போலான மதிப்பும் வலியுமிக்க விசயங்களை முன்னிறுத்த என்ன அவசியம் வந்தது? பிறப்பால் நீ இன்னவனென்று ஒதுக்கப்படும் ஒரு நிலையில், அவன் அட! ஏன் இப்பிறவியெடுத்தோம்ன்னு கூனிக் குறுகிப் போதல் எத்தனை வலியோடான வருத்தம். இன்னும் நடக்குது தானே... ?அதையே குத்திப் பேசி இன்னும் மிருகமாய் அலையும் பலர் பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தைப் படிக்க மறந்து வல்லுநர் ஆனார்கள் போலும். நான் கடந்த வலிமிகு விசயங்களை நிச்சயம் பதிவேன். இதற்கு சாதிச் சாயம் பூசப்பட்டாலும் உண்மை என்பதை படிப்பவர்கள் நிச்சயம் உணர முடியும். கவிதையில் பொய் சொல்லிவிடலாம். ஆனால் உரைநடையில் மிகை உணர்வு பொய் தூவல் எல்லாம் எளிதில் புரிந்திடும் தானே ... ?

இதோ இங்கே பெரியாரையும் தலித்தியத்தையும் (உயர்வாகவோ / தாழ்வாகவோ) பேசி தன்னை நிறுப்பித்துக் கொள்ளும் எவரும் அந்த கருத்துக்களையும் அவர்தம் வலியையும் உணர்ந்தாரில்லை. எங்களைப் போன்று இதன் எல்லாபடிநிலைகளிலும் வாழ வாய்ப்புக் கிடைத்தவர்களையும் மட்டமாக இந்த முகனூல் கலாச்சாரத்தில் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பது எரிச்சல் மிகுந்த வலி. இதில் புதிதாய் வந்தவர்கள் என்கிற ஹைலைட் வேறு. சங்கத் தமிழ் பேசுவதாலேயே எழுதுவதாலேயே எல்லாமும் ஏற்கனவே பதியப்பட்டதென்றும் படியெடுக்கிறோம் என்கிற சொல்லாடலும் தவறு. எனக்கும் கற்பனா சக்தி உண்டு. கொஞ்சம் எழுத வருதுன்னும் சொல்லாம்ன்னு நெனைக்கறேன். சங்கத் தமிழ் படித்த ஒருவனுக்கு தான் மட்டுமே தமிழின் சுமை தாங்கி என்கிற அனாவசிய கர்வம் இல்லாது போகும். தமிழ் நிறைவுடை மொழி. புரியாதவனுக்குத் தான் எழுத்தாளுமையென்றும் எழுதுவதாலேயே தலைக்குப் பின் சூரிய வட்டமிருக்கிறதென்கிற கனமும் இருக்கும்.

சங்கப் பாடல்களில் எல்லா உணர்வுகளிலும் தமிழன் ஊறித்திளைத்திருக்கிறான். நம் தேவைக்கேற்ப புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. ஒரு தனிமனித வாழ்வியல் சூழல் என்கிறமட்டும்.. சமூக ஏற்றத் தாழ்வு எத்தனையோ ஆண்டுக் கொடுமை. அது தவறென வாதம் புரியும் நவீனங்கள் வரவேற்கத் தக்கன. இன்னமும் ஒருவன்/ஒருத்தியின் மனநிலை சார்ந்து தானே எழுதப்படுகிறது படிப்பவருக்கும் புரிந்தும் சில நேரம் புரியாமலும்.... ஆக கடமைக்கென கவியெழுதல் அத்தனை உடன்படும் விசயமல்ல என்றாகிறது. இதே தொனியில் எழுதிக்கொண்டும் பிதற்றிக் கொண்டும்.. கடுப்பா இருக்கு. என்னையும் நான் படிக்கிற எழுத்துக்களையும் சேர்த்து தான் சொல்றேன். ஆனால் பாருங்க, நானெல்லாம் இலக்கிய வட்டத்துக்குள்ள நுழையவேயில்லை. அது என் விருப்பத் தெரிவுமல்ல. ஒளிவட்டம்,ஆசிச்சொல்,அகமலர் நிறைவாழ்வுத் தழும்பலகளென பெரிய சுயபிரசங்கமும் செய்வதில்லை.

ஆதலினால் என்னைச் சீண்டாது படிக்கவிடுங்கள். ஆயுள் முடிவதற்குள் ஆன்ம படைப்பிற்கென அவசியமிருக்கிறது.

’நான்’ எனும் திமிர்




ன்னுலகம்
பட்டாம்பூச்சிகளாலும்
மீன் தொட்டி மீன்களாலும்
குழந்தையின் கால் தடங்களாலும்
பரிமளித்து வந்தது

உலகை வெளித்தள்ளி
ஓட்டுக்குள் முடங்கியிருந்தேன்
நம்பிக்கை தந்தார்கள்
அணை கட்டுவித்த
பேரன்பின் நதியாயிருந்தேன்
பாசத்தால் உடைத்தெடுத்தார்கள்

மொழியால்
இசையால்
அன்பால்
தன்னுள் கூடுகட்டவென்று
அழைப்புகள் வேறு....

இல்லாத பிரச்சினைக்கு
இருப்பாய் எனையேன் தேர்ந்தார்
இன்றுவரை பதிலில்லை

கறுப்பு நாளிலொன்றில் 
கண்கள் திறந்து போது
புலப்பட்டதந்தக் காட்சிப்பிழை

அன்பை சந்தேகித்தோ
அதை புறகணித்தோ
பழகியிராத கண்களிலெல்லாம்
வேதனையின் காத்திரம்

மீண்டும்
முடங்கிக் கொண்டேன் கூட்டுக்குள்
இம்முறை
தீப்பிடித்து எரிகிறது
என்னுள் அடங்கமறுக்கும்
நதி!

குற்றமற்றிருப்பதாகவும்
விசாரிக்கப்படாது
தண்டனை ஏற்றதாகவும்
சொல்லிப் புலம்புகிறார்கள்
நான் விட்டுப் பிரிந்தவர்கள்....

