Saturday, December 26, 2009

பல மாதங்களுக்கு பிறகு, மீண்டும் வலையுலகம் பக்கம்!

வாசித்து செல்லலாம் என தொடங்கியதில், கலவையான அனுபவங்கள்! மனதை தொட்ட சில இடுகைகளில் முதன்மையான இரண்டு,

1.செந்த‌ழ‌லாரின் கார்த்திக் அம்மா
2.க‌ல‌க‌ல‌ப்பிரியாவின் திலிப‌னின் நினைவு கூற‌ல்

பொதுவாக‌,சோக‌மான‌ நிக‌ழ்வுக‌ள் ம‌ன‌தில் ப‌திவ‌தோடு அல்லாம‌ல் சொல்ல‌ப்ப‌டும் ந‌ப‌ரின் பாதிப்பின் அள‌வு ந‌ம‌க்குள் ப‌திவ‌து த‌விர்க்க‌ இய‌லாத‌ ஒன்று. செந்த‌ழ‌லாரின் இடுகை ப‌டித்த‌ பிற‌கு, கார்த்திக் அம்மாவைப் ப‌ற்றி விஜ‌ய‌ ந‌க‌ர‌ம் வ‌லைப்ப‌திவில் தெரிந்து கொண்டேன்! ‌முன்னிர‌வில் ப‌டிக்க‌ ஆர‌ம்பித்தேன்! விடியும் வ‌ரை விடாது தொட‌ர்ந்தேன்! காலப் ப‌ருந்திட‌ம் தோற்றுப்போன‌ ஒரு கோழியின் ப‌ரித‌விப்பு க‌ண்டேன் அவ‌ரிட‌ம்!ம‌டிந்த‌து எப்ப‌டி மீளும்? அறிவாளிக‌ள் கேட்க‌ கூடும்! நேர்ம‌றையான‌ எண்ண‌ங்க‌ளுக்கு இட‌ம் தராதீர்! ம‌னவ‌ள‌‌மிக்க‌வ‌ர்க‌ள் சொல்ல‌க்கூடும்! தாய்மையின் த‌விப்பு யாதென‌ எவ‌ருக்கு புரியும்? இவ‌ருக்கு ம‌ற‌தி எனும் வ‌ர‌த்தை கட‌வுள் அருளக் கூடாதா?
வேத‌னையோடு என‌க்குள்ளும் எழுந்து ம‌டியும் சில‌ க‌ச‌ப்பான‌ நினைவுக‌ளுக்கு முற்று புள்ளியிடும் முய‌ற்சியாக‌ க‌ல‌க‌ல‌ப்பிரியாவிட‌ம் போனால் க‌ல‌க‌ல‌ப்புக்கு ப‌தில் க‌ண்ணீர‌ஞ்ச‌லி.அமில‌த்தில் மிதக்கும் அஹிம்சை காந்தி. அர‌க்க‌னிட‌ம் அஹிம்சை கேட்டால் அவ‌னின் ப‌தில் ம‌ரியாதை!உண்ணா விர‌த‌மிருந்து உயிர் துற‌ந்த‌ ஒரு கொள்கை வீரனின் உட‌ல் அமில‌தின் ஆளுமையிலா?இதுவரை எனக்கு தெரியாத செய்தி!க‌ட்டுக்க‌ட‌ங்காத‌ கண்ணீர்.ஈழத்தில் தீவிர வாதம் தவறெனச் சொல்லும் ஒரு சாரார் உணரட்டும் கொளகைகள் எதிரியின் ப‌ண்பாட்டை பொருத்தமட்டில் வெற்றி பெறும்! உத்தம தியாகியின் நினைவு நாள்.எப்ப‌டி ம‌ற‌ந்தோம்? த‌மிழ‌னின் மற‌தி சில‌ நேரங்களில் சாப‌ம். சில‌ அர‌சிய‌ல் முத‌லைக‌ளின் அடித்த‌ள‌மிது!

எதுவாகிலும் ப‌திவுல‌க‌ம் ந‌ல்ல‌ ஆரோக்கிய‌மானதொரு ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌ம்! நானும் அதில் அட‌க்க‌ம் என்ப‌தில் ம‌கிழ்வே!!ப‌கிர்தலும் புரித‌லும் இய‌ல்பாய் ...

Sunday, September 27, 2009

மூப்பெய்திய கவிதைகள்

கன்னித் தமிழுக்கு
களங்கம் அழித்துவிடு
தலைப்பை!

நில் மனச்சாட்சி!

இப்படி சொல்வோரும்
உளரேயெனும் கருத்தறிவித்தலிது!

அமைதி காக்க‌!

சாதி ஒழியவும்
சுதந்திரம் பேணவும்
சமூகம் மாறவும்
பாடின இறவா கவிகள்
எல்லாமும்
பழுதாய் போன‌தாம்!

வர்க்க பேதம்
மொழியியல் கூற்று
பொருளாதார‌ சம‌ச்சீர்
இப்படி எல்லாம் சொன்னால்?
இல்லவே இல்லை
நீ முன்னேற வழியேயில்லை!
சில‌ பதிவுலக பெருந்தகைகள்
பரிந்துரைத்த ப‌டைப்பு வரையறை!

எண்ணிக்கையிலடங்கும்
சிலபல வார்த்தைகள்
ந‌ம் மொழி பிற‌ மொழி
இழைய‌ இழைய‌
காத‌ல் க‌ல‌ந்த‌ காமம்
கூடவே
எதுகையும் மோனையும்,
ம்ம்! இப்ப‌டி இருக்க‌னும்
க‌விதை ப‌க்குவ‌ம்!

க‌வ‌னிக்க!
மேற்படி
க‌விதை ச‌மைத்த‌லில்
க‌ருத்தே இல்லை


எப்ப‌டிச் சொல்ல‌?
புதிய‌ன‌ புகுத‌ல்
ந‌ல‌மேயாயினும்
பழையன‌ அழித்த‌ல்
ந‌ல‌மா?

பொட்டி தட்டி
பிழைப்ப‌து எம்மொழியில்?
அடுத்த‌ கேள்வி!
என் நிலை
விரக்தியோடு நகைப்புக்குரியது
பிழைப்பு வாழ்வுக்காக
பிழைப்பே வாழ்வ‌ல்ல‌வே

அடுத்த‌ மொழியை
அழிப்பதோ தவிர்ப்பதோவல்ல
என் வாத‌ம்
த‌மிழ‌ருக்குள்ளாவ‌து எ‌ம் மொழி
த‌ழைக்க‌ட்டுமே

இடுகையோ ம‌றுமொழியோ
இய‌ன்ற‌வ‌ரை த‌மிழில்
முய‌லுங்க‌ளேன்
த‌மிழ‌னே த‌மிழை
த‌ள்ளி வைத்தால்......

அப்பத்தா! - ப‌ட‌ல‌ம் 3


அழகி க‌ல்யாணம் சீரும் சிறப்புமா நடந்தேறிச்சு. பந்தி முடிஞ்ச கையோட அம்மான் மக்க எல்லோரும் சொல்லாம கொள்ளாம வண்டியேறி போயிட்டாக. மனசு நெறஞ்ச கவலையோடவும் கண்ணு கொள்ளாத கண்ணீரோடவும். புதுப்பொண்ணு அம்மான் வீட்ட விட்டு கெளம்புறா. நல்லபடியா கரையேத்திட்டோம்கிற நம்பிக்கை அம்மானுக்கு. பாவம் வெள்ளந்தியான‌ மனுசந்தானே. மாப்பிள்ளய மட்டும் பாத்து ஏமாந்துட்டாரு.

'சல் சல்'ன்னு தாளத்த சிந்துன சதங்க சத்தம், பக்கத்துல தாலி கட்டுன புருசன்,சர சரக்குற கூரை புடவை.கதம்பமும் சந்தனமும் கலந்த வாடை. ஒரு திணுசான மயக்கத்துல இருந்தா அழகி. இப்போ நடக்குற பெரும்பாலான க‌ல்யாண‌த்துக்கு மாப்பிள்ள மட்டும் போதும், தனிக்குடித்தனம் வழக்கத்துல இல்லாத அந்த காலத்துல மாப்பிள்ளைய விடவும் மாப்பிள்ளைய சார்ந்தவுங்க ரொம்ப முக்கியம். அதுலயும் அழகி வாக்கப்பட்டு போற அந்த வீடு இருக்கே, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா பிரச்சினைகள் வந்தமேனிக்கு இருக்கும்.ஆளாளுக்கு நாட்டாமை.புது அடிமைதான் நாம‌ அங்கன்னு தெரியாத‌ அழ‌கி, ந‌ம‌க்குன்னு ஒரு கூடு கெட‌ச்சிருச்சு,இப்ப‌டி வாழ‌னும் அப்ப‌டி வாழ‌னுமுன்னு க‌ண் நெறைய‌ க‌ன‌வோட, ஏகப்பட்ட எதிர்பார்ப்போட‌ மாமியார் வீட்டுக்கு போறா.
மாட்டு வ‌ண்டி நிக்குது, சுய‌ நென‌வுக்கு வ‌ந்த‌வ‌ளா திடுமென‌ முழிக்குறா. க‌ம்மாயிக்கு எதுக்க‌ மாதிரி ஒரு காலி எட‌ம், ந‌டுவுல‌ ஒரு வ‌ட்ட‌ குடிசை. 

'இது தான் ந‌ம்ம‌ வீடு எற‌ங்கு', ப‌தில் வ‌ந்த‌ தெச‌ய‌ பாத்தா சிரிக்க‌வே தெரியாத‌ மாதிரி ஒரு பொண்ணு நெற மாச சூலோட‌.மாப்பிள்ளையோட‌ த‌ம்பி பொண்டாட்டியாம்.சீம‌க் கெல்லாம் போன‌வ‌ருன்னாங்க‌ ஒரு வ‌ட்ட‌ குடுசையும் நால‌ஞ்சு ஆட்டுக் குட்டியும் தான் சொத்து போல‌.

க‌ல்யாண‌ வீடுன்னாங்க‌ ஒரு ச‌ன‌த்தையும் காணும். லேசா அழ‌கிக்கு உள்ளுக்குள்ள‌ கிலி பிடிக்குது.அம்மான் தான் விசயத்துல‌ ஏமாந்துட்டாருன்னு ம‌றுநா விடிஞ்ச‌தும் தெளிவா தெரிஞ்சு போச்சு.ஆனா என்ன‌ தோதுக்கு இந்த‌ க‌லியாண‌முன்னு ம‌ட்டும் புரிய‌வே மாட்டேங்குது அவ‌ளுக்கு.இங்க‌ எல்லாமே மாமியாரு ராஜ்ஜியமுன்னு புரிஞ்சி போச்சி அவ‌ளுக்கு. அரச புர‌சலா தெரிய‌ வ‌ருது மூத்த‌வ‌ நோவால‌ சாக‌ல, இவ‌ங்க படுத்தின பாடு தாங்காம செத்துப் போயிட்டான்னு.

மொத‌க் கோழி கூவுறதுக்கு முன்னாடி காட்டுக்கு போனா பொழுது சாய‌த்தான் திரும்ப‌ முடியுது,ராவுல‌ வாற‌ புருச‌னோ முழுக்க போதையில‌. என்ன‌ செய்யுற‌து? ஆன துணி கட்ட கூடாது,பக்கத்து வீடுகள்ல யாரோடயும் பேசக் கூடாது.அப்படி இப்படின்னு ஆயிரம் சட்டம்.குருவியா பறந்து திரிஞ்சவள கூண்டுக்குள்ள சுருக்குன மாதிரி. ஆசை மோகம் எல்லாஞ் சேத்து தொண்ணூறு நாளைக்கெல்லாம் தவிப்புகள் அத்தனையும் நத்தையா சுருங்கிப் போச்சு.ஆனா ஏதானாலும் யாருக்கிட்டேயும் கையேந்தி நிக்க மாட்டேன்னு ம‌னசுல‌ எழுதிக்கிட்டா.

இது தான் வாழ்க்கை, இதுல‌ தான் நீந்தி க‌ரையேற‌னும். எங்க‌ போக‌னுமின்னு தெரியாட்டினாலும் எங்க‌ போக‌க் கூடாதுன்னு தீர்மான‌ம் ப‌ண்ணிக்கிட்டா.அனாதையா நின்ன‌வ‌ள‌ தூக்கி எடுத்து,ம‌க‌ளுக்கும் மேலா வ‌ள‌த்த‌வ‌ரு த‌லை நிமிர‌ வாழ‌னுமின்னு முடிவு ப‌ண்ணிக்கிட்டா. ”மறு வீடு” கூட வராத மாப்பிள்ளையையும் பொண்ணையும் பாக்க‌ கூட்டாளி ச‌கித‌மா ஆசையோட அம்மான் வ‌ந்திருக்காரு. காத்துக் கெட‌க்காரு காத்துக் கெட‌க்காரு ம‌ணிக்க‌ண‌க்கா. இம்புட்டும் தெரியாம‌ அழ‌கி வாறா அலுத்துக் க‌ளைச்சு பொழுது சாய‌.

'வாடா. வாடா.ன்னு சொல்லி , மெல்ல நிமிந்து பாக்குறாரு‌ இவ‌ வந்து நின்னக் கோல‌த்த‌ப் பாத்து 'அய்யோ' ன்னு அல‌றிப் போயிட்டாரு. வாடி வ‌த‌ங்குன‌ வெத்த‌ல‌ கொடியா, நிக்க‌வும் தெர‌ணிய‌த்துப் போயி,அப்ப‌டியே சாஞ்சு நின்ன‌வ‌ள‌ உத்து பாக்குறாரு. ச‌ந்தோச‌த்துக்கான‌ அறிகுறி ஒன்னயும் காணும் அந்த கண்ணுல. 

ப‌திலுக்கு, அவ ஒடம்புல தழும்புகளும் காயங்களும் அம்மான் மனச ரணமாக்கிடுச்சு. வெறி கொண‌ட‌ வேங்கையா சீறுறாரு எல்லாருகிட்டேயும் . நியாய‌ம் கேக்குறாரு. என்ன‌ பிர‌யோச‌ன‌ம்? ஒரு அனாத‌ புள்ள‌ வாழ்க்க‌யில‌ வெள‌யாடிப்புட்டோமே.குடிகார‌ப் ப‌ய‌ வாக்க‌ ந‌ம்பி ஏமாந்துட்டோமேன்னு மெதுவா ஏறுது புத்திக்குள்ள‌.குத்தமுள்ள‌ நெஞ்சு ப‌ரிகார‌ம் தேட‌ நெனைக்குது.ஆனா பாவ‌ப்ப‌ட்ட‌ அழ‌கியோட‌ த‌லை எழுத்தோ அத்த‌ன‌ சீக்கிர‌ம் சீராயிடுமா என்ன‌?

