எனக்கும் அவனுக்கும்
யாதொன்றிலும்
கருத்தொற்றுமையில்லை
எனக்கு ஆத்திகமென்றால்
அவனுக்கு நாத்திகம்
நான் பாரம்பரியமென்றால்
அவன் நவீனம்
இசையெனில்
எனக்கு மெல்லிசை
அவனுக்குத் துள்ளிசை
நான் ஆதிக்கத்தை வெறுப்பவள்
அவனோ ஆணாதிக்கவாதியென்று
முழங்கித் திரிபவன்
இலக்கியத்திலும் கூட
சங்கத்தமிழென்றால்
பின்நவீனத்துவமென்று...
நாங்கள் இருவேறு துருவங்கள்
காதல் காமமென்ற
சராசரிகளில்லை
பாலின பேதமென்பதேயில்லை
தர்க்க மேடையே
எங்களின் இணைவுப் புள்ளி
சமூகப் பார்வையில்
புரிதலில்
ரசனையில்
ஏதொன்றிலும்
சமரசமில்லை
எனக்கான பாசமோ பரிதவிப்போ மெனக்கெடல்களோ
ஏதுமில்லாத நேயமிகு எதிரியென்று
உற்சாகமாயிருந்தேன் -ஏனெனில்
அன்பில் அதீதமென்றால் ஒவ்வாமையெனக்கு
சலித்துக் கொண்டாலும்
சிடுசிடுத்தாலும்
திட்டித் திருத்தினாலும்
எல்லாப் புலம்பலும்
அவன் முகவரிக்கே
காதல் கடிதங்களிலிருந்து
காதலன் முத்தம் வரை
சொல்லிச் சிரித்து
கைவசமிருந்த கொஞ்சமே கொஞ்சம்
ரகசியங்களையும் காலி செய்தாயிற்று
எதிரியிடம் சொல்வானேன்
யோசிக்கவேயில்லை
அவனும் தான்
அத்தனை இயல்பாயிருந்தது
உரையாடல்களனைத்தும்
வெற்றியின் மீது வெறியவனுக்கு
தோல்விகள் பிடித்தமில்லையாயினும்
அவனுக்கெனச் சிலமுறை
என்னையுமறியாமல்...
என் சின்னதொரு தோல்விக்கு
அவன் ஆதங்கப்பட்ட
அக்கணம் சபிக்கப்பட்டது
நண்பர்களென்றுணர்ந்தோம்
பிரிந்து விட்டோம்
அய்யோ!
கேட்க மறந்துவிட்டேன்
எந்த அட்சரேகையில் அவன் கலம்
பயணிக்குமென்று...
நேரெதிர் திசையில்
தொடங்க வேண்டும் நான்
உன் கோட்பாட்டை மாற்றியெழுது கலிலியோ
பூமி தட்டையாகவே இருக்கட்டும்!
மஞ்சளும் உப்பும் தோய்த்த
இறைச்சித் துணுக்குகள்
தோரணம் போல் கட்டப்பட்டிருக்கின்றன
காக்கைகள் அணுகாதவாறு
பெரியதொரு கழியுடன் காவலுக்குப் பெரியம்மா
தோலும் குடலும்
கத்தி பிடித்தவன் கூலிக்கு எடுத்துக் கொண்டான்
நான்கு கால்களும்
ஒரு தலையும்
நெருப்பில் வாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது
அம்மாவோ சித்தியோ
இரத்தத்தைப் பொரியல் செய்கிறார்கள்
அத்தைகள்
மாமிசத்தை அரிந்து கொண்டிருக்கிறார்கள்
பாக்குச் சுண்ணாம்போடு வெற்றிலையையும்
குதப்பிக் கொண்டிருக்கிறார்கள்
விருந்தினர்கள்
அமளிதுமளிபடுகிறது முன்பக்கத் தாழ்வாரம்
அரசியலும் சாதியும் மிதமிஞ்சிய சுயபிரதாபங்களும்
அலுப்புத் தட்டுகிறது
தூரத்தே சோம்பலாய் புல் மேய்கிறது
பங்குனித் திருவிழாவுக்கு நேர்ந்துவிட்ட வெள்ளாடு
இன்னொரு நாளும் இதே காட்சிகள் அரங்கேறலாம்
கேள்விக்குறிகளாலொரு பிரமீடமைத்து
உள்ளே பிரபஞ்சத்தின் பதில்களை
உறங்கச் செய்திருக்கிறேன்
ஐந்து
நான்கு
மூன்றென
இறங்கு வரிசை
இடுக்குப் புள்ளிகளில்
ஒன்று உச்சத்திலிருக்கிறது
மூலிகைச் சாற்றில்
வளர்ந்தபடியிருக்கிறது
பதில்களின் நகங்கள்
பதப்படுத்தப்பட்ட
மம்மிகளுக்குண்டான கரிசனத்தோடே
முப்புறமும் சூழப்பட்டிருக்கிறது
அப்பதில்கள்
அதன் பக்கத்தில் புதைக்கப்பட்டிருக்கும்
ஆபரணங்களுக்காக
எவனேனுமொருவன் நாளை
துயிலெழுப்பலாம் மரணித்தவற்றை...
