Thursday, April 28, 2011

அவள் அவன்

பழகிய நாய்க்குட்டியை
வருடும் தொணியில்
பயணிக்கின்றன உன் கண்கள்
என்மேனி முழுதும்...

முகம் மறைக்கும் கார்குழலை
ஒதுக்கும் பாவனையில்
முகமெங்கும் உரசிச் செல்கிறது
உன் விரல் ஒரு
தேர்ந்த வினைஞனின்
லாவகத்தோடு...

ஆசையாய் சாய்ந்திருந்த
வன்தோள்களில் என்னிதழ்
பட்டுப்பட்டு அறுந்து போனது
நம்மைப் பிரித்திருந்த
கர்வமெனும் கண்ணாடியிழை!

அரைக்கிறக்கத்தில் உளரல்களுக்கு
வழிமொழிகிறது என் ஆன்மா
சுய தெளிவில்லாமல்...

இதுவரை கொண்டிருந்த
விரகத்தின் வடிகாலாய்
சண்டையிட்டுக் கொள்கின்றன
உன்னிதழும் என்னிதழும்...
ஒன்றையொன்று வெல்லத்துடிக்கும்
மற்போரின் நீட்சியாய்!

பேரூந்தின் திடீரென்ற குலுக்கலில்
தூக்கம் தெளிந்து ஆசைமுகம் நோக்க
இரு கொம்புகளுடன் கோரப்பற்களில்
சொட்டும் குருதியுடன் அகோரமாய்...
வறண்ட குதூகலத்தினோடு
வழக்கமான நீ!


Saturday, April 9, 2011

நிறுவுக நியதி குற்றமென்று!




எப்போதும் ஒருகோட்டில்
அடங்குதலில் உவப்பில்லை
திசைமாறி திசைமாற்றி
அறிவன அத்தனையும்
அறிந்துவர உத்தேசம்
நைந்த சிறகுகள்
உருப்பெற காத்திருக்கிறேன்!

செய்யாதே எனபதை செய்யெனவும்
செய்யென்பதை செய்யாதேயெனவும்
செவியுறுகின்றன எம்புலன்கள்!

பட்டாம்பூச்சிகள் மீதே கவனம்
ஒரு நாளின் சமபங்கை மனம்
திக்கின்றி அலைதலில் செலவிடுகிறது!
ஆற்றுப்படுத்த வேண்டாமென்பது
ஆறாம் அறிவுக்கு தற்போதைய கட்டளை!

ஒழுங்கற்று இருத்தலின் பயன்யாதென
கற்பித்துப் போனாள் கீழ்வீட்டுச்சிறுமி
அழுகையை காட்டிலும் அலங்கோலமாக்கல்
அத்தனை பிடித்தது எனக்கு!

சற்று நேரத்திலெல்லாம்
என்னறையின் அமைதியை
மழலையால் கிழித்துப் போட்டவள்
பிஞ்சு விரல்களின் மந்திரத்தால்
மாயங்கள் செய்யத்துவங்கினாள்.

சிதறித் தெளித்திருந்த திரவங்களிலெல்லாம்
வான்கோவும் வர்மாவும் தெரியத் துவங்கி
கிழித்தெறிந்த புத்தகங்களிலெல்லாம்
பைரனும் பாரதியும்
போதாதென்று புத்தன் வேறு
பொறுப்பாய் வந்து சொல்லிப் போனான்
வாழ்வென்பது இது தானென்று!

நானொரு பறவை போலே
உருமாறும் தருணம்
‘அம்மா’ நினைவு வர
அவசரமாய் ஓடி மறைந்தாள்.

படியிறக்கிப் போனபின்
வெறிச்சென்றானது
என் வீடும்
அவள் வாசம் படர்ந்த
என் மனதும்!

ஆனால் இப்போதும்
கண்கொள்ளாக் கனவுகளுடன்
காலச்சக்கரத்தில்
நைந்தயென் மென்சிறகுகள்
உருப்பெற காத்திருக்கிறேன்!


வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!