<========= அழகி புராணம் தொடரும் ==========>

Sunday, September 13, 2009

அப்ப‌த்தா! - ப‌ட‌ல‌ம் 2


க‌ல்யாண‌த்துக்கு வ‌ந்த‌வுக‌ எல்லாரும் பெற‌ந்த‌ ம‌க்க‌ க‌ண்க‌ல‌ங்கி அழுவுற‌த‌ பாத்து ச‌ங்க‌ட்ட‌ப்ப‌ட்டு,வ‌ந்து ச‌மாதான‌ப் படுத்துறாக‌. ஆனா எல்லாரும் ஒரு ம‌ன‌சா இந்த‌ க‌லியாண‌த்த‌ வேணாமுங்குற‌துல‌ வெற‌ப்பா நிக்‍கிறாக‌.

கத்தலும் விசும்பலும் கலந்து வர,வெடுக்கென நிமிந்து பாக்குறா அழகி. என்ன ஆச்சு? திடுமென என்ன கொழப்பம்? வெரசா வந்து மணபந்தல பாக்குறா.
ஆளாக்கி வளத்தவரு கொலக்குத்தம் பண்ணுன‌வராட்டம் தல குனிஞ்சு தடுமாற நிக்க,அக்காமாரு அத்தன பேரும் இவ ஆத்தாவா மாறி அவரோட சண்டைக்கு நிக்க,அத்தன பேரு பாசமும் கண்ணீரா பொங்கி வழியுது.இதுவ‌ரைக்கும் க‌ண்ணீரும் க‌ம்ம‌லையுமா இருந்த‌ அழ‌கிக்கோ, இந்த‌ சடுதி மாத்த‌ம் ஒரு நிதான‌த்த‌ கொடுத்திருச்சு.

மெல்ல சுதாரிச்சு, சுத்தி முத்தி பாக்குறா. ம‌ல்லுக்கு நிக்குற‌ அம்மாவ‌ அட‌க்க‌ முடியாம‌ தெண‌றிக்கிட்டு,ஒடிச‌லா, ஒச‌ர‌மா,க‌ருப்பா ஒருத்த‌ரு ... ஆமா அவ‌ராத்தான் இருக்கோணும். ப‌ட்டு வேட்டி எல்லாம் உடுத்தியிருக்காரே. மொத மொதலா அழகிக்கு கண்ணால பேசுற பாசை எல்லாம் நல்லா புரியுது.

'இத்தன பேரு மத்தியிலயும் என்ன அசிங்க படுத்திபுடாத.'

மறுக்கா பாக்குறா,
'என்ன வுட்டு போயிறாத புள்ள.....'

அந்த கண்ணுல கெஞ்சலும் கதறலுமுன்னா, ஒன்னோட ஒன்னா பாவிக் கெடக்கு.

ச‌ட்டுன்னு , 
அட‌! ஒரே பார்வையில‌ க‌வுந்துட்டா போங்க‌.பொம்ப‌ள‌ புள்ள‌ மாட்டுற‌தே இந்த பரிதாப பார்வைக்குள்ள‌ தாங்க.

'பாத்தாக்க‌ பாவ‌மா இருக்கு. எம்புட்டு ந‌ல்ல‌வரா இருந்தா அம்மான் இத்த‌ன‌ போராட‌னும்?' மனசு அவர நோக்கி ஒடுதுன்னு புடி பட்டுருச்சு இவளுக்கு. 

வெக்கம் ஒடம்பு பூரா பரவுது.முகம் ரோசாப்பு கணக்கா செவந்திருச்சு. எம்புட்டு பெரிய‌ த‌கிரிய‌ சாலியா இருந்தாலும் காதலுக்கும்,பாசத்துக்கும் அட‌ங்கித் தானே ஆக‌னும். என்ன நாஞ் சொல்லுறது?

உள்ளுக்குள்ள என்ன‌ ந‌ட‌க்குதுன்னு தெரியாம‌, ப‌ர‌வ‌ச‌மாயி அழ‌கி செலை‌யா நிக்க‌யில‌,ஊருக்கு பெரிய‌வ‌ரு சீலக்கட மாத‌வ‌ன்னு பேரு, வ‌ந்து எல்லாரயும் அட‌க்கிபுட்டு,
'தே.முடிவா என்ன‌ சொல்லுறீக‌?'ன்னாரு.  
அக்காமாரு அத்த‌ன‌ பேரும் ஒருமனசா வேணாமுன்னு சொல்ல‌,ஒரு மொர‌ட்டு கொர‌லு ஊட‌ பாயுது. 
'பொண்ண‌ கேட்டுச் சொல்லுங்க‌.'
திரும்பி பாக்குறா, மாப்பிள‌ தான் பேசுன‌து. ச‌ன‌ மொத்த‌மும் இப்போ இவ‌ள‌ பாக்குது. ஆத்திர‌துல‌ அறிவிழ‌ந்தாலும் நிதான‌துல‌ இவ‌ ஆயிர‌ம் அறிவாளிக்குச் ச‌ம‌ம்.

அல்லிப்பூ அத‌ர‌ம் அதிராம‌ சொல்லுறா.

'என‌க்கு அவிய‌ள‌ க‌ட்டிக்க‌ச் ச‌ம்ம‌த‌ம்'. ப‌ரித‌விச்சு நின்ன‌ அம்மான் ஓடியாந்து,
'இது போதுமுடா.இது போதும்ன்னு!' 

க‌ல்யாண‌ ப‌ந்த‌ல், நாத‌சுவ‌ர‌முன்னு பதினாறு வயசு பாலகனாட்டம் ஓடி திரியுறாரு... சிந்துன‌ மூக்கும் நொந்த‌ ம‌ன‌சுமா அக்காமாரு இவ‌ளுக்கு அல‌ங்கார‌ம் ப‌ண்ணுறாக‌. அடுத்த‌வ‌ ப‌ங்கிட்ட‌ வாழ்க்க‌ ந‌ம்ம‌ த‌ங்க‌ச்சிக்கு கெடைக்குதேங்குற‌ வ‌ருத்த‌ம்.இவள இந்த கல்யாணத்துல இருந்து காப்பாத்த முடியலயேன்னு கோவம்.அப்ப‌ன‌ மீற‌ முடிய‌ல‌யேன்னு இயலாமை. எல்லாமும் சேந்து மூத்த‌வ‌ளுக்கு ஆங்கார‌த்த‌ குடுத்துருச்சு. 

ச‌ன்ன‌மா சொல்லுறா,'பாரு. எங்க‌ளுக்கு ம‌ருவாத‌ இல்லாத ஒன் வாழ்க்கையுல இனி எங்க‌ளுக்கு எந்த‌ ப‌ங்குமில்ல‌.' பூத்து நெற‌ஞ்ச க‌‌ண நேர‌த்து ச‌ந்தோச‌ம், வெய்யில் க‌ண்ட‌ ப‌னியா காஞ்சு போச்சு.சோதியெழ‌ந்த‌ க‌ண்ணோட,ஒட்ட வச்ச சிரிப்போட, சின்னாளப் ப‌ட்டு மினுமினுக்க,அழ‌கே உருவான‌ அழ‌கி ம‌ணப்ப‌ந்த‌லுக்குப் போறா.

ப‌ந்த‌ல்ல‌ மாப்புள‌, பொத‌ய‌ல் கெடைச்ச பூரிப்புல. அவன் நெற‌ஞ்ச‌ பார்வையில‌ தெளிவா புரியுது இவ‌ளுக்கு, அம்புட்டு ச‌ந்தோச‌ம். 'இனி எல்லாமே அவ‌ன் தான்'னு தெக்க‌த்து சாமியெல்லாம் ம‌னசார‌ வேண்டிக்கிட்டு த‌ல‌ குனிஞ்சு தாலி வாங்கிறா [எதிர்கால‌த்துல‌ தான் நிமிர‌வே போற‌தில்லைன்னு சொல்லுற‌‌ மாதிரி] மண்ணு செறக்க வாழ்ந்து நிக்கும் மகிழம்பூ மனசுக்காரி...

<======== அழ‌கி புராண‌ம் ========>

Wednesday, September 9, 2009

அப்பத்தா! - ப‌ட‌ல‌ம் 1


பல தலைமுறைகள் தழைக்க சில ஆணிவேர்கள் அடித்தளமாய் புதைபடுவது வழக்கம்.பெரும்பாலும் அவர்கள் பெண்களாயிருப்பதும்,அதனாலே அவர்கள், கால மாற்றத்தில் மறக்கப்படுவதும் வழக்கம்.எத்த‌னை வீட்டில் இன்றைக்கும் முன்னோர் வ‌ழிபாடு சாத்திய‌ம்? சில‌ ப‌கிர்த‌ல்,சில‌ நினைவு கூற‌ல் என‌ இந்த 'சில' விச‌ய‌ங்க‌ள் குடும்ப அங்கத்தினருக்கிடையே விரிசலில்லாத உறவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கதை கேட்க ஆரம்பித்த நாட்களில்,கறிகாய் நறுக்கியபடியோ,பூ தொடுத்தபடியோ,சோறு ஊட்டியபடியோ இருக்கும் அப்பத்தாவின் அருகாமையோடு,அவளின் பொக்கை வாய் அசைப்புக்கு அடிமையாயிருந்த காலங்கள், அவள் கதைய அவள் சொல்லிக் கேட்டு மெய்மறந்த நாட்கள், எத்தனை தவம் கிடந்தாலும் இனி கிடைக்கப் போவது இல்லை.சிலரின் பாதிப்பு நமக்கு தெரியாமலே நமக்குள் நம்மோடு கலந்து விடுவது தவிர்க்க முடியாதது. அதை நினைவு கூறுதல் அவர்களோடு சில கணங்கள் வாழச் செய்கிற முயற்சி. அப்படியாக இதுவும்......

"அப்பத்தா!"

அப்பவோட அம்மாவ நாங்க இப்படித் தான் கூப்பிடுவோம்.

வாழ‌க் க‌த்துக் கொடுத்து,தன‌க்கே தெரியாம‌, என‌க்கு வாய்மை,நேர்மை,உழைப்பு, அது த‌ரும் வலிமையென‌(!)[சரி,சரி .....] பெரிய பெரிய விசய‌ங்க‌ளை எல்லாம் சாதார‌ண‌ விள‌க்கத்துட‌னே, அடித்த‌ள‌மிட்டு போன‌ அப்பாத்தா தான் இப்ப‌வும் எப்ப‌வும் என‌க்கு பிடிச்ச‌ க‌தாநாயகி.
ச‌ரி வாங்க‌. ந‌ம்ம‌ கதாநாய‌கிய‌ ப‌த்தி தெரிஞ்சுக்க‌லாம்.
சின்ன‌ வ‌ய‌சுலேயே அம்மா அப்பா இல்லாம‌ அம்மான்(தாய்மாம‌ன்) த‌ய‌வுல‌ உசுர‌ காப்பாத்திக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். அம்மானோட‌ ஆறு பொண்ணுக‌ளோட‌ ஏழாவ‌து பொண்ணா,க‌டைசிப் பொண்ணா வ‌ள‌ர்ந்த‌ அப்ப‌த்தா சோத்துக்கு கையேந்துனாலும் சீமைக்கு ம‌காராணி க‌ண‌க்கா. அப்ப‌டி ஒரு அழ‌கு. அழ‌குக்கு த‌குந்த‌ மாதிரி தான் பேரும். ஆமா அவ பேரு,"பொன்ன‌ழ‌கி".

அஞ்சு பொண்ணு பெத்தா அர‌ச‌னும் ஆண்டி. ஆனா, இவுங்க‌ வீட்டுல‌யோ ஏழு பொண்ணு.க‌ஷ்ட‌ ஜீவ‌ன‌த்துல‌ எப்ப‌டி க‌ரையேத்த‌ போறோம்னு க‌வ‌ல‌ கொண்ட‌ப்போ,சின்ன‌வ‌ பொன்ன‌ழ‌கி,'ஏன் க‌லங்குறே? நான் இருக்கேன்னு. என்னக்கும் ஆம்ப‌ள‌ப்புள்ள‌ இல்லாத இந்த‌ வீட்டுக்கு நான் தான் எல்லாமுன்னு சொல்ல,பூரிச்சு போன அவ‌ளோட‌ அம்மான் சாகுற‌ வ‌ரைக்கும் 'அழ‌கா.அழ‌கா.' ன்னு தான் கூப்பிடுவாராம்.

வெறும் வாய்பந்தல் கட்டி பந்தி போடுற ரகமில்ல நம்ம அழகி.சிதறாம திங்கிற சோத்துலயும்,அதிராம பேசுற வார்த்தையிலயும் பெண்ணோட பண்பாடு தெரியுமுன்னு சொல்லுவாங்க.அதுலயும் நிதானிச்சு சொல்லுற கனிவான வார்த்த,எப்படிப்பட்டவங்களயும் கிட்ட சேத்துடும். நம்ம அழகியும் அப்படிப்பட்ட அதிசய தெறமக்காரி.அரைக்காணி நிலத்துல அக்கா தங்கச்சிங்க ஏழு பேரும் அப்பனுக்கு துணையா விவசாயம் பாக்குறாங்க. சுத்து பத்து எட்டு ஊரிலேயும் இவ‌ங்க‌ வெள்ளாம‌ காய்க‌றி தானாம் எல்லார் வீட்டு சமையலுக்கும்.அதுல வர்ற வருமானம் தான் குமரிங்களுக்கு 'சிறுவாடு'. இவ கட்டுட்சிட்டால பட்டி, தொழுவுன்னு அம்மான் வீடு பல்கிப் பெருகுது.

அவ சிந்துன வேர்வைக்கு பலனா, போதும் போதுமுங்குற அளவுக்கு தந்தா பூமாதேவி. தான் ஆறு ம‌க்க‌ளையும் ம‌க‌ளா பாக்குற‌ அம்மான், இவ‌ள‌ ம‌ட்டும் தான் ம‌க‌னா பாப்பாராம்.துரு துருன்னு வார்த்தைக்கு வார்த்த‌ தைரிய‌ம் சொல்லிக்கிட்டு திரியுற‌ இவ‌ள‌ பாக்குற‌வுக‌,அப்பிடியே அச‌ந்து போவாக‌. ம‌ன‌சுல‌ இருக்க‌ வைராக்கிய‌ம், க‌ண்ணுல‌ தெரிஞ்சாலும், பெண்மைக்கான‌ அத்த‌ன‌ அம்ச‌மும் அமைஞ்ச‌ பேர‌ழ‌கி. வார்த்தையில‌ இருக்குற‌ மென்மையும், பூமி நோகாம‌ ந‌ட‌க்குற ப‌த‌விசும், க‌ண்ட‌வ‌ங்க‌ அத்த‌னை பேரையும் ம‌ய‌க்கிப்புடும்.