பூர்வ ஜென்ம ஞாபகத்தில்
பேராசைச் சிதைவுகளில்
முளைவிடும் விதைகளுக்கு
உரமாகியிருக்குமந்த
கேள்விகளைத் தேடத்துவங்கலாம்
மீண்டுமொரு துவக்கம்
அழிவுகளிலிருந்து...
உயரப் பறத்தலில்
உச்சம் தொடுகிறது
உயர்சாதிப் பருந்து
தனக்கிருக்கும் பலத்துக்கு தக்கவாறு
எம்பிச் சிறகசைக்கிறது ஊர்க்குருவி
தோற்ற முயற்சிகளுக்கு
எள்ளி நகையாடுகின்றன
மனிதக் குயுக்தி புகுந்த சில மிருகங்கள்
தனக்கும் சிறகிருப்பதை
மறக்கடிக்கும் எதையும்
செவிமடுப்பதில்ல பறக்கத் துடிக்குமது
வக்கில்லாத முன்னோடிகளை
ஏறிட்டும் பார்ப்பதில்லை
ஆமாம், அதற்கெதற்கு பருந்தாகும் நிர்பந்தம்?
அது அதுவாகவே இருக்கட்டும்
வேண்டுவதெல்லாம்
வேடர்கள் கண்ணியில் சிக்காத
சுதந்திர வாழ்க்கை
பறக்கப் பறக்க
வசமாகும் வானம்
களைத்து பூமி தொடுகையில்
கண்ணுக்குப் புலப்பட
ஏதோவொரு நீர்நிலை
இரப்பை நிறைய
ஒன்றிரண்டு தானியங்கள்
மக்கிய மரத்தினையும் உபத்திரவிக்கும் புழுக்கள்
மறந்தும் பிறவுயிர் பிரிப்பதில்லையாதலால்
மீந்த மாமிசம்
இப்படியே இருந்து விட்டுப் போகட்டும்
மூக்கு வியர்க்கும் வியாதிகளில்லாது
இன்னும் இன்னும்
உயரப் பறத்தலின் கனவோடு...
தூறல் நனைத்த கார்காலத்தில்
அதோ
அந்த வானவில்லை நோக்கி
அம்பெனப் பாய்கிறதந்த மாமிசப்பக்ஷி!
உரிமையுடன் உன்னைக்
கலைத்துப் போடுகிறேன்
கிழித்தெறிகிறேன்
குதறியெடுக்கிறேன்
சபிக்கிறேன்
வசைபாடுகிறேன்
பேசத் திராணியற்று
முடிவிலுன் தோள் சாய்கிறேன்
கோபமேயில்லையா
இன்னுமேன் நீடித்து
இழுத்தடிக்கிறாயென் ஆயுளை?
கடவுளானபின்
காதல் கொள்வேனோ
என்னவோ
இப்போதைக்கு
சன்னலோர இருக்கையில் நான்
பக்கத்தில் நீ
எந்த திருப்பத்திலும்
சாத்தானாக மாறக்கூடும்
அபாயத்தில் நான்
எதற்கும் எச்சரிக்கையாயிரு!
தளரும் என்னைத் தாங்கிப் பிடிக்கையில்
எங்கேனும் கூர்நகம் பட்டவை
ஏதோவொரு மதத்தின்
சின்னமாய் உருமாறலாம்
பக்தியின் புரிதல் அப்படி...
