Tuesday, February 1, 2011

ஒரு நதி



பாடும் பறவையொன்றின்
குரல்வளை கிழித்த அம்பு
வேடனின் குடிலுக்கு
ஒரு கோப்பைக் கறி 
இரு அகப்பை குருதி
மாமிசமணத்தோடு பரிமாறிய
ருசியான உணவாகியிருக்கலாம்.


தொலைநோக்கி குறிபார்த்து
வில்வளைத்தவன் வீரம்
உயிரொன்றை அம்பெய்து
தனதாக்கிய ஆளுமை
எல்லாம் சரி,

மரிக்குமுன்னிருந்த இன்னிசையும்
கானப் பறவையதன்
இசை நவின்ற குதூகலமும்
கொடும் வேடனின் நாவறியுமா?
இல்லை
அதனுயிர் தொட்டுப் பிரித்த
வில்லம்பறியுமா?

**************

ஓடுவதில் களைத்த நதியொன்றின்
பயணம்
போதுமென்ற புள்ளியில்
ஆழ்துளையிறக்கி தன்னிருத்தலை
பதிவு செய்கிறது.

ஊறிப்போதலினுள் உவப்பெய்தா
அந்நதியோ
பயணத்தில் லயித்து
தேக்கி வைத்த
புள்ளிகளுக்கிடையில்
தொடர்ந்தபடியிருக்கிறது
வாய்க்கால் வாயிலாக...


வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!