ஏழு பேரு அழ‌குக்கும், குண‌த்துக்கும் ஒழ‌ச்சு பொழ‌க்கிற‌ த‌ன்மான‌த்துக்கும் ஆச‌ப் ப‌ட்டு சீரு கொடுத்து க‌ட்டிக் கிட்டு போனாங்க‌ளாம்(!). அந்தா இந்தான்னு ஆச்சு. அஞ்சு பொண்ண‌ க‌ரையேத்தின‌ கையோட‌ அவ‌ளோட‌ அயித்த‌ காரியும் காட்டோட‌ போயிட்டாளாம்.அம்மா முக‌மே தெரியாத‌வ‌ளுக்கு எல்லாமா இருந்த‌வ‌ போன‌தும், நிலைகுழைஞ்சு போனா அழகி.

மீத‌ ரெண்டு பேரையும் என்ன‌ செய்யிற‌துண்ணு தெரிய‌ல‌ அம்மானுக்கு. வீட்டுல‌ ஒருத்தி இருந்து காவாந்து ப‌ண்ணுற‌ சாம‌ர்த்திய‌ம் ஆம்ப‌ளைக்கு வ‌ருமா? என்ன பண்ண போறோமுன்னு மலைச்சு போயி நிக்கிறாரு. அப்பவும் 'வெசனப்படாத. நான் பாத்துகிறேன்னு' ன்னு ஆறுதல் சொல்லுறா அழகி.

வாற‌ வைகாசிக்குள்ள‌ ரெண்டு பேரையும் த‌ள்ளி விட்டுற‌துன்னு முடிவு ப‌ண்ணி, மும்முர‌மா வேல‌ ந‌ட‌க்குது. தானும் போயிட்டா அம்மானுக்கு யாரு பொங்கிப் போடுவான்னு த‌வியா த‌விக்கிறா அழ‌கி.ஆச்சு,முன்ன‌ இருக்க‌வ‌ளுக்கு ப‌ட்ட‌ம‌ங்க‌ல‌த்துல‌ ந‌ல்ல‌ப‌டியா அமைஞ்சு போச்சு. இப்போ தான் அம்மானுக்கு பொறி த‌ட்டுது. ஆயி அப்ப‌னில்லாத‌ புள்ள‌, யாரோ மொரட‌னுக்கிட்ட‌ குடுத்துட்டு நாம க‌ண்ண மூடிட்டா,அனாத‌ புள்ள‌ வாழ்க்கைய‌ கெடுத்த‌ பாவ‌ம் சேருமேன்னு, தான் ம‌க்க‌ள காட்டிலும் ந‌ல்ல‌ மாப்பிள்ளைக்கு வ‌லை வீசி தேடுறாரு. ஒரு வ‌ருச‌ம் க‌ழிச்சு,'ஒரு மாப்பிள்ள‌ வ‌ந்திருக்கு. வ‌ந்து முடிச்சு குடுத்துருங்க‌ன்னு தன் மகள்க‌ளுக்கு த‌க‌வ‌ல் அனுப்புறாரு.எல்லாரும் சபை நிறக்க வந்து நிக்கிறாங்க.அழ‌கி 'கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்'னு அட‌ம்புடிக்கிறா.இவ பேச்ச யாரும் செவிட்டுலேயே போட்டுக்க‌ல.

எல்லாரும் வ‌ந்துட்டாங்க‌. மாப்பிள்ளையும் வாறாரு.அக்கா த‌ங்க‌ச்சி அத்த‌ன‌ பேருக்கும் அட‌ங்காத‌ கோவ‌ம் அவ‌ர‌ பாத்த‌வுட‌னே. 'த‌ங்கச்செல‌ க‌ண‌க்கா த‌ங்க‌ச்சிக்கு நெய்வேலி க‌ரி க‌ண‌க்கா மாப்பிள்ள‌யா? இவ‌னையா வ‌லை போட்டு தேடீனீரு?'ன்னு ஒரே பிடி பிடிக்குறாளுக‌ அப்பார‌. அது ம‌ட்டுமா? மூத்த‌வ‌ளோட‌ புருஷ‌ன் சொன்ன‌து கேட்டு அத்த‌ன‌ பேரும் செலையா நிக்கிறாளுக‌.

ச‌ங்க‌தி இது தான் அழ‌கி,அந்த‌ மாப்பிள்ளைக்கு ரெண்டாந்தார‌ம்.மொத‌ தார‌ம் நோவால‌ மாண்டு போன‌துல‌ ம‌ன‌சொடிஞ்சு சீமைக்கு போன‌ ம‌க‌ன் திரும்பி வ‌ர‌வும்,கண்ணாலம் கட்டி வச்சு,இங்கயே த‌ங்க‌ வ‌க்க‌ ஆத்தாகாரி ஆச‌ப்ப‌டுறா. எல்லாம் நியாய‌ந்தான். ஆனா அழ‌கிக்கு இது அநியாய‌ந்தானே.

‍‍‍‍‍<=====அழ‌கி புராண‌ம் தொட‌ரும்====>

Sunday, September 6, 2009

எஸ்.எம்.எஸ் தத்துவம்!!

வெற்றி எல்லாருக்கும் கிடைப்பதில்லை

ஆனால்

வெற்றி பெற கூடிய தகுதி எல்லாருக்கும் உண்டு!!!

Friday, September 4, 2009

சாலையோர‌த்தில் இருந்தபடி .....

இருட்டுப் போர்வைக்குள்
பொத்தல் வெளிச்ச‌ம்
ந‌டுநிசி வானில்
விண்மீன் ப‌ர‌வ‌ல்!

**********

பாதியாய்
நெளித்த‌
அலுமினிய‌ த‌ட்டாய்
வ‌ள‌ர்பிறை ச‌ந்திர‌ன்!

**********

பிச்சையாய்
ஒற்றை ரூபாய்
ஒளிய‌றியா முக‌த்தில்
ஆயிர‌ம் மின்ன‌ல் கீற்று!

**********

உறுமும்
இடிமுழக்கம்
அதீத பசியில்
அர‌ற்றும் அடிவ‌யிறு!

**********

மழைக்குறி
கண்டு
அடைக்கலம் தேடி
அங்குமிங்கும் அலைந்தபடி
மேகக்கூட்டம்!

**********

வெட
‌வெட‌க்கும் குளிர்
கைதட்டி ம‌கிழும்
க‌ந்த‌லாடைச் சிறுமி
தேங்கிய ம‌ழைநீரில்
தள்ளாடிப் பயணிக்கும்
காகித‌க் க‌ப்ப‌ல்!

**********

‌ழையே வேண்டாம்
இப்ப‌டிக்கு கூரையில்லா
குடிசைவாசி!

**********

Saturday, August 29, 2009

காதலாகி கண்ணீர் பெருக்கி...

க‌ட்டி வைத்த‌
காத‌லெல்லாம் க‌ரையேற‌
நினைக்கையில்
'ம‌ற‌வாம‌ல் வ‌ந்துவிடு'
அழைப்பிதழோடு
அழ‌காய் சிரிக்கிறாய் நீ!

கைய‌சைத்து
விடைபெறுகிறாய் - நீ
விட்டுப் பிரியும்
வ‌ருத்த‌தில் க‌ல்லென‌
ச‌மைகிறேன் நான்!

இதழ் பிரியாமல்
புன்னகைக்கிறேன்! - நீ
பிரிவதை தடுக்க
இயலாமல்....

இமைகளும் சேர
மறுக்கின்றன
நம் பிரிவின் வலி
கனவுகளால்
புதிப்பிக்கப்படுமெனும்
பயத்தில்..

சொல்ல‌ நினைத்து
சொல்லாம‌ல் விட்ட‌
சொல்லெல்லாம்
இப்போது ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌வை
என் அக‌ராதியில்...

என‌க்கென‌ ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ நீ
பிற‌ர்கென‌ மாறுகையில்
க‌ட‌வுளின் அரசியல்
க‌ண்கூடாய் தெரிகிற‌து!

இருந்தும்,
இய‌லாமையெல்லாம்
இர‌வுக்குள் இளகி
க‌ண்ணீராய் த‌லைய‌ணை
ந‌னைக்கையில் புரிகிற‌து
காத‌லின் வ‌லி!!

நீ வாழ்ந்து போன
என் நேற்றைய நாட்கள்
இனி,
நம் நேசத்தின்
வலியுணர்த்தும்
வடுக்களாய் மட்டும்!

கனவுகள் எல்லாம்

கண்ணீராய் வடிந்தபின்
நினைவு வந்து
உண்மை சுடுகையில்
புரிகிறது!
அய்யோ!அலுவலக பேரூந்து
இன்னும் அரைமணியில்!
வாழ்க்கை ஓட்டத்தில்
பந்தய குதிரையாய்
கண்ணீரை மறந்தபடி!

Tuesday, June 2, 2009

'நறுக்'கென சில கிறுக்கல்கள்

நீரை விடுத்து பாலை
உறிஞ்சும் அன்னம்
முழுதும் நீரின் கையணைப்பில்!

**********

அலைக்கு போக்கு காட்டும்
அழகான கண்ணாமூச்சி
வளைக்குள் பதுங்கும் நண்டு!

**********

தாலாட்டும் குற்றலைகள்
மேடாகி சமமாகும் நிலவு
அரிசில் சிதற ஆர்ப்ப‌ரிக்கும் குழந்தை!

**********

துளைகளின் நடுவில்
சுவாசத்தின் பிரயாணம்
புல்லாங்குழலிசை!

**********

விழுதுகளுக்கு நடுவே
முளைவிட துடிக்கும் விதை

பின்னணியில்லாத‌ அரசியல்வாதி!

**********

தொட்டால் பார்த்தால் தீட்டு
அவள் தொடுத்த மாலை சாமிக்கு
விதவை பூக்காரி!

**********

Saturday, April 25, 2009

நல்லதோர் வீணை செய்தே

உன்னோடு சேர்த்தே உன்னாலான
உறவுகளையும் நேசிப்பதால்
வர்த்தியாய் வாழ்வைத் தொலைக்கிறேன் - அவர்
வசிக்க தோதாய் வெளிச்ச‌ம் த‌ந்து
சிந்திய வேர்வைத் துளிகள் அத்தனையும்
சிப்பமாய் சேமித்து வைக்கிறேன்
என் சந்ததிகள் படித்துக் கொள்ளட்டுமென்று....

தனிமைக்கு ப‌ய‌ந்து உன‌க்குள் சிறைப‌ட்டேன்
வேட்டைக்கார‌னுக்கு ப‌ய‌ந்து வலை புகும்
முயற்குட்டியின் சாமர்த்தியத்தில்....
தெரிய‌வில்லை என‌க்கு அன்று
வீடு முழுக்க வியாபித்திருந்த‌
கூரிய‌ கொடுவாள்களுக்கு என் குருதி
இத்த‌னை பிரிய‌மென்று

கூலிக்கு அதிக‌மாய் கூவியும்
அற்ப‌மாய் கிடைத்த‌ பொருளோடு
கூடு திரும்புகிறேன்
விசிறி விட‌ வேண்டாம்
வேலால் குத்தாம‌லிருந்தால் ச‌ரி

த‌ட‌விப் பார்க்கையில்
த‌ழும்பு ம‌ட்டும் மிச்ச‌மாய்....
பார்ப்பவர்களுக்கு எப்ப‌டி புரியும்
காய‌ம் காய்ந்து வ‌டு வ‌ந்த‌ வ‌ர‌லாறு
கேட்டு அழ‌ வேண்டாம்
கேலி செய்யாதிருத்த‌ல் உத்த‌ம‌ம்

பெண்ணீய‌ம் பெருமையாய் பேசுகிறாய்
கேட்ட‌வ‌ர் அனைவ‌ரும் சொக்கிப் போகிறார்
'கொடுத்து வைத்த‌வ‌ள்'
ஒருமித்த‌ குர‌லில் ஒத்து ஊதுகிறார்
வேட‌னின் சாம‌ர்த்தியம் உன் க‌ண்ணில்...
வெறுப்பில் க‌ண்ணீர் வ‌ந்ததெனக்கு
'இல்லையென்று சொல்ல‌க் கூடாது'
வியாபாரியின் விற்ப‌னைக் கொள்கை போல‌
'எத‌ற்கும் க‌ண்ணீர் கூடாது'
வஞ்சியென் ‌வாழ்க்கை கொள்கை
மிட‌று போல் வேத‌னை விழுங்குகிறேன்

ந‌வ‌யுக‌ நாகரிக‌ங்க‌ள் எத‌ற்கும்
ஏங்க‌வுமில்லை ஏற்க‌வுமில்லை
இய‌ல்பாய் வாழ்வ‌தே இனிப்பாய்.....

வாழ்க்கை விற்று வ‌ச‌தி வாங்கும்
விற்ப‌னை பிர‌திநிதி நீ!
ம‌ல‌ரின் வாச‌னை என்றும்
மண் வாச‌னை என்றும்
தேடி நுக‌ர்வ‌து சாத்திய‌மில்லை
பண‌ம் ப‌ண்ணும் எந்திர‌ம் நீ
பாச‌த்துக்கு ப‌ணிவது சாத்திய‌மில்லை
உரையாடலுக்கு நடு நடுவே
ம‌ணித்துளிக‌ளை க‌ண‌க்கெடுக்கும் உன‌க்கு
ம‌ழையின் பிர‌வாக‌த்தினை எப்ப‌டி சொல்ல‌?

ய‌தார்த்த‌ம் பேசுவ‌தாய் சொல்லிக் கொண்டு
எத்த‌னையோ முறை மிச்ச‌மின்றி
கொன்றிருக்கிறாய் என்னை
ப‌திலேதும் சொல்லாம‌ல் பாவையாய் நான்!

எதுவுமே இல்லை ஆனாலும்
'அர‌சிள‌ங்குமாரி' நான் அப்பாவுக்கு
எல்லாமும் த‌ருகிறேன்
இருந்தும் ஏற்க‌ ம‌றுக்கிறாய்
நானும் சராச‌ரி ம‌னுசியென்று
கனவுகள் தீர்ந்த ந‌ர‌க‌ வாழ்வு
நித‌மும் தினுசு தினுசாய்
த‌ன்மான‌ ப‌டுகொலைகள்
குற்றுயிராய் குமைந்து மறுகினும்
பொழுது விடிகையில் புத்தம் புதியளாய்
உத‌ட்டில் ஒட்ட‌ வைத்த‌ புன்ன‌கையுட‌ன்
உற்சாக‌மாய் போலி ஊர்வ‌ல‌ம்
இயந்திர நாட்டியம் மாதக் கடைசிக்காய்
இவைதாம் நடுத்தரவர்க்கத்து மருமகள்


'தாலிச்சிறை' என்று சொல்ல
ஒப்ப‌வில்லை ம‌ன‌து
தானாய் வ‌ரைந்த‌ வ‌ட்ட‌த்தை
'சிறையென்றா' சொல்வ‌து?