கடவுளைத் திட்டாத
கவிஞரில்லை
மரபை உடைப்பானேன் ?
திருப்பித் திட்டாத
கருங்கல் கதாப்பாத்திரம்
வாங்கிக் கொள்ளட்டும்
படைத்ததின் பலனை
நேற்று விட்ட இடத்திலிருந்து
தொடரப் போகிறேன்...
விசுவாசிகளே விலகிச் சொல்லுங்கள்
எமக்குத் தனிமை அவசியம்
விளக்கொளி
தூபம்
சந்தனம்
மலர்கள்
இதோனோடான ஓர்மையில்
வேதங்களேதும் ஓதாது
யோகம் கைவரப் பெற்றபின்
அபத்தமான கேள்விகளுமில்லை
பதிலுக்கான
காத்திருத்தலுமில்லை
அதன் போக்கில்
ஓடிக் கொண்டிருக்கிறது
சண்டிக் குதிரை
குளம்படி யாவும்
ஒரே நேர்கோட்டில்
இருக்கிறாயா
இல்லையா
எனக்குள் பகுதறிவுசார்
கேள்விகளேயில்லை
நான் புலம்பும் போது
நீ இருந்தாய்
இப்போதைய நிலவரம்
எனக்கும் தெரியாது
காற்றோ
நெருப்போ
விழுங்கிவிடும்
பிரித்து வைத்த
கற்பூரத்தை...
சொற்ப நேரத்துக்குள்
கடவுளுக்கு மரியாதையும்
கண்களுக்கு ஆரத்தியும்
செலவிட்ட காசுக்கு
நேர் செய்த கணக்குமாக...
வீணையின் நாதம்
எப்போதும்
அரற்றும் வயிற்றோடு
நின்று ஜெயிப்பதில்லை
ஆம்!
பசியில் செவியுணர்வதில்லை
சோதியா ஜோதியா
என்பதிலெல்லாம்
பெரிதாயென்ன வந்துவிடப்போகிறது
அன்றாடத் தேவைகள்
அவர் வரைவில்
உழைப்பிற்குத் தக்க கூலியும்
மங்கும் பார்வைக்கு
ஒரு கைப்பிடிச் சோறும்
பலகோடி ஒளிவெள்ளம்
இருண்டு விட்ட குடிசைக்குள்
சேரிகள் ஒளிபெறட்டும் முதலில்
அதன்பின்
கொண்டாடிக் கொள்ளுங்கள்
அந்நிய முதலீட்டுக்கு
அரசாங்கத் திருவிழா!
பறந்து கொண்டிருக்கிறதோர்
தாய்ப்பறவை
விரலிடுக்கில் வேட்டைப்பொருள்...
அம்மாவுக்குக் காத்திருக்கும்
அன்றுதித்த பச்சிளம் பறவைகளோடு
விரிந்து தான் கிடக்கிறது
வழிநெடுகிலும்
அதன் கூட்டைப் போல்
ஆயிரம் கூடுகள்...
நொறுங்கிய ஓட்டில்
சிக்கிக் கொண்ட மெல்லிறகை
மீட்கும் பிரயத்னங்களிலிருக்கும்
தன் குஞ்சைப் பார்த்ததும்
பரபரப்போடு கூடடைகிறது அப்பறவை!
அலகால் சிக்கெடுத்து
வாய் பிளக்கும் அத்தனைக்கும்
உணவூட்டுமதற்கு
எப்போதும் நினைவில்லை
பசியோடிருக்கும் பக்கத்துக்கூடு!
மீன் தொட்டி மீன்களிடம் நேசம் வைக்கிறேன்
பூந்தொட்டியில் தோட்டம் வளர்க்கிறேன்
படிப்பதெல்லாம் சோசலிசம்
வாழ்வதென்னவோ அடிமை வாழ்க்கை
சில நேரம் சீறியெழுகிறேன்
சில நேரம் முகம் மூடி அழுகிறேன்
சிலருக்கு மகுடியும்
சிலருக்கு வீணையும்
எப்போதும் உண்மையுரைக்கப் பறையோடும்
பல்முக வித்தகனாய்
எண்ணத்தின் வீச்சுக்களுக்கேற்ப....
