Monday, December 3, 2012

எனக்கு ராஜாக்கள் பிடிப்பதில்லை


’இறைவனுக்காக’
முத்தமிட்டுக் கோப்பை உயர்த்தி
பெரும் சரீரம் மெல்ல அசைய
நடனமொன்றை நிகழ்த்தினான்

பலிபீடத்தில் கிடத்தப்பட்ட
உயிருள்ள படையல்
உயிரற்றுப் பின்னடங்கியது

விருந்துக்குக் காரணமான வெற்றியில்
இறந்த எழுபதுபேருக்கும்
உயிரோடிருக்குமிவன்
ஒற்றைப் பிரதிநிதி

போதையிற் சிவந்த கண்களும்
மதுக்குடுவைத் தாங்கிய கைகளுமாய்
இந்திராதி தேவதைகள் யாவரும்
மன்னவன் சபையில்...
கச்சைகள் மறைத்த
பாகங்கள் தவிர்த்து
அத்தனையும் விருந்தினர் பார்வைக்கு
நிரம்பாத கோப்பைகளனைத்தும்
நிரம்பித் தளும்பின
கொட்டும் முழக்கங்கள் செவி நிறைக்க
மகுடம் சிரசேறியது

அதோ
அந்த மூன்றாம் அறையில்
சிப்பாயின் மனைவியை வன்புணர்கிறான்
விருந்துக்கு வந்தவன்
விசப்பற்கள் தடம்பதித்த பெருந்தனங்கள்
அவள்தம் பாலகன் சவைக்கையில்
பால் தருமா கொடும்நினைவின் விசம் தருமா?
யுத்தம் குத்தமென்பவனை
கழுவிலேற்றுங்கள்
ஆதிக்கவெறி நரம்பிலேறி
பல நூற்றாண்டுகளாயிற்று
கூனோடு எத்தனை நாள் வாழ்வது?

வரலாற்றில் ராஜாக்கள் வாழ்கிறார்கள்
தந்திரிகள் மெச்சப்படுகிறார்கள்
ஒன்றோயிரண்டோ மாவிரர்கள்
மீதமிருக்கும் சேனையிலெவரும்
வெளிச்சம் காண்பதில்லை

எதற்கென்பதில்லை
ஏனென்றும் கேட்பதில்லை
பதில் சொல்லவும் பொறுப்பிருப்பதில்லை
வன்மம் தலைக்கேறும் போதெல்லாம்
மிதிபட அடிமைகள் வேண்டும்
அரசவையில் சாமரம் வீசும்
தமக்கையின் நினைவு வர
தோற்றுப்போன விசுவாசத்தோடு
வீதியிலிறங்கினான் வெற்றிக்கு வித்திட்டவன்...

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!