Saturday, December 3, 2011

நா

கந்தக பிழம்பொன்றின்
செறிந்த துளி
சிந்திய வேகத்தில்
கருகிப் போனது உறவு!

வைரம் பிரசவிக்க
கடவுள் தரும் அழுத்தத்தில்
கொள்கலன் விசும்பலோடும்
புறவிசை நெரிசலோடும்
குமுறியபடி எரியும் மனது!

தளும்பாத கோப்பைகளும்
நிரம்பி வழிகையில்
கட்டுடைந்தது நாக்கு
புலன்வழி அறிவும் சேர
மிருகமானது மனிதம்

நட்டுவாங்கம் இல்லாத
ருத்ர தாண்டவம்

திரண்ட ஒருதுளி கண்ணீரில்
அணைந்தது பிரளய நெருப்பு
ஆவியடங்கி சமவெளி விளங்க
இறுகிப் படிந்தது பாறையாய்...

புல்லோ பூண்டோ
விரவிக் கிடக்கும் சாம்பலில்
பரிணமிக்கும் ஏதோவொன்று
தொடங்க கூடும்
தன் வாழ்க்கையை
மாறும் வானிலைக்கு உகந்தபடி!


வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!