Wednesday, February 15, 2012

தடுமாற்றம்


இடது கண் துடித்துக் கொண்டிருக்கிறது
சகுனம் சரியில்லையென்றாள் ஒருத்தி
சத்துக் குறைவென்றாள் இன்னொருத்தி
’தூங்கினால் தானே’ அலுத்துக் கொண்டாள்
மற்றொருத்தி!
’கண்ணுக்கு மூக்குக் கண்ணாடியிடு’
சிரிப்பலைகள் பரவி ஓய்ந்தன.

தோழிகளின் சீண்டல்களைப் போலவே
நிற்காமல் துடித்துக் கொண்டிருக்கிறது
தாழிடாமலும்
முற்றிலும் திறந்திடாமலும்
காற்றில் அல்லாடும் கதவுபோல
இமைகளோடு இடது கண்!

அதே லயத்தில்
பார்வையில் பருகிய உன்னை
பத்திரப்படுத்தவா வேண்டாமா
பதறிக் கொண்டிருக்கிறது இதயம்

Monday, February 6, 2012

நிரம்பியவை


கோடிட்ட இடங்களில் 
வசதிப்படி வந்தமர்கின்றன 
வார்த்தைகள்
முழுமையடைகிறது 
வாக்கியம்!
அதற்குள்
அனேகமுறை 
நிரப்பி 
அழித்து 
களைத்துவிட்டது 
மனம்

Sunday, February 5, 2012

கவித்துளி

கவிதை சொல்வதை
கைத்தொழிலாய் கொண்டால்
உணர்வோடு உயிர்ப்பும்
போகக்கூடும்

வெறும் சொற்களின்
கூட்டமாய் கவிதை - அதில்
உவப்பில்லை எனக்கு!

நடப்பில் செரிக்கவியலாதவற்றை
எழுத்தில் சொல்லி
உயிர் கொண்டெழுகிறேன்
வடிகாலாய் கவிதைகள்!

சில மனங்கள்
நனையக்கூடும்

சூழ்நிலை சார்ந்து
ஏதேனும் ஒருதுளியேனும்
கடல் சேரலாம்
அதனதன் படைப்பின்
காரணத்தை தாங்கியபடி!



மொக்கவிழ்ந்த நொடி


ஒரு கோடைகால ஞாயிறு
வெயில் தகித்த மணல்
வெற்றுக் கால்கள்
வெம்மையின் வேதனை
கைகள் காலணித் தரித்திருந்தன!

நடந்து கொண்டிருந்தோம்
நிறையப் பேச வேண்டியிருந்தது
எதில் தொடங்குவது என்பதில்
வார்த்தைகள் சிக்கியிருந்தன

சொல்லிவிட்டால் என்னுடல்
சுவாசிக்கக் கூடும் - இருப்பினும்
கேட்கத் துணிவில்லை
செவிகளுக்கு!

பீடிகைகளில் புரிந்திருந்தது
ஏனோ  வார்த்தைகளில்
வசமாகவில்லை!

முழுதாக ஒரு மணிநேரம்
செலவிடப்பட்ட வினாடிகள்
எங்களைக் கேலி செய்தபடி...

உப்பு நிறைந்த நீர்
கல் மனதை
கரைத்துப் போயிருந்தது

கணிச இடைவெளியில்
மனங்கள தழுவிக்கொண்டிருந்தன

“நேரமாச்சு மாமா போகலாமா..?”
பொறுமையிழந்தேன்

“ம்ம்”
அமர்த்தலாய் ...

அமைதியாகத் திரும்பினோம்
சொல்லிக் கொள்ளவேயில்லை

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
மோதிக் கொள்ளும் ஆபத்தில்

“ஆயுசுக்கும் வாழணும்டி உங்கூட”

மௌனம் உடைத்த
அவன் குரல் தழுதழுத்தது!
நினைவுச் சுரங்கத்தில்...
இன்னும்
பசுமை மாறாமல்
என்னுள் காதல்
மொக்கவிழ்ந்த நொடி!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!