உன்னைப் பற்றி
இன்னது சொன்னது
தானில்லையென்று
அடித்துச் சொல்கிறார்கள்
பொதுவில் பேசியவர்கள்
ஆதி யாதென அறிவேன் தானே!

புறம்பேசிகளைப் பற்றி
எப்போதும் கவலையில்லை

ஏங்கிக் கிடக்கிறாளென
ஏளனம் பேசி
என்னோடே பயணிக்கும்
கருப்பு நண்பர்களைத் தான்
துரோகிகள் என்கிறேன்

பேசித் தீர்த்திருக்கலாம்
திட்டித் தீர்த்திருக்கலாம்
இல்லை
சின்ன புறக்கணிப்பில்
துடித்திறக்கச் செய்திருக்கலாம்
எதுவுமில்லாமல்
ஏன் நட்பாய் நடிக்கிறார்கள்?

தனிமைக்குள் ஓடிவந்து
தானாய் ஒட்டிக் கொள்ளும்
நாயுருவிகளை
நட்பென்றா சொல்வது....?

யாருக்குமல்ல
எனக்கே பயந்து வாழ்பவள்
நான்!

இங்கே ‘நான்’ என்பது
சமரசங்களில்லா
நேர்மையின் கர்வம்
தீயிலிட்டாலும்
ஜொலிக்கும் வெண்சங்கின்
பவித்திரம்
ஆகச் சிறந்த பெண்மையின்
திமிர்

நான் என்றுமே
என்னுடனிருக்கும்
நான்

எவர் தூற்றியும்
எவர் இகழ்ந்தும்
எவர் உமிழ்ந்தும்

என்னோடிருப்பது
’நான்’ எனும் திமிர்
அழிவேனாகிலும்
அடங்க மறுக்குமென் சுயம்

Wednesday, October 9, 2013

உபரி

மரக்குதிரையில் பயணிக்கிறான்
குட்டி இளவரசன்
சாய்வு நாற்காலியில் மிதந்தபடியிருக்கிறார்
தாத்தா
ராஜபாட்டையில் குளம்படியும்
படகின் நீர்த் தளும்பலும்
மத்தியான மௌனத்தைக் கிழித்துவிடுகின்றன
வெற்றிலையிடித்து அதட்டி வைக்கிறாள் பாட்டி
எரிந்த சூரியன்
குளிர்ந்து நிலவாகிறது
தாத்தாவும் குழந்தையும்
தத்தம் அறையில்..
இராப்பூச்சிகளின் கூட்டத்திற்கு
பயண அனுபவங்களை
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றன
மரக்குதிரையும் நாற்காலியும்

கூழாங்கற்கள்



நதியாகிறாய்
அதில் உருளும் கல்லாகிறேன்
கூர்மழுங்கி
மென்மையாய்
வழவழத்துப் போனதன்
வருத்தங்களிருந்தது
ஆசையாய் அக்குழந்தையின்
கைசேரும் வரை...

நான் பாஸாகி விட்டேன்

”என்ன பிரச்சினைடீ. இந்த நேரத்துல.....”

“ ”

“உங்கம்மாப்பாக்குள்ள சண்டையா?”

“ம்ம்ம்”

“சமைச்சாளோ”

“இல்ல”

“தோசை வார்க்கவா?”

“வேணாம். பத்தில லைட் மட்டும் எரியட்டுமா வாத்தியாரம்மா? படிச்சிக்கறேன்”

“இதுக்கேண்டி இத்தன தயங்குற...வெறும் வயித்திலயா கெடக்க? இரு இந்தா வர்றேன்”

இரண்டு தோசையும் பொடியும்...

‘உண்ணீர் உண்ணீரென’ ஔவையின் வாக்கின்படி அத்தனை அன்பாய் கெஞ்சுவாள். விண்டு விழுங்குமுன் கண்ணீர் நிறைத்து விம்மல் வெளிப்படும். தன்மானத்தில் கூனிக் குறுகிப்போய்....

தம்பிகள் சின்னவர்கள். தூங்கிக் கொண்டிருப்பார்கள். விவரம் தெரிந்த நான் மட்டும் வேதனையோடு அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருப்பேன்.

”அழக்கூடாது. நாளைக்கு பரிட்சையில்ல.படி”

அதட்டலின் தொனியில் இருமலோடு ஒரு குரல் வீட்டுக்குள்ளிருந்து கேக்கும்.

”படி.... அதெல்லாம் பெரியவங்க புரிஞ்சு சேர்ந்துக்குவாங்க. நீ அழாம படி”. செல்லம் வாத்தியார் ஆஸ்துமா முனங்கலோடு அதட்டுவார்.

விம்மலடங்க ஒரு குவளைத் தண்ணீரை நீட்டுவாள் அந்தம்மா.

ஆசுவாசப்படுத்திக் கொண்டு, Artificial Intelligence ஐ புரட்ட ஆரம்பிப்பேன். நள்ளிரவு கடந்து மணி ஒன்றை நெருங்கும் நேரம் தலையணையோடு போர்வையும் தந்தபடி என்னருகில் வந்து படுத்துக் கொள்வாள்.

விடிகாலை நாலுமணிக்கு எழுப்பி, செய்யும் அன்றாட வேலைகளுக்கிடையில் எனக்கும் வாத்தியாரய்யாவுக்கும் சுடச்சுட பில்டர் காப்பி. தெம்பாய் இருக்கும்.

ஆறுமணியானதும் எங்கள் வீட்டின் நிலவரமறிந்தும் அம்மாவுக்கு அறிவுரை சொல்லிய பின்னர் என்னை அனுப்பி வைப்பாள்.

அழுது வீங்கிய முகத்துடன் கல்லூரிக்குள் நுழையும் போது முட்டிக் கொண்டுவரும். என்ன என்ன என்று கேட்கும் தோழிகளிடம் எதுவும் சொல்லவும் முடியாமல்.... இதோ இப்படி எழுதுகிறேனே, அன்றைக்கெல்லாம் அத்தனை ரகசியமாய் இருந்தது என் வேதனைகளும் அழுகைகளும். பரீட்சை மும்முரத்தில் தோழிகள் முட்டிக் கொண்டிருக்க என் சுணக்கமறிந்தே நெருங்கி வந்து,

‘சாப்டியா கயல்’ என்ற நண்பனின் முகம் பார்க்காமல் திரும்பும் போதே தெரிந்துவிடும் அவனுக்கு.