க‌ண்ணாடி வேலி உடைப்ப‌து க‌டின‌மில்லை
ம‌‌ன‌மில்லையென்ப‌தே ம‌க‌த்தான உண்மை!
மாற்ற‌ம் வ‌ரும் ந‌ம்பிக்கையில்
புழுதியாயினும் சுகித்த‌ப‌டி.....

Tuesday, April 21, 2009

படித்ததில் பிடித்தது

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

-----காசி ஆன‌ந்த‌ன்


Monday, April 20, 2009

ஒளிவ‌ரும் நேர‌ங்க‌ள்



ஓய்வு
ஒழிச்சலின்றி
உழைத்து விட்டு
உயிருள்ள சவமாய்
படுக்கையில் விழுகிறேன்!
பசியாறச் சொல்லியும்
பாசமாய் தலை தடவியும்
பக்கத்தில் நீ!

தன்மானம் துடித்து விழ
தளர்வாய் துவல்கிறேன்
இயலாமையில் கண்ணீர்
நில்லாமல் ஓட
பதறித் துடிக்கிறாய்
எனக்கே எனக்காய் நீ!

என்னை எடுத்தெறிந்து பேசும்
எல்லார் ம‌த்தியிலும் என‌க்காய் பேச‌
'என்ன‌வ‌ன்' ‌என்கிற‌ உரிமையில்
அன்பான ஆத‌ர‌வாய் நீ!

கால‌ ஓட்ட‌த்தில் க‌ரைந்து போன‌
க‌ன‌வுக‌ளை காப்பாற்றி க‌ரையேற்ற‌
க‌ட‌வுளாய் நீ!

த‌னிமையில் பேசுகையில்- நீ
த‌வ‌றி சொன்ன‌ வார்த்தைக‌ளுக்காய்
வாயாடிச் சிரிக்கையில்
வாரிய‌ணைத்து முத்த‌மிடும் நீ!

களிப்பில் கடமையை மறந்து
குழ‌ந்தையாய் மாறி குதூக‌லிக்கையில்
செல்ல‌மாய் குட்டி பொறுப்புண‌ர்த்தும்
புத்திசாலி போத‌க‌னாய் நீ!

த‌னிமையான‌ நேர‌ங்க‌ளில்
த‌ண்மையாய் சொல்கிறாய்
"க‌ல‌ங்காதே! நானிருக்கிறேன்"
துணிவோடு ந‌ட‌க்கிறேன் மீண்டும்!

ப‌குத்தறிவு வேலை செய்கையில்
புரிகிற‌து தெளிவாய்!
நீ என்ப‌து என் க‌ன‌வுக‌ளின்
எச்சம் என்று!

ம‌ன‌தின் உட்சுவரில் பூட்டி வைத்திருந்த
கற்பனை பிம்பம் கட்டுகாவல் தாண்டி
கள்ளனாய் சில‌ நேர‌ம் இப்ப‌டி
என்னுட‌ன் உலா வ‌ரும் நேர‌ங்க‌ள்
க‌வ‌லை தோய்ந்த‌ க‌ண்க‌ளில்
காதல் "ஒளிவ‌ரும் நேர‌ங்க‌ள்"!

Saturday, April 18, 2009

ஈன்று புறந்தருதல் தந்தைக்குக் கடனே!

        பசுமையான‌ பள்ளி நாட்கள்! பள்ளியிறுதியாண்டில் நடைபெற்ற ஒரு மறக்க முடியாத நிகழ்வு! பெண்கள் மட்டுமே படிக்கும் கிறித்துவ மதப் பள்ளி அது! அபூர்வமாய் ஆட்டம் போட வாய்ப்பு கிடைப்பதுண்டு! முதல் நாள் விடுதி தினக் கொண்டாட்டம்(Hostel Day Celeberation) ஆட்டம் பாட்டம் என அமர்கள‌ப்படுத்தி விட்டு மறுநாள் வகுப்பில‌ எல்லோரும் ஒரே சாமியாட்டம் தான்.தூக்கம்னா தூக்கம் அப்படி ஒரு தூக்கம். இந்த நெலமையில முதல் வகுப்பு வேதியியல் வகுப்பு எப்படியோ தள்ளியாச்சு!
        இரண்டாம் வகுப்பு, கண்டிப்புக்கு பேர் போன‌ ஒரு கன்னியாஸ்திரியின் தமிழ் வகுப்பு! கணீரென்ற குரலும் அவரது தமிழ் மொழி ஆளுமையும் கண்,செவி இரண்டையும் அவர்பால் இழுப்பதில் வியப்பொன்றும் இல்லை!ஆனா அன்னிக்கு எங்க‌ நெலமயே வேற!அவரோட வகுப்ப கவனிக்குற சுவராஸ்யத்த விடவும் நித்திரா தேவியின் தாலாட்டு ஆதரவா இருக்க போகவே, விடுதி மாணவிகள் எல்லோரும் அரைத் தூக்கத்துல! எங்கள் வரிசையில உள்ள ஐந்து பேர்ல ஒருத்தி தவிர எல்லோரும் சரியான தூக்கத்துல! என்னதான் சொல்லுங்க பாடம் நடத்துறவுங்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு தூங்குறது ரொம்ப பெரிய சாதனை!
        இப்படியாக, "ஈன்று புறந்தருதல்"ன்னு ஆரம்பிக்கும் புறநானூறு(பொன்முடியார்) பாடலை அடிப்படையாகக் கொண்டு வகுப்பு நடைப்பெற்று கொண்டிருக்கையில், திடீரென நினைவு வந்தவர் போல், பாடத்தை நிறுத்தி விட்டு,"ஜான்சி,எங்கே படித்துக் காட்டு பார்க்கலாம்!", என்றார்.தெளிவான உச்சரிப்புக்கும், இனிமையான் குரலுக்கும் சொந்தக்காரியான,எனக்கடுத்து அம‌ர்ந்திருந்த‌ என் தோழிக்கான‌ அழைப்பு அது!
        அரை தூக்கத்திலிருந்த அத்த‌னை பேரும் வாரிச் சுருட்டிக் கொண்டு ஒர் வழியா சுயநினைவுக்கு வரவும், அவர் மத்த விசயங்களை சொல்லி முடித்து விட்டு, இவள் வாசிப்புக்கு செவிமடுக்கவும் மிகச் சரியா இருந்தது! (ந‌டுவுல எல்லாரும் தயாரா தமிழ் புத்தகத்ததுல அந்த குறிப்பிட்ட பக்கம் விரல் வச்சு கவனிக்குற அள‌வுக்கு பாசாங்கு) மொத்த வகுப்பும் ஜான்சியின் வாசிப்புக்கு கட்டுப்பட்டிருக்க, திடீரென ஒரே சிரிப்புச் சத்தம். மொத்த வகுப்பும் குலுங்கி குலுங்கி சிரிக்குது! ஜான்சிக்கோ,எனக்கோ ஒண்ணும் புரியல! எங்க தமிழாசிரியை அப்படி சிரிச்சு அதுவரைக்கும் பாத்ததேயில்லை! எதுக்கு சிரிக்கிறாங்கன்னே தெரியாம‌ நாங்களும் சிரிக்கோம்!!
        மெல்ல மெல்ல புரிய வந்துச்சு,ஜான்சி அம்மையார் தூக்க கலக்கத்துல இரண்டாம் வரியோட கடைசிய தூக்கி முதல் வரியில போட்டது தான் அந்த களேபாரத்துக்கு காரணம்!
        என்றைக்கும் நினைவில் நிற்கும் அந்த புற‌நானுற்றுப் பாட‌ல் பின்வ‌ருமாறு,

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
---புறநானூறு(பொன்முடியார்)


        ஒரு பெண்ணுக்கு தலையாய கடமையாக குழந்தைப் பேறும், தந்தைக்கு தலையாய‌ கடமை தன் குழந்தையை சான்றோனாக்குதலும் அவனுக்கு வேல் வடித்து தருதல் கொல்லனுக்கு கடமையாகவும், அப்படித் தயாராகி நிற்கும் தீரமான‌ இளைஞனுக்கு செழுமை நிரம்பிய நிலப்பரப்பை அரசாளக் கொடுப்பது வேந்தனுக்கு தலைக் கடமையாகவும் சொல்கிறது புறநானூறு.அப்படி சான்றோன் என பேர் பெற்ற அந்த இளைஞனுக்கு தலையாய கடமை, போரில் களிறை(யானையை) வென்று தன் வீரத்தை நிலை நிறுத்துவதே என்கிறார் பொன்முடியார்.இன்னார்க்கு இன்ன கடன் என வரைய‌றுக்கப்பட்ட சங்கத் தமிழர் நிலை போற்றுதற்குரியது. அது என் தோழியின் நாவில் பட்டு பொருள் மாறியது நகைப்புக்குரியது!'ஈன்று புறந்தருதல் தந்தைக்குக் கடனே!' அதாவது குழந்தை பேறு தந்தைக்குரிய கடன் எனச் வாசித்ததால் பொருள் திரிந்து போயிற்று!
        முன் வ‌ரிசை தோழிக‌ள் மூலமா நில‌வ‌ர‌ம் தெரிஞ்சுக்கிட்டு, ஜான்சிக்கு எப்ப‌டியோ புரிய‌ வ‌ச்சுட்டேன்! எல்லாம் சைகையில‌ தான்! சிரித்து முடித்து விட்டு, திருப்பியும் இவளை வாசிக்கச் சொல்ல அதே த‌ப்பு! கூண்டோட‌ கைலாச‌ம்ன்னு நாங்க க‌தி க‌ல‌ங்கி போயிருக்கையில் ஜான்சி ராணி ஒரு விள‌க்க‌ம் கொடுத்தா பாருங‌க‌! ஆயுசுக்கும் ம‌ற‌க்காது!
        "இல்ல‌ சிஸ்ட‌ர்! எத்த‌னை நாள் தான் நாம‌லே சும‌க்குற‌து? பாட்டுல‌யாவ‌து மாத்த‌ம் வ‌ர‌ட்டுமேன்னு தான்" என்று பெரிய‌ மாத‌ர் ச‌ங்க‌ த‌லைவி க‌ணக்கா நீளமான‌ உரை வேற‌! வ‌குப்பு ஆணாதிக்க‌ ச‌மூக‌ம் ப‌ற்றி திசை திரும்ப‌ 'அப்பாடா த‌ப்பிச்சுட்டோம்' பெருமூச்சு விட்டு ஜான்சியை நிமிர்ந்து பாத்தா அவ‌ என்ன‌மோ ரொம்ப‌ தீவிர‌மா வகுப்ப கவனிச்சுக்கிட்டு இருந்தா, ரொம்ப நல்ல புள்ளையா!

Friday, April 17, 2009

வான‌வீதியில்...

இருண்ட கருவெளியில்
ஒளிதேடும் இர‌வுப் ப‌ற‌வையென‌
வாழ்க்கைச் சிக்கலுக்கு
விடை தேடும் முனைப்போடு....
குழ‌ப்ப‌மான‌ நேர‌ங்க‌ளின்
த‌ன்னாய்வு ப‌ய‌ண‌ங்க‌ள்
பெரும்பாலும் துணைய‌ற்ற‌
இர‌வுக‌ளாய் அமைவ‌துண்டு

அக‌ன்று நீண்ட‌ வானப் ப‌ர‌ப்பில்
அள்ளித் தெளித்த‌ மின்மினிப் பூச்சிகளென‌‌
ஆங்காங்கே விண்மீன் கூட்ட‌ங்க‌ள்
பால்வெளித் திர‌ளுக்குள்
பாந்த‌மாய் த‌ண்ணிலவு
படிக்க படிக்கச் சலிக்காத
பாமரத் தமிழ் பாட்டென
என்றைக்கும் அலுக்காத
இயற்கையின் பேரழகு!

கைக‌ளை த‌லைய‌ணையாக்கி
க‌ட்டாந்த‌ரையை ம‌ஞ்ச‌ன‌மாக்கி
வானுக்கும் 
எனக்கும் 
ஊடாய் யாதொரு திரையுமின்றி
விண்ணை நோக்கி என‌து
சிந்த‌னைப் ப‌ய‌ண‌ம் அண்ணாந்து
பார்த்த‌ப‌டி அடிக்கடி நிக‌ழ்வ‌துண்டு!


பேர‌ண்ட‌ம் குறித்த‌ அல‌ச‌லுட‌ன்
அத‌ன் பிர‌ம்மிப்பான‌ ப‌திவுகளுடன்
அள்ள‌ அள்ள‌க் குறையாத‌
அற்புத பேரழகோடு இரவுப் பெண்
நாழிகைக‌ளை ந‌ய‌மாய் ந‌க‌ர்த்த‌
அவளின் கைய‌ணைப்பில்
காலதேவனின் கசப்பான நினைவுகளை
களையெடுப்பது கைவ‌ந்த‌ க‌லையென‌க்கு!


ந‌ண்ப‌ர்க‌ள் என் செய‌லை
நாட்ப‌ட்ட‌ பித்த‌மென்ப‌ர்!

விரிந்து ப‌ர‌ந்த வான‌வீதிக‌ள் தோறும்
விழி தொடும் தூர‌ம் வரை
இல‌க்கின்றி சுற்றி அலைந்து பின்
அய‌ற்சியில் துயில் கொள்வ‌து
அன்றாட‌ உள்ளப்ப‌யிற்சி யென‌க்கு!

வானில் கொட்டி கிட‌க்கும்
விண்மீன் புள்ளிக‌ளுக்கிடையே
என‌க்கான‌ ப‌தில் ச‌ங்கேத‌மாய்...

என் ப‌ய‌ண‌ம் தொடங்குகையில்
வாழ்வு சார்ந்த கேள்விக‌ளோடும்
அதன் பதிலுக்கான‌ தேடலோடும்
புதிராய்...

முடிகையிலோ,
கைவரப் பெற்ற ப‌திலோடு கூட‌வே
அனுபவம் பொதிந்த

வாழ்க்கைச் ச‌ம‌ன்பாடும்!

Sunday, April 12, 2009

மழை நாட்கள்

அன்று அதிகாலை முத‌லே
அந்திக் க‌ருக்க‌லாய் அடிவான‌ம்
அள‌வில்லா ஆன‌ந்த‌த்தோடு
ஆசையாய் ம‌ழைநாளை
அனுப‌விக்க‌ தயாரானேன்!

அள்ள அள்ளக் குறையாத
அட்சய பாத்திரம் - அதீத அழகில்
மிளிரும் மழை குறித்த‌ நினைவுகள்!
அதுவும் கோடையில் மழையெனில்
இன்னும் கொண்டாட்டம் குதூகலம்!

ஆராயும் மனப்பான்மையா?
அனுபவிக்கும் பேராவலா?
எப்படியோ தெரியாது
மழையோடான எனது சந்திப்புகள்
எல்லாமே இடம்பிடித்துவிடும்
மறக்கமுடியாத மகிழ்வான விசயங்களாய்!
உயிர்ப்பான அந்த கணங்களை
உயிரோவியமாய் உருவாக்கிவிடுவதென
எப்போதும் போல் இப்போதும் உறுதியெடுத்தேன்!

