Monday, September 24, 2012

நிலாச்சோறு


தோட்டத்தில் ஒரு பெட்டைக்கோழி
மண்ணைக் கிளறி
இரை தேடிக்கொண்டிருந்தது
கிடைக்கும் இரையை
அலகால் கொத்துவதும்
அதைப் பொடித்துக் குஞ்சுகளுக்கு
பங்கிடுவதுமாய்...
சட்டென நினைவுக்கு வந்தாள்
மாதக் கடைசிகளில்
நிலாச்சோறூட்டும் அம்மா!

நந்தனார்

கனன்ற நெருப்பில்
சிதைந்து போனது
புலையர்பாடி அடையாளங்கள்
சிதையின் புகையில்
கலந்த ஆன்மா
எவரையும் சட்டைசெய்யாமல்
சிவனையடைந்தது
நந்தன் அடியாரானது தெரியாமலே
ஆன்மசுத்தி மந்திரங்கள் முழங்கியபடியிருந்தனர்
தில்லையம்பதியின் வேதவிற்பனர்கள்
முன்னதை போல இதற்கும்
சிலையென சிரித்தபடியிருந்தான்
சித்தனான சிவக்கடவுள்!

Saturday, September 22, 2012

முன்னோடிகள்

மழிக்கப்பட்டத் தலையுடன்
காவி அங்கிகள் போர்த்தி
தழையத் தழைய நடந்து போகிறார்கள்
மடாலயச் சிறுவர்கள்
உச்சாடனங்கள் செய்தவாறு
வெற்றுக்கால்களுடன்
எறும்பென ஊர்கிறார்கள்
மனிதம் புழங்காத அப்பெரும்மலை
கூச்சத்தால் சிலிர்க்கிறது
கடைசிச் சிறுவன் மலையுச்சி
தொட்டவுடன் கர்ஜிக்கிறான்
அடிவாரத்தை நோக்கி
“வாருங்கள்!
பாதை  செய்தாகிவிட்டது!”
பிஞ்சுக் கால்கள் விரிந்த்துவிட்ட
இரத்தக் கம்பளங்களில்
பயணிக்கிறார்கள் அவர்கள்
உறுத்தலேதுமின்றி!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!