’ஒழுங்கா எழுதுடா! இதெல்லாம் மறந்துடும் ஒருநாள் பாரு. கவலப்படாதே!’ பெரியமனுசனாய் ஆறுதல் சொல்வான் என் வயதுக்காரன்.

மாலையில் வீடு திரும்பினால் ஏதேனும் ஒரு உறவுக்கார கும்பல் வந்திருக்கும். அம்மாவும் அப்பாவும் சண்டையை மறந்து தடபுடல் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

அந்தப் பேப்பரில் நான் பாஸாகி விட்டேன்.

இது போல் எத்தனையோ பரிட்சைகளிலும்....

நட்பாய் வாத்தியாரம்மா,வாத்தியாரய்யா, என்னுயிர் நண்பன் என்ற காரணிகள் இருந்திருக்கிறார்கள். நன்றி சொல்ல காரணமா இல்லை? உச்சி முகர்ந்து ஆனந்தப்பட அவர்கள் தானில்லை என்னுலகில்...

கணவன் இறந்த மூன்றாம் மாதத்தில் இறந்து போனாள் அந்தம்மா. தொலைதூர தேசமொன்றில் வசிக்கிறான் என் நண்பன்.

எங்கிருந்தாலும் அவர்களுக்கு என் நன்றிகள் சமர்ப்பணம்.

Tuesday, October 8, 2013

துயர்

துயரின்
கடைசிச் சொட்டும்
காய்ந்து விடும் வரை..

கண்ணீர் பெருகட்டும் விடு

தனிமையில் அரற்றி
ஓய்ந்து
நாளேட்டின் பக்கங்கள்
நிரம்பி வழிந்த பின்
அந்த உன்னத தருணத்தில்
பசியுணர்
பின் புசி!

அழாதிருத்தலும்
அதீத அழுத்தமென்றே
அறியப்படுகிறது

ஆகையினால்
கொஞ்சம் மனம் விட்டு
அழுது பார்!
நீ
அறியாத பாரம் நீங்கி
அமைதி பெறலாம் இனி!

மௌனம் உடையும் தருணம் பார்த்து...

ஆளில்லாத போது சரி
உன்னோடிருக்கும் போதுமா
அந்தரப் பட்சியோடு
மௌனம் பேச வேண்டும்?

பார்வையால் எனையளந்தது போதும்
சிமிட்டும் இமைகளும்
வலியில் துடிக்கின்றன

வார்த்தையால் எதையாவது பேசி
வருத்தாமல் எதையாவது சொல்லி
வாஞ்சை கலந்து காதல் மொழியோடு
மகிழ்வாய் கலைந்திட வேண்டுமிந்த கணங்கள்

மென்று விழுங்கியபடி
பயத்தில் நடுங்கியபடி
தலை கவிழ்ந்தபடி
எங்கோ வெறித்தபடி

பிடித்தமில்லை உன் போக்கு...

என் ஒரு கணம்
உனக்கொரு யுகம்

ஏன் இத்தனை அவஸ்தைகளோடு
என்னோடு கழிக்க விரும்புகிறாய்
வாழ்வின்
அர்த்தமிகு  கணங்களை....
சம்பிரதாயங்களில் சிக்கிடாத
சுதந்திர மனுஷி தான்
கோழையென அறிவித்திட
ஒருபோதும் துணிந்தேனில்லை

நீயே தான் ஓட்டுக்குள்
முடங்கிக் கொள்கிறாய்
ஆமையோட்டுக்குள் வசித்திருக்கவும்
சம்மதித்தாயிற்று

அதே பேரமைதி தான்

சொல்லெறிந்து
கலைக்க விரும்பவில்லை
முன்னொரு காலத்தில்
கட்டுவித்த காதல்
கனவுகளின் கூடு
நீயே கலைந்துவிடு!
அரற்றி அழுதுவிட்டு
மௌனம் பழகிக் கொள்கிறேன்
வாழ்ந்து கொண்டே சாகும்
வரமெனக்கு வேண்டாமே!

Monday, October 7, 2013

முளைவிடும் மரங்கள்

மூடிய கைகளிலிருந்து
ஒவ்வொரு விரலாய்
விடுவிக்கிறாள் மித்திரா

சின்னஞ்சிறு மரங்கள்
பத்து முளைத்திட்டதாம்

ஒரே குதூகலம்

அவள் நடக்கும் வழி தோறும்
வேடிக்கை பார்க்கவென
வரிசையில் பலநூறு மரங்கள்

கூண்டுப் பறவையின் உலகம்

தீர்ந்திடாத வாழ்க்கையில்
திகட்டும் சுவையுடன்
ருசிக்கப்படாத பக்கங்கள்
எல்லோரிடமும் இருக்கலாம்...
அதை ஏன்
காதலோடும் திருமணத்தோடு
சேர்த்து முடிச்சிடுகிறீர்கள்

அந்தக் கிராமத்து அங்கன்வாடியில்
ஆட்டிசக் குழந்தையொன்று
ஆவிபறக்க வைக்கப்பட்டிருந்த
காய்கறிச் சோற்றை
அள்ளித் தின்ன அத்தனை ஆவலாய்...
மனதின் கட்டளையை
அதன் கை செயல்படுத்தவில்லை
காரணம் கேட்டேன்
பிறப்பிலே அப்படித் தானென்றார்கள்
ஊதி ஊதி ஊட்டிவிட
உற்சாகப் பெருவெள்ளம்
அதற்கும் எனக்கும்....

இராமாயணம் வாசித்த
கொஞ்ச நேரத்திலேயே
தூங்கிவிடும் அத்தைக்கு
நானில்லாத பொழுதுகளில்
மாத்திரையின்றி
நித்திரை வருவதில்லையாம்
அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்
தனிமையின் காரணமாயிருக்கலாம்
பதிலாய் நிரப்பிவிட்டேன் வெற்றிடத்தை...

