Saturday, December 29, 2012

பலியின் விமரிசை விருந்தென்றறிக

மஞ்சளும் உப்பும் தோய்த்த
இறைச்சித் துணுக்குகள்
தோரணம் போல் கட்டப்பட்டிருக்கின்றன
காக்கைகள் அணுகாதவாறு
பெரியதொரு கழியுடன் காவலுக்குப் பெரியம்மா
தோலும் குடலும்
கத்தி பிடித்தவன் கூலிக்கு எடுத்துக் கொண்டான்
நான்கு கால்களும்
ஒரு தலையும்
நெருப்பில் வாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது
அம்மாவோ சித்தியோ
இரத்தத்தைப் பொரியல் செய்கிறார்கள்
அத்தைகள்
மாமிசத்தை அரிந்து கொண்டிருக்கிறார்கள்
பாக்குச் சுண்ணாம்போடு வெற்றிலையையும்
குதப்பிக் கொண்டிருக்கிறார்கள்
விருந்தினர்கள்
அமளிதுமளிபடுகிறது முன்பக்கத் தாழ்வாரம்
அரசியலும் சாதியும் மிதமிஞ்சிய சுயபிரதாபங்களும்
அலுப்புத் தட்டுகிறது
தூரத்தே சோம்பலாய் புல் மேய்கிறது
பங்குனித் திருவிழாவுக்கு நேர்ந்துவிட்ட வெள்ளாடு
இன்னொரு நாளும் இதே காட்சிகள் அரங்கேறலாம்

1 comment:

vimalanperali said...

அரங்கேறுகிற காட்சிகள் ஆடுகளுக்கு தெரியவில்லை.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!