சாத்தானாக வாழ்கிறேன்
கடவுளைச் சபிக்கிறேன்
மனிதர்களுக்குப் பயப்படுகிறேன்
நான் யாரென்கிற தெளிவிற்கு
நான் யாரையும் சார்ந்திருப்பதில்லை
எல்லா நேரத்திலும்
எனக்குப் பிடித்தமான நான்
என்பதே என் வரைவு
என் ரகசியங்கள் அமிழ்ந்து நின்ற கிணறுகள்
கடலோடு கலந்த அந்த நிமிடத்திலும்
போட்டு வைத்த கல்லில் எத்தனை சேதமென்று
கணக்கிடவில்லை
தேர்ந்தயிடம் தவறென்று மு்றையிடாது
சிரித்தபடி நகர்ந்தேன்
இப்போதும் இப்படித் தான்
பைத்தியமென்றும்
பிச்சியென்றும்
சொல்லாமல்
மனுசியென்று சொன்னால்
கூசிப் போகும் என்னுடல்...
சாத்தானாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்!
எதை நோக்கிச் செலுத்தப்பட்டது
அந்தச் சொல்
உலுக்கியெடுக்கும் பிரளயங்கள்
உள்ளடக்கி
எய்யப்பட்டச் சொல்லம்பு
ஆட்டம் கண்டதென் அஸ்திவாரம்
பாவங்கள் பாவனைகளற்ற
ஆழ்மனப் பரிதவிப்போடு
பரிமாறப்பட்டதென் இலையில்...
ஆயிரம் சொல்தாங்கி
அபூர்வ சிந்தாமணி நான்
வலு பொருந்திய பதமதன்
கணம் பொறுக்காது
கலங்கி வழிகிறது கண்ணீர்
நெஞ்சமெங்கும் ஆர்ப்பரித்து
ஓடுகிறாய்
இதயத்தின் குறுக்குவாட்டு நரம்பில்
பிணைக்கப்பட்டிருக்கிறது
நின் அசுவத்தின் கடிவாளம்
அலைவுகளுக்கெல்லாம் புத்தம்புதிதாய்
வலியோடான மென்னதிர்வுகள்
தம்புராவின் மீட்டலையொத்து..
சிந்திக்கொண்டிருக்கிறது
பேரிசைச்
சொட்டுச் சொட்டாய்
இணையும் புள்ளிகளைப் பொறுத்து
வட்டமென்றும்
சதுரமென்றும்
செவ்வகமென்றும்
அறுங்கோணமென்றும்
அறிதலின்படி பிரபஞ்சம் வடிவங்களாலானது
அதனதன்
சுற்றளவு
பரப்பளவுகளை
கணக்கிடுவதே வேலையாயிருந்தது
அளவீடுகள் தப்பிப் போய்ப்
பட்டாம்பூச்சியின் இறக்கையில் விழுந்தேன்
தேனுண்ட மயக்கத்தில்
திளைத்திருந்த அதன் மென்னுடம்பு
அதிர்வில் உயரப் பறக்கலாயிற்று
மந்திரப் பாயில் பயணிப்பது போல
சறுக்கியும் தவழ்ந்தும் விரிந்த
அதனுலகில் அலகுகளேதும்
நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை
இருளடையாத ஆன்ம வெளிச்சத்தில்
எந்த சுடருக்கும் நிழல்களேயில்லை
ஒளிபொருந்தியப் பயணமொன்றில்
விண்மீன்கள் நானென்ற பிரம்மையிலாழ்ந்தேன்
பிரபஞ்சம் சுதந்திரமயமானது
எண்ணிலடங்காப் புள்ளிகளிருந்தும்
வடிவங்களற்ற அதனுலகம்
பிடித்துப் போய் வாழ்க்கை முழுவதற்குமாய்
அதனோடே வாசம் செய்ய
நானுமொரு புள்ளியாய்
வாழ்ந்து மறைய
வலுவானதொரு
காரணம் தேடிக் கொண்டிருக்கிறேன்…
விம்மலுக்கு நடுவே கண்கள் சிவக்க கேவலும் புலம்பலுமாய் விரலின் தடம்பதிந்தக் கன்னத்தில் கோடுகோடாய் ஈரக்கோடுகள் சல்லடைக் துளைகளில் வழிந்த நேசமும் அப்படியும் ஏதாவது மீண்டதா என்கிற பரிதவிப்பும் ஒரு நீண்ட நெடுங்கதை...