அவளில் இரண்டாம் கருவும்
சிதைவுற்றதொரு நாளில்
நகரம் தாண்டி நானிருக்குமிடம்
தேடி வந்து கதறிய தோழிக்கு
என்ன செய்தேன் நினைவேயில்லை
அதிராமல் அழைத்து வந்து வீடு சேர்த்த பின்
அவளை விடவும் அத்தனை அழுதேன்
அவளறியாமல்...

சம்பிரதாயங்களில்லாத காதல் அது
ஒரு முறை கூட
நேசிப்பை காதலை
வார்த்தைக்குள் சிக்க வைத்ததில்லை
கண்களும் உணர்வுகளும் ஒருங்கே பேசும்
பிரிந்தாலும் புலனுணரும்
என்பதே தெளிவு

எல்லாவற்றையும்
சொல்ல வேண்டுமென்ற கட்டாயமெதற்கு?
ஒரு கூண்டுப் பறவையின்
உலகத்திலும்
எண்ணிக் கொள்ள கம்பிகளுண்டு...

மரம்வெட்டி வீரர்கள்

இங்கு நூறு மரங்களிருந்தன
இருபத்தோரு மனிதர்கள்
இறந்த வருத்தத்தில்
வெட்டி வீழ்த்திவிட்டார்கள்
மனிதர்களை வெட்ட முடியாத கோபமாம்
வாழைவெட்டி வாள்வீரர்களாயிருக்கும்
பக்கவேர் பிடித்து நூறிலிருந்து
ஆயிரமாய் பெருகிய
நாங்கள்
உங்களுள் யாரையும் வெட்ட விரும்பவில்லை
கனிதந்து நிழல் தந்து
பசுமை போர்த்தி
மன்னிக்கும் மரமாய் தான் இன்னமும்....
வெட்டிய நீங்கள் மட்டுமேன்
மீந்திருக்கும் மனிதமும் சரிந்து
மிருகமாய் மாறிப் போனீர்கள்?
திரிந்த உம் முகம் சரிசெய்வதற்குள்
இன்னபிற மனிதர்களுக்கு
தலையங்கம் தைக்கிறீர்களாமே!
மரங்கள் வெக்கித் திரும்பும்
மனித முகங்கள்
நிச்சயம் உங்களுடையதாய் தானிருக்கும்!

பயமுறுத்தல்

விட்டுப் பிரிவதையே
வேடிக்கையாய்
பயமுறுத்துகின்றனர்

நான் தனித்து நடந்தே
கால்கள் ஓய்ந்தவள்
மறந்தனர் போலும்

சலசலப்புக்கெல்லாம்
நடுங்குவதாய்
நடிக்கவே அலுப்பாயிருக்கிறது

தீங்கென்பது யாதெனில்...

புழுக்கள் நெளியும்
சாக்கடை  கலந்த குடி நீர்
கொதித்தும் தீரா அசூயையுடன்
குடிக்கப் பழகியவரா நீங்கள்

நெகிழிப் பைகளுக்குள்
வாழ்க்கையை சுருட்டி
இடம்பெயரும்
அடையாளமற்றவரா நீங்கள்

பிணவாடை வீசும் மருத்துவமனைக்குள்
எலிகளோடு போராடி
உயிர்தப்பிய போராளியா நீங்கள்

சட்டைப் பையில்
காசில்லாத காரணத்தால்
உறவுகளில் எவரையேனும்
மரணத்திற்கு தாரை வார்த்த
தோற்றுப் போன மனிதரா

இத்தனைக்கும் பதில்
ஆமோதிப்பான தலையசைப்பெனில்...

மிக மிகக் கொடுமையான
ஒரு திரைப்படத்தையும்
கண்ணீர் சிந்தியேனும்
கடைசி வரை பார்த்துவிடுமளவு
பொறுமை
உங்களுக்கு பழக்கப்பட்டிருக்குமா

தெரியாது

ஆனாலும்
உங்களுக்காக போராடுவதாய்
வாய்கிழிய பேசித் திரிபவரை
கடவுளாய் கொண்டாடி
நீங்கள்
உங்கள் சந்ததிக்கும் தீங்கிழைக்கிறீர்கள்

உங்கள் தாத்தனும் அப்பனும்
உங்களுக்கிழைத்த தீங்கினைப் போலவே....

நிழலிருக்கும் என்னோடு...

என்ன பெரிதாய் கிடைத்துவிடும்
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
தூது சொல்லி
தூபம் போடுபவர்களுக்கு ..?!

மனிதர்கள் வினோதமானவர்கள்
மறைபொருள் ஏதுமில்லாதவிடத்தும்
ரகசியங்களிருப்பதாய்
போர் மூட்டி விடுகிறார்கள்

எத்தனை பாசம் தந்தாலும்
திருந்தும் வழி பாராது
நம்பிக்கைகளைச் சாம்பலாக்கிவிடுகிறதோர்
தீய நட்பு

சுட்டபோதும்
கலங்கினேனில்லை
உயிர்த்துடிப்பை சோதித்த பின்
உதிரம் குடிக்கின்றன காட்டேறிகள்

வலித்தபோதும்
கத்தினேனில்லை
கழுவேற்றி சாணம் தெளித்த பின்
வஞ்சம் தீர்க்கின்றன மானுட மிருகங்கள்

எல்லாமும்
பண்டமாற்றாகி
பணம் கொழுத்த சமூகத்தில்
கொடுத்தும் எதிர்பாராதிருப்பவன்
கவனிக்கப்பட மாட்டான் தானே!

இத்தனைக்குப் பின்னும்
இன்னுமா உலகை நம்புகிறாய்?
கேட்டபடி சிரிக்கிறான்
தற்கொலைக்கென நெடுநாளாய்
வாழ்ந்து கொண்டிருப்பவன்

அலட்டிக் கொள்ளாத
அன்புருவெல்லாம்
அத்தனை அதிசயமில்லை
அக்கம் பக்கம் பார்
அது போதும்

ஒட்டிய வயிறோடு
பரட்டைச் சிறுமியொருத்தியின்
கண்ணிறஞ்சுதலுக்கு முன்னே
இவையென்ன பெரிதா?

