Monday, August 4, 2014

விடியல் பொழுதுகள்

மௌனம் குடித்து விடியும் இரவுகளில்
சுவர்க்கோழியோ விட்டில் பூச்சியோ
சிறகிழந்த ஈசல் கூட்டமோ
இசை சேர்த்து
இருள் நகர்த்துகின்றன
பெருமழைக்குப் பின்னான
மின்வெட்டு இரவில்
ஜதியோடு சொட்டும்
இலையின் துளியும்
இன்னுமொரு வாத்தியம்
வார்த்தைகளற்ற வெளியில்
எழுதப்படும் கவிதைகள் யாவும்
மின்னல் வெட்டுப் போல்
மனம் வெட்டி மறைகின்றன
வளையிழந்த பெருச்சாளியின்
உலவுதல் வேட்டை
பூனையொன்றின் பதுங்கல் நாடகம்
நனைந்த உடலை உதறும் தெருநாய்
எல்லாமும் பிரளய நிசப்தத்தில்
மெல்ல எறிகின்றன
சத்தங்களை....
லயம் கெட்டோ
சுருதி பிசகியோ
வாசிக்கிறது காற்று
புரியாத மெட்டுக்கு
வலிந்து வரியெழுதுகிறது
கவி மனது
அபஸ்வரத்திலுமொரு சுகம்
யாரோ எதுவோ
என்னோடு விழித்திருக்கிறது
கொன்றை மலரின் தூவலுக்கும்
பன்னீர்ப் பூக்களின் பரவலுக்கும்
கொடிமல்லிப் பூக்களின் மலர்தலுக்கும்
விடியும் பொழுதுகள்
என்னவாகின?
சாம்பிராணி புகைமூட்டத்தில்
மஞ்சள் மணக்க
தாளிதமும் காப்பியும்
சேர்ந்து மணக்கும்
மழைக்கால விடியல்
எப்போது வாய்க்கும் ?
மௌனங்கள் அச்சமாகவும்
சல சலப்பைத் துணிவெனவும்
உருவேற்றி
துருப்பிடித்திருக்கிறது
நகர வாழ்க்கை
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!