இதமான குளிருக்கு ப‌த‌மாய்,
மிதமான‌ சூட்டில் ஒரு கோப்பை தேநீர்
கூடவே கொறிக்க அவித்த வேர்க்கடலை!
நடமாட்டம் இல்லாத என்
வீட்டு மேல் மாடிச் சாளரம்
உற்ற களமென உறுதியாயிற்று!

க‌ம்ப‌ளியின் க‌த‌க‌த‌ப்பிலும் என்
க‌னிவான‌ வ‌ருட‌லிலும்
வசதியாய் ம‌டியிலுற‌ங்கும் என்
செல்ல‌ நாய்க் குட்டி!

ம‌ழையின் தாண்ட‌வ‌த்தினை
அப்படியே படியெடுக்க
காகித‌ கோப்புகளின் மேலே
முத்த‌மிட‌ காத்திருக்கும் என்
எழுத்தாணி!

அவளின்
ஆனந்த நர்த்தனத்தை
உள்ள‌ப‌டி ப‌ட‌ம் பிடிக்க
ஏதுவாய் இன்ன‌ பிற!

இடிமுழக்கம் மின்னல் ஒளிவெட்டென
நிகழ்ச்சி நயமாய் தொடங்கியது!

சின்ன‌தும் பெரிய‌துமான ம‌‌ழைத்துளிகள்
ஒன்றோடொன்று போட்டியிட்டு பூமி தொட‌
என‌னைப் போலே தாக‌ம் கொண்ட‌
ம‌ண்ம‌க‌ளும் மனம் நிறைந்த‌ உற்சாக‌த்தில்....

ம‌ண்ணைத் தொட்டு விடவேண்டுமென
சீரான‌ வேக‌த்தில் மின்ன‌லோடு
சீறி வ‌ந்த‌ மழை ம‌க‌ளும்
செல்ல‌மாய் ச‌ண்டையிட,
இன்ன‌தென்று தெரியாத‌ புதுவித
மயக்கத்தில் நானிருந்தேன்!
வழக்கமான
போட்டிதானென்றாலும்
என்றைக்கும் அலுக்காத காட்சியெனக்கு!

மின்னலின்
வெற்றியை இடியரசன்
சத்தமாய் முழக்கமிட
தோற்றுவிட்ட காரணத்தால்
மழைமக‌ளோ கோப‌த்தில் துவண்டு விழ ‌
வாரியணைத்து உள்ளிளுக்கும் மண்மகளின்
வாஞ்சையிலோ வாடாத தாய்மனசு!

அள‌வான‌ அதிர்வுக‌ளில்
அழ‌கான‌ சுருதியோடு
ஜ‌தி பிறழாம‌ல் ச‌திராடி
மெல்ல மெல்ல உச்சம் பெறும்
அவ‌ளின் ஆட்ட‌த்தில் என்
ஐம்புல‌னும் ஐக்கிய‌‌மாகிப் போகும்!
அடித்து ஓய்ந்து
'அப்பாடா' என்றவள் அடங்குகையில்
'அய்யோ' என்று நினைவு வரும்
எப்போதும் இப்ப‌டித் தான்
ஆயிர‌முறை அழகாய் ஆய‌த்த‌ம் செய்தாலும்
ஆட‌ல‌ர‌சி அபிந‌ய‌த்தில் அத்த‌னையும் மற‌ந்துவிடும்!
எத்த‌னை தான் முயன்றாலும்
கட்டி வைக்க முடிவ‌தில்லை
வ‌ஞ்சிய‌வ‌ள் வாச‌னைக்கு
வ‌ச‌மிழ‌க்கும் என் ம‌ன‌தை!
அத்த‌னையும் க‌ட்ட‌விழ்ந்து
க‌ன‌வ‌ல்ல‌ நிச‌மென‌ புரிகையிலோ
எல்லாமும் முடிந்திருக்கும்
எப்ப‌டி நான் ப‌திவு செய்ய‌?
அந்த‌ உயிர்ப்பான த‌ருண‌ங்க‌ளை!



Friday, April 10, 2009

பூங்கொத்து







விடியல்நாளையென்ப‌து விடியுமென்ற‌
ந‌ம்பிக்கையில் இருளின்
ஊர்வ‌ல‌ம் இர‌வுக‌ளில்!


தோற்றப்பிழைஎட்டிக் குதித்து எம்பி பிடித்து
எப்ப‌டியோ தொட்டுவிட்ட‌து பூமி
தொடுவான‌ம்!


நிழல்
த‌னிமையிலும் கூட
தொட்டுத் தொடரும்
இன்னொரு தொல்லை!


ஓவிய‌ம்
வெண்ணிற‌ தாளில்
தூரிகை முத்தம்
அழகான அடையாள‌ம்!


காத‌ல் தீவிர‌வாதி
சாம பேத‌ தான‌ த‌ண்ட‌ம்
ம்ம்ஹீம்! காத‌லியை இருதுளி
க‌ண்ணீர் விட‌ச் சொல்லுங்க‌ள் போதும்!


சேகுவாரா'அட‌ச்சே' அல‌ட்சிய‌ம் இன்றி
அடடே! 'சே' என்கிற‌து நாக்கு - அவன்

பெய‌ரை மொழியும் க‌ர்வ‌த்தில்!


குறிப்பு :-
ஏதோ என‌க்கு தெரிஞ்ச‌ வித‌த்துல‌ கிறுக்கியிருக்கேன்! வ‌ழ‌க்க‌ம் போல‌வே இப்ப‌வும் ம‌ன்னிச்சிடுங்க‌! ஏன்னா இந்த‌ கிறுக்க‌ல் எந்த‌ வித‌ம்னு தெரியாத‌ குழ‌ப்ப‌த்துல‌யே இடுகை போட்டாச்சு! ஆனா வெவ‌ர‌மா க‌விதை , ஹைக்கூ ரெண்டுல‌யும் சேர்த்துட்டேன்! :-‍)
அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம் ச‌க‌ஜ‌ம்பா!

Thursday, April 9, 2009

கதம்பம்


அஹிம்சை தத்துவம்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

உற்று நோக்கு!
உடன்படுவதில் உறுத்தலிருந்தால்
உடனே அகன்றுவிடு!!
கட்டளையிட்டார் மகாத்மா
அனைத்துக்கட்சி மாநாட்டில்!
கண நேரத்தில்
காலியானது சபை!


நம்பிக்கையில்லா தீர்மானம்

இந்தியனே!வராதே !
எங்க‌ள் எல்லைக்குள்!
ப‌குத்தலும் பாகுபாடும்
ஒட்டிக்கொள்ளும் எங்க‌ளுக்கும்!
-
இப்படிக்கு
பிரிவினையற்ற‌ இந்திய மிருகங்கள்,
காட்டு இலாகா, இந்திய காடுகள்.

குடிசை மாற்று வாரிய‌ம்

குடிசைக‌ள் இருந்த‌ இட‌ம்
கொழுத்த‌ ப‌ண‌த்தில்
குபேர‌ மாளிகைக‌ளாய்!
குடிசைவாசிக‌ள் அனைவ‌ரும்
தெருவாசிக‌ளாய்
வான‌க்கூரையின் கீழ்!

பார‌தி Vs பாபர் மசூதி

'ம‌த‌த்தீ'யினை அங்கிலோர்
கோவிலில் வைத்தான்
வெந்து த‌ணிந்த‌து 'நாடு'
கொடும் ம‌ட‌மையில்
குறைவென்றும்
நிறைவென்றும் உண்டோ?


நிதர்சனம்

தீயின் நாக்குக‌ள்
சுவைத்து தின்ற‌ன‌!
ஆரிய 'பிணம்'
திராவிட‌ 'பிண‌ம்'
மிச்ச‌மாய் சாம்ப‌ல்
ஒரே நிற‌த்தில்!

Wednesday, April 8, 2009

ந‌ங்கூர‌ம் பாய்ச்சி..



அந்தி சாயும் நேர‌ங்க‌ளில்
அமைதியான‌ வீதிக‌ளில்
அவனுடன் அருகாமையில்
அன்பாய் அளவளாவி
அமைதியாய் ஆரவாரமின்றி
நடத்தல் பிடிக்குமென‌க்கு!

இருள் க‌விழும் நேர‌த்தில்
ம‌கிழ்வாய் சிரித்துப் பேசி -என்
உள‌ர‌ல்க‌ளை எல்லாம் கேலி செய்தும்
உரையாட‌லை உன்னிப்பாய்
கவனிப்பதான‌ உன் பாவ‌னை -பொய்யென‌
சொல்லும் உன் காந்த க‌ண்கள்
புரிந்தும் புரியாம‌லும் ந‌டிக்கும்
என் க‌ண்க‌ள் ஒரு தேர்ந்த‌
ந‌டிகையைப் போல்...

நின் தோள்க‌ளிர‌ண்டும்
என‌க்கென‌வே த‌வ‌ங்கிட‌ப்ப‌தாய்...
சாய்ந்து கொள்ள ச‌ம்ம‌திப்பாயென்று
பார்வையை ப‌ர‌வ‌ விடுகிறேன்
க‌ண்க‌ள் ப‌ரித‌விப்பினும்
வார்த்தைக‌ள் ம‌றுத்த‌னுப்புகின்ற‌து

பல‌முறை உன்னை நான்
சீண்டிப் பார்த்த‌துண்டு
பொழுது போக்கிற்காய் அல்ல‌ - நீ
பாறை என்ப‌தில் நான் கொண்ட‌
க‌ர்வ‌ம் ப‌ல‌ம் பெறுவ‌த‌ற்காய்..

என் கால்க‌ள் உன் வ‌ழி
தொட‌ரும் நிப‌ந்த‌னையின்றி...
ம‌ன‌ம் இடைவெளியை
நிர‌ப்பி விட‌ துடித்திடினும் -என் பெண்மை
நாண‌முறுக்கேறி முட‌ங்கி கொள்ளும்

இட‌றி விழுகையில் தாங்கி கொள்கிறாய்
'இறுதிவ‌ரை இப்படியே இருப்பாயா?'
வார்த்தைக‌ளின் ஜ‌ன‌ன‌ம் ஓசையின்றி
வெளிவ‌ராம‌லே ம‌டிந்து போகும்

'உன்னைப் போல் பிற‌ரை நேசி'
இயேசுவின் வாக்கு...
என்னிலும் மேலாய் உன்னை
பார்ப்ப‌தாலோ என்னவோ
புரியவைக்க ஏனோ தோன்றவில்லை
இன்று வரை

விடியலுக்கு பின்னே
விலகிப் போகும்
இமைகளின் பிரிவில்
எஞ்சி நிற்கும் உன்பிம்பம்
அங்கொன்றும் இங்கொன்றுமாக....

நிசமாய் நீயருகில்லை என்பது
கண்ணீர் பெருக்க
பிரிவு நிரந்தரமில்லையென்று
நெஞ்சம் உரைக்க
தீர்ப்பாய் கண்ணீர் பிரவாகம்

வார்த்தைக‌ளில் சொன்ன‌தில்லை
வ‌ரிக‌ளாய் வ‌டிக்கிறேன்
என் நெஞ்ச‌க் க‌ட‌லில் - நீ
என்றோ ப‌ல‌மாய்
ந‌ங்கூர‌ம் பாய்ச்சி.....

Tuesday, April 7, 2009

காணிக்கை

ஆதிக்கமிகுந்த சமுகத்தில் அட‌ங்க‌ ம‌றுத்து
அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை ஆத்திரமாய்
தட்டி கேட்டதே நின் தவறென போயிற்றோ?

வியர்வை சிந்தி வரப்பேற்றி
வயல் உழுது விதையிட்டு
உயிர் கொடுத்து ப‌யிர் வ‌ள‌ர்த்து
அறுவ‌டை பார்க்கையில்
அரைப்பிடி நெல்லேயுன‌க்கு
அதுவும் அடிமையாய் வாங்கிப் போ!
அதிகார‌மாய் சொன்ன‌வ‌னை
அனுச‌ரித்து போகாத‌தோ ‍உன்
த‌ப்பென‌ சொல்லுகின்றார்!
நீ த‌மிழ‌ன‌ல்லாவா?
எப்ப‌டி பிழைப்பாய் நீ
த‌ன்மான‌ம் விற்று?

உழுத‌வ‌னுக்கே உழ‌வுநில‌ம் சொந்த‌ம்
பொதுவுட‌மைச் சித்தாந்த‌ங்கள்
பெய‌ர‌ள‌வில் ப‌ள்ளிப்பாட‌மாய் இங்கே!
நெல்ம‌ணி எந்த‌ச் செடியில் காய்க்கும்?
பிள்ளையின் கேள்வியை பெருமையாய் பீற்றிக்கொண்டு!
தோளைத் த‌ட்டி முதுகை வ‌ளைக்கும் இராஜ‌த‌ந்திர‌ம்
தெரியாம‌ல் காலை தொட்டு சொகுசுக்காய்
தமிழின அடையாளத்தை தொலைத்து விட்டு
பதவிக்காய் நிறமாறும் அரசியல் தலைவர்கள்
இதையுமீறி எழுச்சிக்காய் யாராவது கருகிப்போனாலும் - ‍அது
அன்றைய நாளிதழ் செய்தியாய் மட்டும்....
த‌மிழா! இவ‌ர்களிட‌மா எதிர்பார்க்கிறாய் தார்மீக‌ ஆத‌ர‌வை?

வ‌ந்தாரை வாழ வைக்குமாம் த‌மிழ‌க‌ம்
வாழ்க்கை முழுதும் ஈழ‌த்த‌மிழ‌ன் - த‌ன்
விலாச‌த்தை தேடித் தேடி நாடோடியாய்-எஞ்சியோர்
ம‌ண்ணை விட்டு ம‌ர‌ண‌ம் தேடிக் கொண்டு!
புத்தனை வணங்கும் கூட்டம்
புத்தநெறி வழுவாதிருத்தல் அவசியமன்றோ?
தீர்வென‌ச் சொல்லிச் சொல்லி
தீது செய்யும் தீயோர் ந‌டுவில்
த‌ன‌துயிரை தான‌மாய் பெற்று வாழ‌
த‌மிழ‌ன் ஒருபோதும் தயாரில்லை
த‌ன்மான‌ம் இழ‌க்காத‌வ‌னை 'தீவிர‌வாதியென்று'
த‌னிப்ப‌ட்ட‌ தீர்மான‌த்தை த‌ர‌ணியெங்கும்
நிலையென‌ப் ப‌ர‌வ‌ச்செய்த‌‌ அர‌க்க‌ர் கூட்ட‌ம்
பொய்மைக்கு கிடைத்த‌ வெற்றியென‌
புல‌ம் பெய‌ரும் த‌மிழ‌ர் கூட்ட‌ம்...
எழில் கொஞ்சும் ஈழத்தீவில்
எழுத்தாணிக்குப் ப‌தில் எந்திர‌ துப்பாக்கி
இடிந்த‌ வீடுக‌ள் த‌க‌ர்ந்த‌ நிலைப்பாடு
மயானமாகிப் போன கிராமங்கள்
என்றைக்கு வ‌ரும் ம‌ர‌ண‌ம்
எதிர்பார்ப்பை தாங்கிய‌ப‌டி
த‌ன்மான‌ த‌மிழ‌னின்று த‌ன்ன‌ந்த‌னியாய்
த‌ன‌க்கான‌ ச‌ரித்திர‌த்தை எழுத‌
த‌ன் குருதியில் ந‌னைத்த‌ தூரிகையோடு.....