நடக்கிறேன்!

நிழலிருக்கும் என்னோடு....

கெஞ்சலாய் கொஞ்சம்...

மதுக்குப்பிகளில்
அடைக்கப்பட்ட போதையை
தளும்பத் தளும்ப
குவளைகளில் நிரப்பிக் கொண்டிருக்கிறாய்
நுரை பொங்கி வழியுமதன்
நாற்றத்தினூடாக
சில வசவுகளும்...
சில விளக்கங்களும்...
சில கவிதைகளும்...
எவ்வுணர்வின் தளும்புதலுக்கான
மருந்தென மதுவைத் தேர்ந்தாயோ?!
அதெல்லாம் இருக்கட்டும்
போதையோடு போதனை
செய்வதையாவது நிறுத்திவிடேன் கொஞ்சம்...

Sunday, October 6, 2013

முன்னறிதலும் பலவீனமே

இப்படியொரு சொல்லுக்கு எதிராய்
இன்ன வகைச்சொல் தான் வரும்
இந்த நடவடிக்கைக்கு
இப்படி தான் பதில் பேசும் எதிரணி
எனக்கெதிரான யுத்திகளின் நகர்த்தல்
எனக்குத் தெரிந்த
ஏதாவதொரு உபாயமாகத் தானிருக்கும்
என் படையும்
அவர் படையும்
நான் சொல்கிறபடியே போரிடுகின்றன
கூர்மதி வட்டம் தாண்டிய
அனிச்சை கொந்தளிப்புகளும் மனப்பாடம்
மூன்றாம் எதிரியின் வழி
நான்காம் உலகமும் படிகத் துவங்கியாயிற்று
ஜெயித்துக் கொண்டேயிருப்பது
அத்தனை உவப்பல்ல காண்பீர்
அவர் முகத்து உவகைக்கென
ஆங்கே தோற்பதும் கடமையாகிறது
கனத்த மனத்தின் திறப்புக்கென
கனகச்சிதமான சொற்சாவிகள்
எம் வசமிருக்கின்றன
ரகசியங்களுக்கென தனியொரு அறையில்லை
நீர்குமிழ் மேவிப் பூசியதை
நான் சொல்லாமல் எவரும் உடைத்துவிட முடியாது
கைப்பிடிக்குள் சூழலை
சிறைப்பிடித்திருப்பதும் எரிச்சலூட்டுகிறது
ஆச்சர்யங்களும் பிரம்மிப்புகளும்
ஏமாற்றமும் எதிர்பாராதவையுமின்றி
என்ன வாழ்க்கையிது
நத்தைக் கூட்டுக்குள் மூழ்கிவிட்டு
சமுத்திரம் படித்ததாய் சத்தமிடுவது?
எதையும் மதித்திடாத ஆணவத் திமிருக்குத் தீனியாய்
எத்தனை படித்தாலும்
நெடுநேரம் குழந்தையாய் வைத்திருப்பதில்லை
பிறகென்ன வாசிப்பு
மீண்டெழும் எல்லாவுணர்ச்சிக்குப் பின்னும்
எள்ளின் நுனியளவேயாயினும்
குழந்தையாகிச் சிரிப்பேனாகில்....
அன்று பேசலாம் வாருங்கள்
ஆகச் சிறந்த படைப்பின் பெருஞ்சீற்றத்தை...

துறவி

சலனமுற்று நகரும் நதியுள் கால் நனைக்கிறேன்
என் வரவின் ஆச்சர்யங்களற்று
அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது
ஏதோ புரிந்தது
நனைந்த பாதங்களின் ஈரத்தை
காற்றும் வெயிலும் உறிஞ்சித் தீர்க்கின்றன
தனலா தண்மையா
எதற்குமசையாமல் நடக்கப் பழகுகிறேன்
துறவியென்பது செவிப்பறை சேர்கிறது
துள்ளியெழுந்து
மிகைப்புனைவை போர்த்திக் கொள்கிறேன்
நாணமும் பயிர்ப்பும்
அலங்காரமாய் ஒட்டிக் கொள்கின்றன
எவருமில்லை
நானே தான் இதற்கெல்லாம் காரணம்
இன்னமும் தீர்ந்திடாத இளமையோடெல்லாம்
துறவறம் பூணுதல் அத்தனை அழகல்ல

வகைமையேது?

எழுதிப் போவென
அடம்பிடித்தே
ஆத்திரப்படுத்துகின்றன
அடங்காத வார்த்தைகள்

காந்தியோ
ஏசுவோ
புத்தனோ

இப்படியொரு உந்துதலிருக்கும் வரை
எவராயிருந்தாலும்
எழுதுவாராயிருக்கும்

தீவிர இலக்கியச் செங்கோல்
தரித்தபடி
கவி சொல்லக் கட்டளையிடுகிறான்
பரிமேலொருவன்

விலங்குகள் பூட்டி
பெண்ணெனப் பெயரிட்டபின்
புலம்பவும்
கொதிக்கவும்
அழுகவும் முடிகிறதேயொழிய
காத்திரமாய்
வார்த்தைகளை
எப்படி வரிசைப்படுத்துவது?

ஞானி

திறவாத கதவின் முன்
தீவிரப் பிரச்சாரம்
செய்கிறீர்கள்

பூட்டப்பட்டிருப்பதாய் நீங்கள்
சொல்கிற கதவின்
மறுபுறத்தில்
தன்னோடு தானே பேசித் திரிகிறான்
ஞானியொருவன்

Saturday, October 5, 2013

இப்படியாகத் தான்....

மனநோய்க்கான ஒட்டுமொத்த மருந்துகளுடன்
செவிலியுடையணிந்த
மருத்துவர்கள் கதவு தட்டுகிறார்கள்

தெளிவாயிருப்பதாய் சொல்கிறேன்

எல்லா பைத்தியங்களும்
இதுபோல் தான் சொல்லுமென்ற
இளக்காரத்தை இதழிடையில்
உடுத்திக் கொள்கிறார்கள்

சிரிஞ்சுகளில் உறிஞ்சப்படும்
மருந்தின் நிறம்
ஏதேதோ கலவைகளாய்...