விழியெதிரே நடந்தேறியும்
நிகழ்வில்
அவர்தம் உலகமென்று
தேங்கிய சாலைநீர்
புடவை படாமல்
பாதுகாப்புணர்வோடு விலகிப்போகமுடிகிறது...
’இறைவனுக்காக’
முத்தமிட்டுக் கோப்பை உயர்த்தி
பெரும் சரீரம் மெல்ல அசைய
நடனமொன்றை நிகழ்த்தினான்
பலிபீடத்தில் கிடத்தப்பட்ட
உயிருள்ள படையல்
உயிரற்றுப் பின்னடங்கியது
விருந்துக்குக் காரணமான வெற்றியில்
இறந்த எழுபதுபேருக்கும்
உயிரோடிருக்குமிவன்
ஒற்றைப் பிரதிநிதி
போதையிற் சிவந்த கண்களும்
மதுக்குடுவைத் தாங்கிய கைகளுமாய்
இந்திராதி தேவதைகள் யாவரும்
மன்னவன் சபையில்...
கச்சைகள் மறைத்த
பாகங்கள் தவிர்த்து
அத்தனையும் விருந்தினர் பார்வைக்கு
நிரம்பாத கோப்பைகளனைத்தும்
நிரம்பித் தளும்பின
கொட்டும் முழக்கங்கள் செவி நிறைக்க
மகுடம் சிரசேறியது
அதோ
அந்த மூன்றாம் அறையில்
சிப்பாயின் மனைவியை வன்புணர்கிறான்
விருந்துக்கு வந்தவன்
விசப்பற்கள் தடம்பதித்த பெருந்தனங்கள்
அவள்தம் பாலகன் சவைக்கையில்
பால் தருமா கொடும்நினைவின் விசம் தருமா?
யுத்தம் குத்தமென்பவனை
கழுவிலேற்றுங்கள்
ஆதிக்கவெறி நரம்பிலேறி
பல நூற்றாண்டுகளாயிற்று
கூனோடு எத்தனை நாள் வாழ்வது?
வரலாற்றில் ராஜாக்கள் வாழ்கிறார்கள்
தந்திரிகள் மெச்சப்படுகிறார்கள்
ஒன்றோயிரண்டோ மாவிரர்கள்
மீதமிருக்கும் சேனையிலெவரும்
வெளிச்சம் காண்பதில்லை
எதற்கென்பதில்லை
ஏனென்றும் கேட்பதில்லை
பதில் சொல்லவும் பொறுப்பிருப்பதில்லை
வன்மம் தலைக்கேறும் போதெல்லாம்
மிதிபட அடிமைகள் வேண்டும்
அரசவையில் சாமரம் வீசும்
தமக்கையின் நினைவு வர
தோற்றுப்போன விசுவாசத்தோடு
வீதியிலிறங்கினான் வெற்றிக்கு வித்திட்டவன்...
சௌஜன்யமாய் பழகத் தெரியவில்லை
முகஸ்துதியாய் பேசத் தெரியவில்லை
புறம் பேச கேட்க பிடிப்பதேயில்லை
ஆதாயத்தோடு எவரையும் அனுகப்பிடிக்கவில்லை
என்னுள் ஆதாயம் தேடுமெவரையும் அனுமதிப்பதில்லை
அதீத அன்பில் குழைவதும்
கண்ணுக்குத் தெரியாத அடக்குமுறைகளில்
சிக்கித் திணருவதும்
எப்போதும் உவப்பில்லை
நடக்கும் பாதையில்
எவரோடும் மோதாமல்
சிரித்த முகத்தோடு எம்மிடம்
சேர்வதே இயல்பென்றாயிருக்கிறது
என் சுதந்திரம் என்னுடன் இருக்கிறது
இதைப் படிக்கும் நீங்களெனக்கு
தாந்தோன்றியென்று பெயரிட்டால்
என் இதழிடையில் இன்னுமொரு புன்னகை பூக்கும்
மனநோயாளியென்றால் புன்னகை
சிரிப்பாய் மாறவும் வாய்ப்பிருக்கிறது...
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!