ப‌ல‌ ஆண்டு போராட்ட‌ம் - ஆனால்
இன்று,
த‌ன் விர‌ல் கொண்டு
த‌ன் க‌ண்ணைக் குத்தும்
ம‌னிதாபிமான‌ ப‌டுகொலை
தீவிர‌வாத‌ எதிர்ப்பு என்கிற‌ பெய‌ரில்...
க‌ருகிச் சாவ‌து அப்பாவி த‌மிழின‌ம் மட்டுமென்று
உல‌க‌ம் எப்போது ஏற்கும்?

க‌டுமையாய் எச்ச‌ரித்தாலும்
க‌ண்ணீர் ம‌ட்டும் க‌ட்டுக‌ட‌ங்காம‌ல்...
மொழி,இன‌ம்,ம‌த‌ம் க‌ட‌ந்த
இந்திய‌னாய் இருந்தாலும்
ம‌ற‌த்த‌மிழா உன் தியாகங்களுக்காய்
என்னால் இய‌ன்ற‌ காணிக்கையாய்
இந்த‌ க‌ண்ணீர் வ‌ரிக‌ள்

உன்னை விற்று ஓட்டு வாங்கும்
த‌ர‌மிழ‌ந்த‌ த‌மிழ‌னுக்கு ஒரு வார்த்தை
பார‌தியின் வ‌ரிக‌ளில்...
'சீச்சீ! நாயும் பிழைக்கும் இந்த‌ பிழைப்பு'

ஞாபகமாய்..














ஒன்றோடொன்று உரசி
உராய்ந்து ஓசையிடும்
கண்ணாடி வளை சுமந்த கரங்கள்
இத்துடன் முடிவதில்லையெனும்
அறிவிப்போடு நீண்டு தொடரும்
உள்ளங்கைகளில்
மருதாணி ஓவியம்
மகுடமாய் வர்ணம்
பூசிய நகங்கள்

முக‌ம் பார்த்த‌லைக் காட்டிலும்
கை பார்க்கும் இய‌ல்பாய் என் க‌ண்க‌ள்
க‌ண்ணாடியில்

சில்லறைக்காக கை நீட்டுகையில்
நடத்துனரின் பார்வை ....
தோழிகளின் பிரம்மித்த பாராட்டில்
சொல்லொணா ஆனந்தம்
வழக்கத்துக்கு மாறாய்
கைகளின் உபயோகம் கொஞ்சம்
அதிகமாய் உரையாடலில்....
கர்வமாய் த‌லையை
சிலுப்பிக் கொள்ளும் மனம்
'அலட்டல்' என்று குற்றஞ்சாட்டும்
அனைவருக்கும் பதிலாய்
சிறு புன்ன‌கை மட்டும்

எப்ப‌டி தெரியும் அவர்க‌ளுக்கு?
நன்றி சொல்லி பிரிகையில்
அவனின் கைரேகை பதிந்த
என் கரங்களை இப்படி
கவுரவிக்கிறேனென்று
எப்ப‌டி புரிய வைப்பேன் அவர்க‌ளுக்கு?

Monday, April 6, 2009

கடலோரம்

கால்களை நனைத்தபடி
கடற்கரையோரம்!

கனமான மனசு லேசாக‌
எனக்கு நானே செய்யும்
அன்றாட வைத்தியம்!

ஓடிவந்து தொட்டுப் பிடித்து
நாம் சுக‌த்தில் திளைக்கையில்
விட்டுப் பிரியும் அலையின்
விளையாட்டு எப்பவும் என‌க்கு
ஏமாற்றம் கலந்த பேரானந்தம்!

உள்ள‌க் கொதிப்புட‌ன்
ஆத்திர‌ப் பார்வையில்
அட‌ங்காத‌ சின‌த்துட‌ன்
ஆயிர‌முறை வ‌ந்திருக்கிறேன்
உன்னிட‌ம் ஆறுதல் தேடி!!

அலைகளின் ஆர்ப்பாட்ட‌த்தில்
சீறிவ‌ரும் நீர்த்திவ‌லைக‌ளில்
சில்லிட்ட‌ நனைத்த‌லில்
சின‌ம் சிதறிப் போன‌துண்டு கூட‌வே
சிறுமியாய் மாறி சிலிர்ப்ப‌துமுண்டு!
க‌வ‌லைகள் க‌ண்ணீராய்
பரிணாம‌ மெடுக்கையில்
'ஹோ' வெனும் பேரிரைச்சல்
க‌ண்ணீருக்கு போக்கு காட்டிவிட்டு
ம‌கிழ்ச்சிக்கு விதை போடுவ‌து த‌னிக்க‌தை!

உள்ள‌க்கிட‌க்கைகளில் ஒன்றையாவ‌து
உன்னிட‌ம் ச‌த்தமாய் முறையிடுவ‌து
வ‌ழ‌க்க‌ம் என்பதறியாத தோழி
ஒருத்தி 'பைத்தியமென்று' அல‌றியோடிய‌து போல்
கோமாளியான‌ க‌தைகள் ப‌ல‌வுண்டு!

எல்லோருக்கும் எப்ப‌டியோ
எனக்குள் நீ
சில‌ ச‌ம‌ய‌ம் தோழியாய்
சில‌ ச‌ம‌ய‌ம் ஆலோச‌கராய்
சில‌ ச‌ம‌ய‌ம் ஆசிரிய‌னாய்
பல சமயம் ஞானியாய்
உண்மையாதெனில்
ந‌ம‌க்குள்ளான‌ பிணைப்பை
உருவ‌க‌ப்படுத்த‌ வார்த்தைகளேயில்லை!

Sunday, April 5, 2009

பேசாத‌ வார்த்தைக்கு நீ எஜமான்! பேசிய வார்த்தை உனக்கு எஜமான்! ‍

-யாரோ

தாம்பத்தியம்

அவரது
ஐம்ப‌தாவ‌து திரும‌ணநாள்
முதியோர் இல்ல‌த்தில்...
ம‌னைவியின் கல்லறையில்
ம‌லர் வ‌ளைய‌ம்!
மவுனமொழி தனிமை
மானசீகமாய் காதல்
மறைந்த மனைவியோடு
இருக்கும் வரை சொன்னதில்லை 

ஒரு போதும் சொன்னதில்லை 
தன் காதலை...

Friday, April 3, 2009

சமத்துவ‌(?) கோட்பாடு

மேல்த்த‌ட்டு வ‌ர்க்க‌ம்
பிச்சையிடு!
கீழ்த்த‌ட்டு வ‌ர்க்க‌ம்
பிச்சையெடு!
ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌‌ம்
நியமங்களுக்கு உட்பட்ட
எதானாலும் செய்
பிச்சை தவிர!

சாதி(தீ)

குளுகுளு அறையில் தலைவர் தீப்பொறி
உலலாசமாய்......
கொடூர‌ நெருப்பில் தொண்டன் தினக்கூலி
குற்றுயிராய்....

தமிழ்ச்செல்வியும் நேர்முகத்தேர்வும்

யாருமறியாமல் மறைத்து வைத்திருந்தேன் - அந்த
அவமான தருணங்களை பதுக்கி வைத்திருந்தேன்
‍நினைவுச் சுரங்கத்தில் பாரமான நினைவுகளாய்...
இதுநாள் வரையில் இறுக்கி வைத்திருந்த
இருதயத்து நினைவுகளை எடுத்து பகிர்கின்றேன் ‍
எம்மக்கள் எல்லோரும் உணர்ந்திடவே!

எழுத்துத் தேர்வில் தேறிவிட்ட‌ ச‌ந்தோச‌த்தில்
நேர்முகத் தேர்வுக்கான அறிக்கையுடன்!
இனியாவது நிமிருமா என் பொருளாதாரம்?
இயல்பான எதிர்பார்ப்போடு ப‌த‌ட்டத்தில் நான்
பன்னாட்டு நிறுவ‌னமொன்றின் வ‌ரவேற்ப‌றையில் ....

பதிவு கோட்புகளில் பதியாத பெயரோடும்
பாமரத்தனம் பசி இன்னபிற குறைகளோடும்
ப‌டிப்பே தெரியாத‌ த‌மிழ‌க‌த்து சாப‌க்கேடு
நான் பிறந்த "மலைக் கிராம‌ம்"

சந்தவரி எழுதி சரித்திரமாக்க போவதில்லை
சமூகம் எனக்கிழைத்த சதியை எடுத்துரைத்து!
உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாய் தெரிவதில்லை
உரிமையை தொலைத்த எம் மக்கள் வாழும்நிலை!!

க‌ற்பிழ‌ந்தால் க‌ன்னிம‌ட்டும் .....
கொள்கையிழ‌ந்த‌ மானுட‌ர் - த‌ம்
கொடிபிடிக்கும் குற்ற‌த்தை
என்ன‌வென்று இய‌ம்புவ‌து?

தேர்த‌ல் சமயம் ம‌ட்டும் தேடி வ‌ரும் ந‌ரிக்கூட்ட‌ம்
தேவை முடிந்த‌ பின் தேவ‌ர்க‌ளின் அணி வ‌குப்பாய்..
சூத்திர‌ சாதியென்று ஒதுக்கி வைக்கும் - அவ‌ர்த‌ம் வெற்றிக்கு
சூத்திர‌தாரியான‌ எம்ம‌க்க‌ள் கூட்ட‌த்தை!

மேடையெங்கும் பேய்முழ‌க்க‌ம் தாய்மொழியின் துளிர்பிற்க்காய்...
த‌மிழ் பாட‌மேயில்லாத‌ ப‌ள்ளியில் த‌ம்ம‌க்கள் ப‌டித்திடினும்
த‌ன்நெஞ்ச‌றிந்து பொய்யாய் முழங்குகின்றார்
த‌ம்ப‌ட்ட‌ம‌டிக்கின்றார் தாய்மொழிக்க‌ல்வி கொள்கையென்று!

த‌லைமை இப்ப‌டியிருக்க‌,
கொள்கை பிடிப்புட‌னே த‌ன்னைத் தொலைத்திட்ட‌ தொண்ட‌ன் - த‌ம்முள்
வளர்த்திட்ட வாழும் முறைமையினால்....

தாய்மொழி வ‌ழிக்க‌ல்வியெனும் தம்க‌ட்சி கொள்கைக்காய்
தார்மீக‌ப் பொறுப்புண‌ர்வில்‍ ‍என் த‌ந்தை!
படிப்பதே பெரும்பாடு இதிலே தரம் வேறா?
இப்படியாக,
த‌மிழ்வ‌ழிக்க‌ல்வி என் த‌லையெழுத்தாயிற்று!

எல்லோரும் சம‌மாய் வாழ்ந்திட்டால் எதுவுமே குற்றமில்லை - மாறாய்
த‌லைவ‌னென்றும் தொண்ட‌னென்றும் த‌ர‌ம்பிரித்த‌ வாழ்க்கைத்த‌ர‌ம்!
வ‌றுமை தொண்ட‌னுக்கென்றும் வ‌ச‌தி த‌லைவ‌னுக்கென்றும்
அண்மையில் மாறுதலுக்கு ஆட்ப‌ட்ட‌ அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்தால் ‍
ம‌திப்பிழ‌ந்த‌ த‌ன்மான‌ம் காலாவ‌தியான‌ க‌ன‌வுக‌ளுமாய்
காலச்சக்கரத்தில் நானும் வேலை தேடி....

பாவப்பட்ட சமூகத்தில் பதிக்கப்பட்ட விதை நான்!
பெரும்பாடுபட்டு சூரியவெளிச்சம் பார்த்த வீரிய‌ விதை நான்!
ப‌ட்ட‌ம் முடித்து ப‌ட்ட‌மேற்ப‌டிப்பு வரையான போதும்
பொருளாதார‌ம் ம‌ட்டும் க‌டைநிலையில்!

க‌ல‌ப்பில்லாத‌ மொழிய‌றிவு க‌ன‌வாகிவிட்ட‌ கார‌ண‌த்தால்
க‌ருத்தை தெரிவிக்க த‌மிழை த‌ழிழாக‌ச் சொல்லாம‌ல்
அந்நிய‌ மொழியோடு அரைகுறையாய் க‌ல‌க்க‌ச் செய்து....
அறிந்துமறியாம‌லும் யாம்புரியும் தவ‌ற‌னைத்தும்
பொருத்த‌ருள்வாய் த‌மிழ‌ன்னாய்!

வேலைநிமித்த‌ம் என்னுள் செத்துவிட்ட
தாய்மொழிக்காய் துக்க‌ம் கொண்டாடி
பாடாய்படுத்தும் பண நெருக்க‌டியால்
பிரிதொரு மொழியின் ஆளுமையில்!

க‌ருத்தாழம் மொழிய‌றிவு உட‌னான‌ கூட்ட‌ணி
தோற்றுப் போய் புதிய‌ மொழியொன்று
பிழைப்பிற்காய் உல‌வுகையில் எப்ப‌டி தொட‌ங்குவ‌து?
த‌ய‌க்க‌த்தில் க‌ல்லாய் அமர்ந்திருந்தேன்!

நாக‌ரீக நங்கையுட‌ன் நேர்முக‌த் தேர்வு!
பெய‌ரைக் கேட்ட‌ன‌ள் ப‌திலை சொன்னபின்
வேறொன்றும் கேளாமல் ம‌வுன‌மாய்- தாய்மொழியின்
தாக்க‌ம் உள்ள‌தென‌ த‌ட்டிக்க‌ழித்து விட்டாள்.
"த‌மிழ்ச்செல்வி" யெனும் என் பெய‌ரை
அம்மொழியில் எப்ப‌டித் தான் சொல்லுவ‌தோ?

அந்த‌ நொடிப் பொழுதில் நான் ப‌ட்ட‌
அவ‌மான‌த்தை என்ன‌வென்று எழுதிக்காட்ட‌?
அம்மொழியும் இல்லாம‌ல் ந‌ம்மொழியுமில்லாம‌ல் -க‌ல‌ப்பின‌த்
தமிழோடு உல‌வுத‌ல் தாம் இன்று பிழைக்கும்வ‌ழி!!