அதனழகை ரசித்து
அந்தாதி பாடுகிறேன்
ஆமோதிப்பாய் தலையசைத்து
பலவந்தமாய் படுக்கையில் கிடத்துகிறார்கள்

பயங்கரமான அலறலோடு
பகற்கனவு முடிவுக்கு வருகிறது

எவர் செவி கிடைக்குமென்ற
ஏக்கத் தேடலின் தோல்வி
ஒரு கவிதையில் முடிகிறது....

Friday, October 4, 2013

கதை கேட்கலாம் வாங்க!

அவனைக் காதலித்தால்
செத்துவிடுவேனென்றாள்
அம்மா!
அப்போது அவர்களிருவருக்கும்
நிச்சயம் முடிந்திருந்தது...
அவளைக் கரம் பிடித்தால்
கருகிவிடுவேனென்றாள்
அவனின் அம்மா!
அத்தைகளும் சித்திகளும்
முறுக்கிக் கொண்டிருந்தார்கள்
பெரியம்மாக்களும்
இன்ன பிற பெரிசுகளும்
தத்தம் வஞ்சத்தை இவர்தம் வாழ்க்கையில்
தீர்த்துக் கொண்டார்கள்
வணங்காமுடி அப்பாவுக்கு
அவர்கள் தரும் தண்டனையாம்
வீட்டுக்கு அடங்கியவன் தானே
விட்டு விலகிப் போனான்
திருமணத்தில் மணப்பெண் மாறிப்போனாள்
செழுமையான பணத்தோடும்
சீர்வகை கார் பங்களாவோடும்...
வந்தவளை வாழ்த்த அம்மாவும் போயிருந்தாளாம்
திருமணப் புகைப்படங்களில் பார்த்தேன்
கம்பீரமாய் இருந்தான் மாப்பிள்ளை
காதலைக் கட்டிக் கொண்டு
கண்ணீரோடு வாழ்த்தியபடி ஒரு ஜீவன்
குடும்ப அரசியலில்
எல்லோரும் வேட்பாளர்கள்
எல்லோரும் பதவியேற்கிறார்கள்
நாதியற்றவர்கள் மட்டும்
பாதிக்கப்பட்டும் பாரம் சுமக்கிறார்கள்
அம்மாவும்
ஆச்சியும்
அவனும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
நித்தமும் இங்கொருத்தி செத்துக் கொண்டிருக்கிறாள்
ஆண்டுகள் கடந்தும் அவனோடு சேர்த்திணைத்து...
இன்னமும் உலவிக் கொண்டிருக்கின்றன வதந்திகள்
கிண்டலாய் நக்கலாய் எகத்தாளமாய்
நலம் விசாரிக்கும் எல்லோருக்குமிது
பொது அறிவிப்பு
அவளுலகில் அவனுலகில்...
அவனுமில்லை அவளுலகில்...
இருவேறு பாதைகள் பிரிந்து நெடுங்காலமாயிற்று
இதில் வரும் ’அவள்’ போல்
யாரிருந்தாலும்
உரிமையாய் இரண்டு விசயம்...
”முதுகெலும்பிலிகளை காதலிக்காதீர்கள்!”
“முடங்கிக் கிடக்காதீர்கள்! உலகம் பெரிது!”

யாருக்கோ...

கதைகளேயில்லை என்னிடம்
தேடி வந்த நீங்கள்
அலுத்துக் கொள்கிறீர்கள்!
அன்றொரு நாள்
அதிகாலையில்
சாகசமும் போராட்டமும்
நிறைந்தவொரு கதைக்களத்தில்
உங்களுக்கொரு வாய்ப்பிருந்தது
கௌரவ வேடமோ
கதாநாயகனோடதோ...
பங்களிப்பைப் பொறுத்து உருமாறியிருக்கலாம்
நீங்களோ
அலைபேசியை அணைத்துவிட்டிருந்தீர்கள்
போகட்டும்
பெருமையாய் சொல்லிக் கொள்ள
எனக்கொரு
தோற்றுப் போன பாத்திரம் கிடைத்தது...

Thursday, October 3, 2013

காடு

ஆகுளி பறையிசைத்து
முழவு கொட்டி
கொம்பூதி
அதிர்ந்தபடியிருக்கிறது
வளம் சூழ் தருக்க வனம்
முழுநிலவுக் கொண்டாட்டம்
வனக்காளி எழுந்தருளக் கூடும்

நேற்றைய மழைக்கு பிறந்து
இன்றிரவில் சிறகுதிர்த்த
கரும் ஈசல் போராளிகள்
மின்மினிப் பூச்சிகளின் திடீர் ஒளிர்வுகள்
கிணையதிர்ந்து பேரமைதி காடதிர
குலவிக் கொண்டிருக்கும் அன்றில் பறவைகள்
இணை பிரிந்து இமை மரித்தன
தூப நடனத்தில் வெளிக்கிளம்பும் வனதேவதைகள்
வேட்டையை விஞ்சிய அதகளம்
சன்னதக் கூப்பாடுகளில்
பிய்ந்து தொங்கும் வார்த்தைகள்
வந்து விழ முந்தி ஏந்தி நிற்கும்
தளர்முலை தாய்க்குலத்தார்
அவர்தம் ஆள்படையென அதிர்ஷ்ட மயக்கத்தில்....