ப‌ழ‌மையை கொன்று புதுமையா? - இல்லை
ப‌ழ‌மையில் மெருகிடுவ‌து புதுமையா? - த‌மிழை
முத‌லாய் க‌ற்ற‌ கார‌ண‌த்தால் த‌ன்மான‌ம்
மிகுந்து போய் த‌ட்டி கேட்ட‌த‌ன் விளைவு?

தாய்ம‌ண்ணில் நானிருந்தும்
மொழியால் அந்நிய‌மாய்!!
தாய் மொழியே என் பெயரில் உள்ளதென
நான் கொண்ட‌ க‌ர்வ‌ம் த‌க‌ர்ந்து போய்
த‌லைகுனிந்து ந‌ட‌ந்ததேன் தன்னிலை மறந்து
என் எதிர்கால‌ம் குறித்த‌ எண்ணில்லா கேள்வியோடு!

வ‌றுமை வ‌தைத்த‌ போதே தெரிந்த‌து
வாழுத‌ற்கு வ‌ளைய‌ தெரிய‌ வேணுமென்று!
இன்று பன்னாட்டு நிறுவ‌னமொன்றின் நிர்வாக‌அறையில் ....
முய‌ன்ற‌வ‌ரை மொழி க‌ல‌ப்பின்றி மேலாள‌ர் " த‌மிழ்ச்செல்வி"!

கருணை

கூரை மேல் குடும்பம்
தெப்பமாய் குடிசை
வெள்ளத்தில் நாய்
துயரத்தில் சிறுவன்
தவிப்பில் க‌ண்ணீர் !

Thursday, April 2, 2009

என் கிராமத்து கனவு

அய்யர் வீட்டில்
அவ‌ருக்கு ச‌ம‌மாய்
அம்மாவாசை
சாப்பாடு
அபுபக்கருக்கு!


குறைந்த‌ப‌ட்ச‌ம்,
அய்யர் வீட்டில்
அவ‌ருக்கு ச‌ம‌மாய்
அம்மாவாசை
சாப்பாடு
அந்த‌ ஊர் த‌லித்துக்கு!

போதை

காற்றாய் வ‌ந்தாய்
அன்று (காத‌ல்)
போதை‌யிலிருந்தேன்!
நீ தென்ற‌லா
இல்லை புய‌லா?
த‌ர‌ம் பிரிக்க‌ முடிய‌வில்லை!
தெளிந்த‌பின் தெரிகிற‌து - நீ
'சுனாமி' என்று!
அத்தனையும் வாரிச் சென்றிருந்தாய்
நிம்மதியையும் சேர்த்து!

Wednesday, April 1, 2009

திரைக‌ட‌ல் ஓடியும்....

காத‌லாய் நோக்கினான்
குளமாய் கண்ணீர்!
இத‌ழ்க‌ளைப் பார்த்தான்
இன்னும் ஈர‌மாய்...
மருதாணி பாதம்
ஓசை எழுப்பவேயில்லை!
சின்னதொரு நடுக்கத்தில்
சித்திர‌ப்பாவை!
ம‌ண‌ம‌க‌ள் ஒப்ப‌னையெனினும்
உள்ளுக்குள் கொந்த‌ளிப்பாய்...
நான் வ‌ரும்வ‌ரை
நினைவாய் வைத்துக்கொள்!
நிழ‌ற்ப‌ட‌ங்க‌ள் த‌ந்தான்!
விடைபெற‌ எண்ணி
கைகளை விடுவிக்கையில்
அவ‌ள் சிந்திய
இருதுளிக் க‌ண்ணீர்!
வேலை நிமித்த‌ம்
வெயிலில் காய்ந்தாலும்
பொறுப்புகள் சுமந்தாலும்
உள்ள‌ங்கை பிசுபிசுக்கிற‌து
அவ‌ள் நினைவில்...
மந்திரிக்கு
உப்பு நீராம்
ஏழையின் கண்ணீர்!

"கோயில்"

க‌ருவ‌றையைச் சுற்றி
கறுப்புப் பணம் !
அர்ச்ச‌க‌ன் கூட
அரசியல் கைக்கூலியாய்!
எப்ப‌டி தெரியும் இறைவ‌னுக்கு
இந்தியா
ஏழைநாடென்று?

க‌ண்ணீரோவிய‌ம்

பாலுண்ணும் குழந்தை
பசியாற்றும் தாய்..
பகைவனின் தோட்டா
புறமுதுகைத் துளைத்திடினும்,
தாய்மையின் பெருமிதத்தில்
பசியாற்றும் தாய்..
பாலுண்ணும் குழந்தை!

[நிஜ‌மாய் இப்ப‌டி ஒரு ஓவிய‌ம் பார்த்தேன்! கண்ணீர் வ‌ரிக‌ள் க‌விதையாய்....]

Monday, March 30, 2009

நெருப்பாய் பிறப்பெடுத்தேன்

நெருப்பெனச் சொன்னாய் என்னை கர்வத்தில்
நெஞ்சினை நிமிர்த்திக் கொண்டேன் -நீ
பெண்மையை மதிப்பதாய் எனக்குள் ஒருமுறை
பெருமையாய் எழுதிக் கொண்டேன்

இரும்பாய் இருந்த‌ என்னை அன்பில்
இள‌க்கியே இய‌ந்திர‌ம் செய்தாய்- உன்னால்
இய‌ந்திர‌மான‌ பின்னே இத‌ய‌த்தின் செல்லிலெல்லாம்
இய‌க்கியாய் உனையே இறுக்கி இணைத்துக்கொண்டேன்!

உலகமே நீதானென்று உனக்குள்ளே சுருங்கிப் போனேன்
உனையின்றி யாருமில்லை உள்ளத்துக்கு கட்டளையிட்டேன்!
உறவுகள் வேண்டாமென்றும் எதிர்காலம் நீதானென்றும்
உறுதியாய் நிற்பதை உன‌க்குச் சாதகமாக்கிக் கொண்டாய்!

தனிமையில் பேசிப் பேசி - எந்த‌ன்
தவிப்பிற்கு மருந்து போட்டாய்! - உண்மையில்
அன்பின் அர‌வ‌ணைப்பு அதுதானென்று உன‌க்குள்
ஆசையாய் அட‌ங்கிப் போனேன்!

நிலையின்றி அலைந்த‌ மனம் அது
நிலைகொள்ளும் புள்ளி நீயென, உன்னை
கருத்தினில் புகுத்திக் கொண்டேன் -பதிலாய்
கனவுகள் பரிசாய் பெற்றேன்

நிலவரம்
புரிந்த பின்னே எனக்குள் நீ
நீசனாய் மாறிப் போனாய் - காதலின்
காரணம் தெரிந்த பின்னே எனக்குள் நீ
புயலாய் மையம் கொண்டாய்

பகைவனின் பெண் நான் என்றாய்
பழிவாங்க வந்ததாய் சொன்னாய் - உன்
பாசத்திற்கு ஏங்கி நானோ காதல்
படுகுழியில் விழுந்து விட்டேன்

காரணம் நிறையச் சொன்னாய் என்மீது
காதலேயில்லை காமமே உச்சமென்று
கர்வமாய் கத்திச் சொன்னாய்

நிம்மதி கொல்லும் நெருப்பெனச் சொன்னாய்
இம்முறை முற்றிலும் நீர்த்துப் போனேன்.
நியமத்தின் பேரில் வந்து என்னை
நிலையின்றி செய்து போனாய்

யாரிடம் கேள்வி கேட்பேன்
என்னுள் எதற்கு நீ நுழைந்தாய் என
யாரிடம் கேள்வி கேட்பேன்?

ஒருதுளி கண்ணீரில்லை மீதம்
ஓய்வின்றி அழுத மனது
ஒப்புக்கு சிரித்து பழக ...
உள்ளுக்குள் நானோ உணர்ச்சிகளற்று
பாறையாய் மாறிப்போனேன்....

ஏமாற்றம் எஞ்சி நின்று என்னை
இளப்பமாய் பார்த்த வேளை ‍- உன்னை
மனதினில் நிறைத்துக் கொண்டேன் - செந்தணலாய்
மறுபடியும் பிறவி எடுத்தேன்

சாம்பலாய் அழிவேனென்று சத்தமாய் சபதமிட்டாய்
சாம்பலாய் முடியமாட்டேன் சரித்திரம் படைப்பேனென்று
சன்னமாய் சொல்லிக் கொண்டேன் சித்தத்தில்
சாதனை மட்டும் கொண்டு

என்னை நான் எனக்குள் காண
எதிரி நீ துணையாய் நின்றாய்

ஆசையாய் மைய‌ம் கொண்டு
ஆர்வ‌மாய் க‌ல‌ந்து பேசி
அடிக்க‌டி ஆழ‌ம் பார்த்து
அச‌ந்த நேர‌ம் பார்த்து
ஆல‌கால‌ விச‌மாய் மாறி
அவ‌ச‌ர‌மாய் க‌ரையைக் க‌ட‌ந்தாய்....

இழப்புகள்
அதிகமெனினும் அதை
நான் இன்பமாய் கணக்கெடுத்தேன்
சேமித்து வைக்க‌ அல்ல
செப்பனிட்டுக் கொள்ள .....

இலக்கணம்
பிழையே இல்லை என்னுள்
இலக்கணம் பிற‌ழ‌வே இல்லை - நீயென்
இலக்காய் ஆனதே பிழையென‌க் கண்டேன்....

மீண்டும் நெருப்பாய் பிறப்பெடுத்தேன்.....

குறிப்பு :-
மக்கா டமீல் படக் கதையானு கேள்வி கேக்க‌ப் ப‌டாது!! ஆமா சொல்லிட்டேன்.... சும்மா ஒரு முய‌ற்சி ... அவ்வளவுதேன் சொல்லிப்புட்டேன்! !!

Saturday, March 28, 2009

அரசியல்

சாலையோர‌ நிதி திர‌ட்ட‌ல்கள்
க‌ட்சியின் கொள்கையோடு
த‌லைவ‌ரையும் தேட‌!

தத்துவம்-1

ந‌ட்பும் காத‌லும் இணைகோடுக‌ள்
காத‌ல் ந‌ட்பாய் மாறிய‌தென்றால்
காத‌லில் வாய்மையில்லை!
ந‌ட்பு காத‌லாய் மாறிய‌தென்றால்
நட்பில் தூய்மையில்லை!

"எப்போது?"

எங்கள்
க‌ண்ணீர் க‌தையை
வார்த்தையாய் சுருக்கினேன்
வ‌லியின் சுமை
வார்த்தையில்...
புர‌ட்சிக்க‌வி என்றார்க‌ள்
இளமை தீருமட்டும்
சிறைவாச‌ம்
இன்று விடுத‌லை என‌க்கு மட்டும்,
எப்போது என் நாட்டுக்கு?

Friday, March 27, 2009

படித்த‌தில் பிடித்தது

விடிவது
நாளாவதற்கு
மட்டுமல்ல
உனக்கு
வயதாவதற்கும்
தான்!
---எங்கோ படித்தது

வரங்களே
சாபங்களானால்
இங்கே
தவங்கள்
எதற்காக?
---எங்கோ படித்தது

Wednesday, March 25, 2009

"பார்வைக‌ள்"

நினைவில் நெருக்க‌மாய்
நிஜ‌த்தில் தூர‌மாய்!
பார்வைக‌ளில் ம‌ட்டுமே
க‌லந்துரையாட‌ல்க‌ள்!

*********************

பார்வை விப‌த்துக்க‌ள்
‍நிக‌ழும் நிமிட‌ங்க‌ளில்
உணர்வுகள் மரித்துப் போகும்
உயிர் மட்டுமே மீதியாகும்!

*********************

ஒவ்வொரு நாளும் விடிவது
'அவன் தரிசனம் பெற' என்று மனம்
சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும்!
க‌டிகார‌ ச‌த்த‌ம் கூட‌
என் காத‌லின் எதிரியாகும்
ம‌ன‌தின் ரீங்கார‌த்தை முறிய‌டிப்ப‌தால்....

*********************


'இன்றாவ‌து இன்றாவ‌து சொல்லிவிடு'
என் ம‌ன‌ம் துவண்டு துவ‌ண்டு
துடித்து எழும் அவ‌ன்
அமைதி முக‌ம் காணும் வ‌ரை...

‌கண்ட‌தும் வார்த்தைக‌ள்
ஊமை விர‌த‌ம் ந‌ட‌த்தும் - என்
தாய் மொழியின் வார்த்தைக‌ள்
எண்ண‌த்துக்குள் சிறைப‌ட்டு போகும்...

************************

அந்த நிழல் கூட‌
எனக்கே சொந்த‌ம்
என் த‌மிழின வ‌ள்ள‌ல்க‌ள்
போற்றி வ‌ள‌ர்த்த‌
'ஈத‌ல்' என்ப‌து - இந்த‌
விச‌ய‌த்தில் மட்டும்
இல்லாம‌ல் போகும்!

************************

அந்த பார்வைக‌ள் சொல்வ‌து
மெய்யா ? பொய்யா?
ப‌குத்தறிவு என‌க்குள்
ப‌ட்டிம‌ன்ற‌ம் ந‌ட‌த்தும்...
என்னைக் க‌ண்ட‌தும் - அந்த‌ க‌ண்க‌ள்
ம‌ல‌ர்வ‌தாய் என‌க்குள்
ஒரு சுய‌பொறி க‌ருவி
மின்ன‌லாய் சொல்லிச் செல்லும்!

******************************

அங்கும் இங்கும்
அலைந்து அலைந்து
ஓய்ந்து போன‌ இருஜோடி விழிக‌ள்
மோதும் போது அங்கே
"உண‌ர்வின் பேர‌லை"
அந்த‌ ம‌ன‌தின் வ‌ருத்தங்க‌ள் - என்
ஆறுத‌ல் தேடி அலைவ‌தாய்
ம‌ன‌ அக‌ராதியில்
'புதிய‌ விள‌க்க‌ம்' பதிவாகும்!
க‌ண்க‌ளென்னும் க‌ருவிக‌ள் ம‌ட்டுமே
கொண்டு இத‌ய‌ தொழிற்சாலை
இய‌ங்கி கொண்டிருக்கும் !!!

***************************

உண‌ர்வுக‌ள் அத்த‌னையும்
ப‌ட்டினிப் போராட்ட‌ம் செய்யும்!
உள்ளுண‌ர்வு இது ச‌ரியா? பிழையா?
த‌ராசு முள்ளாய்
தடுமாறிக் கொண்டிருக்கும்!!

***************************

வார்த்தைக‌ள் புதிய
சிக்க‌ன‌ சித்தாந்த‌ம்
எழுதிக் கொண்டிருக்கும்!
உண‌ர்வுக‌ள், உற‌வுக‌ள் - என‌
பாழாய் போன‌ ம‌ன‌து
ப‌ழ‌ங்க‌தைகளை
பதிவு செய்து ஒளிப‌ர‌ப்பும்!!

************************

என்னைத் த‌விர‌ உல‌க‌ம்
முழுதும் ம‌கிழ்வ‌தாய்...
ஒரு வ‌ருத்த‌ப் போர்வை
மன‌தில் சட்டென‌ ப‌ட‌ரும்!!

************************

பெண்மையின் த‌வ‌ம்
ம‌ன‌ம் விரும்பும் ஆணின் நேச‌ம்...
எதிர்பார்ப்புக‌ள் எல்லைப் பிர‌ச்ச‌னை
செய்யும் எதுவ‌ரை முடிவ‌தென்று?
அவ‌னின் வார்த்தைக‌ள் கூட‌
வரலாறாகும் இவ‌ளின் அதிகார‌த்தில்...
தியாக‌ங்க‌ள் நித்த‌ம்
ஒரு யாக‌மாய் அர‌ங்கேறும்..

*******************************

ஒவ்வொரு நாளும் விடிவ‌து
'ஒரு யுக‌ம்'
க‌ன‌வு நூற்றாண்டுக‌ளை
விழிக‌ள் க‌ட‌ந்து வ‌ருவ‌தால்....

****************************

மன‌மெனும் குர‌ங்கு
தோல்வியையும் வெற்றியையும்
த‌ராசுத்த‌ட்டில்
மாற்றி மாற்றி
நிறுத்துப் பார்க்கும்!
எதிர்கால‌ம் எப்ப‌டியோ?
எதிர்பார்ப்புக‌ளோடு
ஒவ்வொரு முறையும்
பார்வை விப‌த்துக‌ள் நிக‌ழ்ந்து
கொண்டுதானிருக்கும்!

விபத்தின் பலனாய்
இத‌ய‌க் க‌ட்ட‌ட‌ம்
ஆடிக்கொண்டிருக்கும்
பலவீனத்தால் ......

************ <<முற்றும் >>*************


லஞ்சம்


ல‌ஞ்ச‌ ஒழிப்பு வாரிய‌ம்
மேல‌திகாரியை சந்திக்க‌
"ஐம்பது" ரூபாய் லஞ்சம்

அலுவ‌ல‌க‌ நேர‌ம் போலும்
அவ‌ச‌ர‌ க‌தியில்
மேக‌க் கூட்ட‌ம்!

"ஏணிப்படிகள்"

உச்சிக்கு போகும் வரை மதிக்கப்பட்டு
உயரத்தை அடைந்ததும் மிதிக்கப்படும்
ஏணிப்படிகளுக்கு ஒப்பாய் நல்லாசிரியர்கள்!
எனினும்,
ஒருபோதும் ‍‍ஏணிகள் அழுததில்லை‍
மாறாக,
ஏற்றிவிட்ட பெருமிதத்தில்....

Monday, March 23, 2009

"பயணக்குறிப்பு -1 "

தொடக்கமாய் சின்னஞ்சிறு
மழைத்துளி போதும்
ஒரு பேராழியின் உயிர்ப்புக்கு!
ஓங்கி நெடுதுயர்ந்த பசுங்காடு
பற்றியெரிய ஒற்றைத்
தீக்குச்சி போதும்

ந‌ம்பிக்கை கொண்ட‌
வாழ்க்கைப் ப‌யண‌ம்
த‌டைக‌ளைக் க‌ண்டு
அஞ்சுவ‌தில்லை...
ஆர‌ம்ப‌ம் எப்போதும்
அவசியமில்லை!
வெற்றி முடிவுகள் ம‌ட்டுமே
பொறிக்க‌ப்ப‌டும்
கால‌க் க‌ல்வெட்டில்...

"கதிரவன்"

உழைத்துக் களைத்த
கதிரவன்
சோம்பல் முறித்தான்
சிதறிய வியர்வைத் துளிகள்
விண்மீன்க‌ளாய்....

[வான்வெளிக் கவிதைகள் [3] ]

"முதிர் கன்னிகள்"

விடியாத இரவுகள்
அணையாத தாபங்கள்
மீளாத ஆசைகள்
புரியாத எதிர்காலம்
வாழ்க்கை முழுதும்
முற்று பெறாத
ஏக்க பெயரெச்சங்கள் .....
ஆயினும்
உறவுகளுக்காய்
மரத்துப் போன மனதுடன்
வாழ்க்கைப் பேரூந்தில்
"முதிர் கன்னிகள்"
சாத‌னைப் பெண்க‌ளாய்....

"இரண்டாம் உயிர்"

துப்பாக்கி முனையில்
என் குடும்ப‌ம் ....
ம‌ர‌ண‌ம் பெரிதா?
மான‌ம் பெரிதா?
த‌ன்னை த‌ந்து - எம்மை
காத்தாள் என் ச‌கோதரி!!
அந்நிய‌ன் தீண்டிய‌ தேக‌ம்
துற‌ந்து ஆவியானாள்‍-அந்த‌
தன்மான‌ த‌மிழ‌ச்சி !!
எங்க‌ள் தேச‌த்தில்
எதுவும் நிலையில்லை
சுவாச‌ம் உட்ப‌ட‌....
சூறையாட‌ப்ப‌டுவ‌து
உட‌மைக‌ள் ம‌ட்டும‌ல்ல‌
எங்க‌ள் பெண்டுக‌ளும் தான்...
ஒவ்வொரு முறையும்
கண்ணீர் ம‌ட்டுமே
சாத்திய‌மாகிற‌து ‍‍
என் சித‌றிய‌ குடும்ப‌த்தை
நினைக்கை‌யில்....
இன்றா? நாளையா?
என் மக்கள்
வாழும் நாள் யாவும்
மரண பயத்தில் ...
அந்நிய‌ தேச‌த்தில் அக‌தியாய்
இனமானம் காக்க
‍அவ‌ள் த‌ந்த 'இர‌ண்டாம் உயிர்' ....

Saturday, March 21, 2009

நீ- நான் -அவர்

எத்தனை முறை
முயன்றாலும் முடியவில்லை
நானும் நீயும்
பழகிய நாட்களை
நினைவு படுத்தும்
வடுக்களின் ஸ்பரிசத்தை....

அது போலவே....

எத்தனை முயன்றும்
முடியவில்லை
என் தந்தையின்
வேண்டுகோளை
மறுத்துரைக்க...

நீ- நான் என்பது
சுகமே - ஆனாலும்
நான் அவருக்கு சுவாசம் 

தனித்துவம் அணிகலன் ஆணுக்கு
மறுக்கவில்லை நான் - ஆனால் நீ
எடுத்ததெற்கெல்லாம் முரணாய் ...
எல்லாவற்றிலும் சமூகத்தோடு
இணைகோடாய்
இணைய மறுக்கிறாய்!

தலைமுறை இடைவெளி
இடையில் நான்
இரு தலைக்கொல்லி எறும்பாய்.....


நீயா? அவரா?
மனம் கேட்கும்
கேள்விக்கு பதில்
தேடித் தேடி
விடிகிறது என் இரவுகள்
உறக்கமின்றி....

Wednesday, March 18, 2009

"திருமணம் ஒரு சிறுகுறிப்பு "

இருமனம் இணைவதல்ல
திருமணம் !
திருமண சந்தையில்......
தட்சணையாய்
சில லகரங்கள் !
புன்னகைக்கு பதில்
பொன்னகை !
ஒவ்வொரு மாதமும்
முதல் தேதி வரும்படி
சமர்ப்பிப்பு - என
எல்லா ஒப்பந்தமும்
ஈடேறி நிச்சயித்த
ஒருவனுடன்
திருமணம் (!)
பாமரராய்
பெண்ணின் பெற்றோர் !!

பணம் வாழும்
போதும் வாழ்க்கைக்கு
பிறகும் -என்னும்
எதிர்கால் நோக்கத்தொடு.....

சாதித்த தெளிவோடு
மணமகன் வீட்டார் !!

ஆனால் படித்திருந்தும்
சமுதாய கோட்பாடுகளுக்கிடையில்
பலியாடாய் மணமகள் .....

சொர்க்கத்தில் அல்ல
திருமணங்கள் ரொக்கத்தில்
நிச்சயிக்கபடுகின்றன!!!
உலக மயமாக்கல் ,
சந்தை சீரழிவு,
பன்னாட்டு சந்தை சரிவு - என
எல்லாமும் புரிகிறது உனக்கு !
ஏன் புரியவில்லை
என் குடும்பம்
நீ கேட்கும்
தட்சணையால்
நசிந்து
போகும் என்பதை ?

" புதுக்கவிதை "

எதுகையும் மோனையும்
இடறி விழ
சந்தம்
சிதறி விழ
நிரல் நிரை
என எதுவும் விளங்காமல்
கருத்தை மட்டும்
மனதில் வைத்து
பிரசவிப்பது
" புதுக்கவிதை "

Monday, March 16, 2009

வான‌வீதியில்
கம்யூனிச சித்தாந்தங்கள்!
சுவரொட்டிகளாய்...
சித‌றி தெறித்த
துண்டுச் சீட்டுக‌ளாய்..
ரத்த சிவப்பாய்
அடிவானம்!
[வான்வெளி கவிதைகள் [2]]

Sunday, March 15, 2009

நெடிய‌தொரு ப‌ய‌ண‌ம்

வ‌ர‌வாய் ப‌ல உற‌வுக‌ள்!
செல‌வாய் சில‌ பிரிவுகள்!
ஈர‌மான‌ சில‌ நிக‌ழ்வுக‌ள்!
த‌னியாய்
வ‌லி சும‌ந்த‌ வ‌டுக்க‌ள்!

வானிலை மாற்ற‌ங்க‌ள்
போல்
வாழ்க்கை மாற்ற‌ங்க‌ள்!

இருப்பினும்...
நெஞ்சில் பார‌மாய்
இன்னும் இன்னும்....

வார்த்தையில்
தெளிவிக்க‌ முடியாத‌
ப‌திவுக‌ள்...

வ‌ண்ண‌த்துப் பூச்சி வ‌ருடிய‌ நிமிடத்தில்
என்னுள் வரைந்த‌ மவுன‌ ஓவிய‌மாய்
துளிர்த்து ம‌டிந்த‌
நம் காத‌ல்...

உன்னாலான‌ காய‌ங்க‌ள் வ‌லியெனினும் .....
அந்த ஒற்றை வழி பாதையில் - நீ
கூட‌ வ‌ந்த‌ சில‌ நாள்
ஞாப‌க‌ம்.....
அதுபோதும்
என் ப‌யண‌ம்
மேலும் தொடர ...

ஆயினும், நீ
என் கால ச‌க்க‌ர‌த்தின்
க‌ழ‌ன்ற‌ அச்சாணி!!
உனக்கு நான்
கிழித்து எறிந்த
நேற்றைய‌
நாட்குறிப்பு!!

ஏக்கம்

குறைந்த
நெருப்பில்
கொதிக்கும்
பால்!!!

தேர்வு

நிழல் சுகம்
நிஜம் வலி
எதை
நான் தேர்வது?

நீ

நீ
ஒரு சொல்!
எனக்குள்
இணைந்தாய்....
வாழ்வின்
அனைத்து
அத்தியாய‌ங்க‌ளுக்கும்
பொருளாய்...

விதிவிலக்கு

வண்ணத்து பூச்சி !
கூட்டுப் புழுவின்
பொறுமை.....
பரிணமிக்கும் வரை
எல்லா உயிருக்கும்
காத்திருத்தல்
சாத்தியம்
இயற்கையில் ....

ஆனால் மானுடம்
மட்டும்
விதிவிலக்காய்!!!

தூசு படுமுன்
இமை காக்கிறது
கண்மணியை ...

அனிச்சையாய்
எழும்பும்
தற்காப்பு கூட
ஏன்
எழுவதில்லை
இதயம் களவு போகயில்...





தனிமை

சன்னலோர முல்லைச்செடி
சலசலக்கும் தென்னங்கீற்று!

இரவு நேர தென்றல்
இளகிய வெண் பாகாய்
தண்ணிலவு!
நடுநிசியில்
கடிகார மணியோசை!

வ‌ண்டுக‌ளின் ரீங்காரம்
இர‌வ‌ல் ம‌டியாய்...
உன்னைக் காட்டும்
த‌லையணை!

இத்த‌னையும்
நேற்று வரை
உண்டென்றாலும்...

நீயின்றி
என்னுள்
எல்லாமும்
அந்நியமாய்....

Saturday, March 14, 2009

பௌர்ணமி இரவுகள்

மாதம் ஒரு முறை

மணமகள் ஊர்வலம்!

நட்சத்திர தோழிகள்

புடைசூழ

மணப்பெண்ணாய்

நிலாமகள்!

"பௌர்ணமி இரவுகள் "

[வான்வெளி கவிதைகள் .... ]

தோல்வி தருணங்களில்.......

க‌லங்கி தெளிதல்
இந்த
நதியின் வாடிக்கை
எனினும்
க‌லங்குதல் என்பது
எப்போதும்
என‌க்கு
ஒரு
ம‌ர‌ண‌ ஒத்திகை
ஆம்!
வெற்றியடையும்
வரை
எனக்கது
தற்காலிக மரணம்!!

Friday, March 13, 2009

முரண்

அரசியல் பிரமுகரின்
இறுதி ஊர்வலம்
கிராமத்து சாலைகள்
உயிர் பெறுகின்றன !!!

Sunday, March 8, 2009

சங்கமம்

சாதி கலவரம்
ரத்த பாட்டில்கள்
சாதி மாறுகின்றன

எனது பதிவுகள்

மரங்களின் மரணம் விறகாய்
இலைக‌ளின் ம‌ர‌ண‌ம் ச‌ருகாய்
மலர்களின் மரணம்
வாசனை திரவியமாய்

இயற்கையில்
மரணத்திற்குப் பின்
முழுதும் அழிவ‌தில்லை
தொட‌ரும் ப‌ய‌ண‌ம்
பிற‌ர்க்கு ப‌ய‌னாய்

வாழும் நாளில்
சில நிமிடமேனும்
பிறர்க்கு பயனாய்
வாழும் முயற்சியில்....

எனது பதிவுகள்

"உணர்வின் ஆகுதி"

தூக்கம் விழித்து
தலையணை நனைத்த
காதல்
சம்பிரதாய வார்த்தைகள் கூட
சரித்திரமாய் மாற்றிச்
சிலிர்த்த‌ காத‌ல்
அம்மா த‌ந்த‌ அன்பு
அப்பாவின் ம‌ரியாதை
உடன்பிறந்தோர் பாசமென‌
எல்லாமும் துச்ச‌மாய்
செய்த‌ காத‌ல்

எதிர்த்த‌ வீட்டு பெண்
என்ன‌வ‌ருட‌ன் நெருக்க‌மாய் பேசிய‌
நிமிட‌த்தில்
சாம்பலாய் .....

Thursday, February 12, 2009

விலை

கம்பியின் உச்சியில்
கழைக் கூத்தாடி
உயிரின் விலை
பத்து பைசா!!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!