சீறியாழ் கூட்டமொன்று
கோடாரி கையோடு செந்தீப்பந்தமேந்திய
குரலொருமித்து மௌனம் கிழித்த வானதிர்வில்
முயல்களும் பன்றிகளும் ஒரே பாதையிலோடுகின்றன
முன்னேற்பாட்டு வலைகளில்
வசமாய் சிக்கிய வேட்டையிலொரு பங்கு
வெளிக் கிளப்பிய வனதேவதைக்கு...
அந்நிய முதலாளிகளின் சந்தனக்காப்பு

கழுத்தறுபடுமுன் முயல் சிந்திய சாபத்தில்
உறுத்தும் அறத்தின்படி
காடு விட்டு நகரமேகியது
ஆதி தெய்வம்

அவளில்லை பலியுமில்லை
கறைகழுவப்பட்ட பீடங்களில்
சுகித்துக் கிடக்கிறது அப்பெருவனம்

திணை ஆறு


*

நினைத்த மாத்திரத்தில்
அன்பால் நெருங்கிவிடும்
சாத்தியக் கனவு நீ!
புனலாடி பெருமகிழ்வு
திண்புயக் பெருங்காவல்
நுதல் நனைக்கும்
மென்சூட்டு மான்முத்தம்

**

கார்மேகத் தோகையோடு
மழையாடும் நடனத்தில்
நானிசைக்கும்
ஆம்பல் பண் நீ!

***

குரலினிமையில் சொக்கிக் கிறங்கும்
அஞ்சிறைத் தும்பி நான்
கிங்கர கீதமிசைத்தபடியிரு!
பயமின்றி துஞ்சட்டுமென் இமைகள்
நூற்றாண்டுக் கவலை மறந்து....

****

கொந்தளிக்கும் கடலுள்
சறுக்கிக் கொண்டோடும்
அலைவிசைப் பலகையென
துவளும் பணைத்தோளேந்தி எழுதிவிடு
இன்னுமொரு காமுறு கவி!

*****

எல்லாமும் நீ என்றானபின்
என்னுள் எதாவது மிச்சமிருக்கிறதா
எனக்கே எனக்கென்று...
அதீதம் தான்
ஆனாலும் இனிக்கிறது
தாழற்று ததும்பும்
நின் தரணிப் பெருங்காதல்

*******

கொட்டும் பறையதிர
விட்டெழும்பும் தூளிப்படலமென
இதழ் சிவக்கும் முத்தப்பறை
மீட்டி யெழுப்பட்டும்
அழுந்தக்கட்டிய பெண்மையின்
அந்தரக் கனவுறை
யாழின் நரம்புகளை...

*********

Wednesday, October 2, 2013

கனவில் பயணங்கள் -1

உயிர் உறிஞ்சி உடல் துப்புகிறாய்
எந்தக் கனவில் தொலைந்தாய்
இமைமூடி பொழுது புலருமிந்த
நித்திரை விளையாட்டுக்களனைத்தும்
நேற்றைய நம்மைத் தேடிக் கண்டடையவே

ஆழ்மனதை எழுத்தில் பேசுவதின்
சிரமம் என்ன தெரியுமா?
படிப்பவரெல்லாம் எனக்காக கண்ணீர்
சிந்துவார்கள்
அதிலே சிலருன் பாத்திரமேற்று
நிகழ்வில் வலம்வர ஒப்புதல் வேண்டியும்
பாத்திரப் படைப்பின் பின்புலம்
தானென்று தர்க்கமிட்டும் வருகிறார்கள்

போகட்டும்
நேற்றைய கனவில்
உன்னைத் தேடியொரு ரயில்பயணம்
ஓட்டைப்பல் சிறுமியொருத்தி
சினேகமாய் வந்தென் பெயர் கேட்கிறாள்
கன்னம் கிள்ளியபடி சொல்கிறேன்
மாராப்புக்குள் மறைந்தும் தெரியும்
திருமதியென்பதன் அடையாளம்
எதிர்வரிசையிலொரு மூதாட்டி
பார்த்தபின்னும் கேட்கிறாள்
பெருமிதமாய் பதில் சொல்கிறேன்
பெரியவர்கள் மௌனத்தால் ஒதுக்குகிறார்கள்
குழந்தைகள் கரையொதுங்கிய
சிப்பியைத் தான் தீண்டுவார்கள்
முத்துக்களற்றிருப்பதன் கவலையேதுமில்லை
வலைவிரித்து மீன் பிடிக்கவும் தேவையற்ற மனம்
பயணத்தில் நீயும் உடன் இருந்திருக்கலாம்
பல்லழகியும் அவள் பசுந்தமிழும்....
கதை சொல்லி மடியிருத்தி போக்குக் காட்டி
அந்தப் பயணத்தை நீடித்தபடியிருந்தேன்
பார்!
வெண்ணுரை பெருக்கி நீலக்கடல்
தூரத்தே சப்தமிடுகிறது

அலையோசைக்கு யார்
அலார மணியோசையை
பிண்ணனி சேர்த்தது...?

[விடியல் -1]

கவிக்கோர்வை - 19

****

எனக்கான கேள்வியொன்றை
கேட்டுவிடு பார்க்கலாம்
அதற்கான
ஆகச் சிறந்த பதிலை
நிச்சயம் தருவேன்

***
கண்ணாடியால் சூழப்பட்ட அறையில்
தான் வசிக்கிறேன்
ஆக
முதுகில் கண் இருப்பது
அவசியமற்று போனது

***

உமையொரு பாகமென்று பாடாதீர்கள்
கவிஞர்களே!
அவளுள் சிவனொரு பாகமென்று
பாடிப் பழகுங்கள்

****

இவர் சொன்னார்
அவர் சொன்னார்
அதையே/இதையும்/எதையோ சொன்னார்
இதுவரை
எவரும்
உண்மை சொன்னதில்லை

****

கிட்டத் தெரியும் தட்டான்களும்
தூரத் தெரியும் விமானங்களும்
ஒரே மாதிரியான
ஆச்சரியங்கள் தான் குழந்தைகளுக்கு....

****

நிமிடத்திற்கு நிமிடம்
மாறிக் கொண்டிருக்கிறேன்
சோப்புக் குமிழி போல் படர்ந்த
வண்ணங்களை வேடிக்கை பார்க்கிறாய்
பரிணாமங்களில் ஒன்றைத் தான்
திரும்பத்திரும்ப சொல்லியாக வேண்டும்
நானும் கூட
நிலையற்றவள் தான்

****

மன்னித்துவிடு!
கதவு தட்டாமல் அறை நுழைந்துவிட்டேன்
சம்பிரதாயத்திற்கென வெளியேறி
அனுமதியோடு மீண்டும் வருகிறேன்
அன்றேனும்
சிரித்தபடி உபசரி பார்க்கலாம்!

****

Tuesday, October 1, 2013

ஆகையினால்...

யானை ந்னா கம்பீரமா தான் இருக்கணும். அதால கூனிக் குறுகி உறுத்தலோட இருக்க முடியாது/கூடாது. அந்தப் பெரும் யானையின் கம்பீரத்தின் மீது காதல் கொண்டவள் நான். என்றாவதொரு நாள் அது சில்லறைகளுக்குள் தொலைந்த இருட்டின் வடிவமென்று உணர்ந்தேனாகில் சுக்கல் சுக்கலாய் சிதைந்து போவேன்.

ஆக, யானை என் பொருட்டும் அதன் கம்பீரத்தை காப்பாற்றுவது கடமையாகிறது.

ஏன் சூழ்நிலையின் பிடியில் சுயமழிந்து போகிறார்கள்.

சாதாரணனில்லை என்பது தான் பொய்யா? ஒரே குழப்பமா இருக்கு.

உரையாடும் மனிதர்களைத் தான் சொல்கிறேன்.  போலிகளைக் கண்டால் பற்றிக் கொண்டுவருகிறது.

அரசியல்வாதியோ இலக்கியவாதியோ பேசிட்டிருக்கும் போது பதில் சொல்ல நேரமெடுத்துட்டேருந்தா இன்னும் புதுசா ஒரு கதை சொல்ல டைம் எடுக்கறாங்கன்னு அர்த்தம். இல்ல இடைச்செருகலா ஏதோ சொருகி பேச்சு திசைமாறும் வாய்ப்புண்டு. ஆனா டைமிங் சென்ஸ்ல சிக்ஸர் அடிச்சா ‘வாவ்’ ஒரு ஆச்சர்ய கைதட்டல் நிச்சயமுண்டு.

மடைதிறந்த வெள்ளம் போல யாரையும் பேசவிடாம தானே பேசிட்டு இருந்தா நல்லா ஹோம்வொர்க் பண்ணி மனப்பாடம் பண்ணிட்டு வந்திருக்காங்கன்னு அர்த்தம். பாவம் பார்த்து, காதை மூடி அவருக்கு பின்னாலிருப்பவற்றை வேடிக்கை பார்க்கலாம்.அவர் பேசிக் கொண்டிருக்கட்டும்.

தயங்கி மெதுவா பேச ஆரம்பிச்சி எதோ ஒரு புள்ளியில அடைமழை பொழிஞ்சாத் தான் உண்மையான மனித போராளி/சுகவாசி கிட்ட பேசறோம்ன்னு அர்த்தம். அந்த மழையும் கூட மிகையுணர்ச்சி இல்லாம மண்வாசனையோட இருந்தா தான் அடுத்தமுறை பேசப் பிடிக்குது.

எனக்குத் தெரிந்த ஒரு புதுமைப் போராளி பெண்ணின் மாதவிடாய் குறித்து அத்தனை உருகிக் கொண்டிருந்தார். சிரிப்பாய் இருந்தது. தன் மனைவிக்கும் தன்னைச் சுற்றியுள்ள பெண்களுக்கும் இது பொது தான் என்றாலும் எத்தனை வலி எத்தனை துன்பமென்று முகத்துக்கு நேரே பிரசங்கிப்பதில் என்ன பயன்? வலி உணர்ந்தவர் அதை அடிக்கோடிட்டு பரிதாபப்படுவதில்லை. அத்தனை மிகைப்படுத்தலுக்கும் நன்றிப் பெருக்கேதுமில்லாமல் ‘ஹேய்! நீ என்ன சொல்ல வர்ற’ என்றேன். நான் திமிர்ப் பிடித்தவளென்றார். நன்றி சொன்னேன்.

பெண்ணுரிமை/பெண் சுதந்திரம்ன்னா என்னான்னு கேட்டாங்க. பெண் பெண்ன்னு அடிக்கடி சொல்லாம சகஜீவின்னு பேசப் பழகு. அப்புறம் உரிமை பத்தியும் சுதந்திரம் பத்தியும் பேசலாம்.

மௌனம் அழகாக இருக்கிறது. இப்போதைக்கு புறவெளிக் கிரணங்கள் எரிச்சலூட்டுகின்றன.
என் வனத்தில் சில் வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் வரத்துவங்கிவிட்டன.

நான் கவிதை பழகுகிறேன்.

வேண்டாம் மனிதர்கள்.

ம்ம் மனிதர்கள்

வேவு பார்க்கவென்றே சில புறாக்கள்
பூங்கொத்து சுமந்து வருகின்றன
வந்தவையெல்லாம் வருத்தத்துடன் திரும்பாமலிருக்க
நானிருக்கும் வேதனைகளைச் சொல்லிப் புலம்புகிறேன்
அய்யோ பாவமென
’உச்’சுக்கொட்டி உற்சாகமடைகின்றன
பேரன்பின் நதி நான்
மிதக்கும் கவலைகளில் புரிந்து கொள்
நான் அத்தனை அடர்த்தியானவள்
வெளிச்சங்கள் நடமிடும்
கருமிருட்டுக் காட்டுக்குள்
தேடிக் களைத்திடுமுனக்கு
ஆச்சர்யங்கள் இன்னுமிருக்கிறது....
ஆசுவாசம் கொள்!
இந்த இரவு விடியட்டும்

செயல் பிறழ்வு

பிருஷ்ட பீடம்
விம்மிய கொங்கைகள்
குழிந்த கொப்பூழ்
மலிந்த புனிதமாய்
யோனி இதழ்கள்
இவை மறைக்கப் போர்த்திய உடை தான்
உன் வரைவில் பெண்ணெனில்
நீ
இன்னும் பிணத்தைத் தான்
புணர்ந்து கொண்டிருக்கிறாய்
பிள்ளைமை தாங்கி
நிர்வாண மனத்தோடொரு
உயிர் ஏங்கிக் கிடக்கிறது
மாராப்பு மீறி வீசும்
முலைப்பால் கவிச்சி..
கவனித்துப் பார்
அவளுன் தாயாகவுமிருக்கலாம்
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!