Saturday, August 27, 2011

நண்பன்

கவலையில்லா மனம்
வேண்டுமெனக் கேட்டேன்

இறப்பில்லாத வீட்டில்
யாசித்து வரப் பணித்த
கௌதமன் நினைவு
வருகிறதென சொல்லிச் சிரித்தாய்

தன்னம்பிக்கை உலர்ந்த
பொழுதொன்றில் தளர்ந்து
உன்மடி சாய்ந்தேன்

மில்டனின் கதை சொன்னாய்
கண்கள் ஒளிரப் பெற்றேன்

துரோகத்தின் நிழல் படர்கையில்
சுடுமணல் தொட்ட கயலாய்...
எல்லா நேரத்திலும்
கடல் சேர்த்த கடவுள் நீ!

தோழியின் பிரிவு சொன்னேன்
சொல்லொணா துயரென
அரற்றினேன்

ஓஷோவின் புத்தகங்கள் தந்தெனக்கு
இருத்தலின் நிலையாமை
உணரச் செய்தாய்

ஒட்டாத சமூகம் பற்றி
உதவாத கலாச்சாரம் பற்றி
இயலாத என் நிலை பற்றி
அங்கலாய்த்த போழ்துகளில்

மென்சிரிப்பொன்றை உதிர்த்தவாறே
நகர்ந்து விடும் மெல்லிய மௌனத்தில்
கற்றுத்தீரா பாடங்கள் இன்னுமுண்டு!

தண்டவாளங்களின் காதல்
சொன்னாய்

துக்கம் துச்சமெனுமளவு
உலகம் பகிர்ந்தாய்

வெற்றிகள் வாங்கிவர
என்னைச் செதுக்கித் தந்தாய்

உன்னாலெனக்கு
கவிஞர்கள் பலரும்
கவிதைகள் பலதும்
காட்சியாய் கருத்தாய்
வாய்க்கப் பெறினும்

இன்று வரை நீ
ஆண் என்கிற அந்நியமற்று
மனதுக்கு நெருக்கமாய்
நிஜத்தில் தூரமாய்

எதிர்பார்ப்பில்லா நட்போடு
எனக்கான துடிப்போடு

நண்பனாய்...




Monday, August 15, 2011

வாழ்க பாரத மணித்திருநாடு! வாழிய வாழியவே!

சுதந்திரப் பயிர்

”தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?
எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?
இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?
வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?எந்தை சுயா
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?
இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?
நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே”

-பாரதியார்

தலைகீழாக தொங்க விடப்பட்டு,சப்த நாடிகளும் அதிர பிரம்புக் கழிகளினால் அடிகள் ஒருபக்கம். வசவுகளோடு விசாரணை மறு பக்கம். வாய் வழி மலம் வருமளவு சித்திரவதை அனுபவித்த போதும் கூட,தன்னிலை மறந்த நிலையிலும் வந்தேமாதரம் என்றாராராம் எம் மண்ணின் தியாகியொருவன்.

பரங்கியரோடு போட்டியிட்டு, அவருக்குச் சமமாய் கப்பல் விட்டு தன்மானம் காத்தவொருவர் செக்கிழுத்து மடிந்தாராம். வாழ்வின் பிற்பகுதியில் தொழு நோய் பீடித்து மடிந்தாராம் அவர் தம் தோழர்.

வெயில் சுட்டுக் கருத்த தேகத்தோடும், வேர்வை வடியும் மார்போடும் கோவணம் அணிந்த அரைமனிதனைக் கண்டு,  தன் மேலாடை துறந்து கதராடை கொண்டானாம் ’பாரிஸ்டர்’ பட்டதாரியொருவன்!

தன்னைக் காத்து மண்ணை காட்டிக் கொடுக்க விரும்பாத விடுதலைப் போராளியொருவன் தன் பற்காளாலேயே தன் நாவை துண்டித்துக் கொண்டானாம்.

பீரங்கிகள் முழங்கி துப்பாக்கிகள் துவம்சம் செய்த போதும் மண்டியிடாமல் வாளேந்தி நின்றானாம் என் தாய் மண்ணின் மைந்தனொருவன்.கப்பம் கட்டாத குற்றத்திற்கு துரோகியென குற்றம் சாட்டி தூக்கிலிட்டு கொன்றாராம் பரங்கியர்.

அந்தமானின் தீவுகள் தோறும் மணாலோடு மணலாய் மக்கி போன எம்மண்ணின் மைந்தர்கள்.அம்மை கண்டால் கடலில் எறிவாராம். சிகிச்சைகளின்றி சாவினை எதிர்கொண்ட நாளிலும் கூட சுதந்திர கீதம் எழுதினராம். பொய்யில்லை சாட்சிகள் உண்டு. ஜெயில் கம்பிகளும் குருதி படிந்த விசாரணை அறைகளும் சாட்சிகளாய் இன்னும் உண்டு.

சாவையே நேசிக்கும் உறுதி எவருக்கு வரும்? அதுவும் எப்படி பட்ட உறுதி? ஜாலியன் வாலா பாக் படுகொலைகளின் ரத்தம் படிந்த மண்ணை பார்த்துப் பார்த்து தன்னை போராளியாக்கிக் கொண்டவனின் உறுதி. தூக்குக் கயிற்றையும் முத்தமிட்டு மடிந்தவன் இல்லை இல்லை வீரத்தின் வித்தாய் இங்கு புதைந்தவன்.

200 வருடங்கள் அடிமை வாழ்க்கை. எங்கேனும் எப்போதோ சீறிப்பாயும் ஒரு எதிர்ப்பு.ஊறிப்போன அந்நிய மோகம். இப்படியிருந்த நாட்டை வீரமுழக்கமிட்டு தட்டியெழுப்பிய தியாகிகள் எத்தனை?

சோம்பிக் கிடந்தவரை தட்டியெழுப்பிய கவிதைகள் எத்தனை? அதற்கெனவே பலியான உயிர்கள் எத்தனை?

எண்ணிலடங்கா ....

தியாகங்களும் புரட்சிகளும் போராட்டங்களும்

மிதவாதமாய் தீவிரவாதமாய்

உண்ணாவிரதமாய்-போராட்டமாய்-புரட்சியாய்

எப்படியோ தாய்திரு மண்ணிற்கான பலியிடல்களும் சரணடைதல்களும்!

எதுவும் எளிதாய் கிடைத்திடவில்லை.

இறையாண்மை பற்றியும் - பொறுப்பின்மை பற்றியும் -சாதி மத பிரிவினை பற்றியும்-வலுவிழந்த அரசியல் கட்டமைப்பு பற்றியும் குறை கூறிக்கொண்டே காலம் கழிக்கும் மக்களுள் ஒரு சாரார் எப்போது உணர்வார்? குறையில்லாத ஜனநாயகம் உண்மையில் சாத்தியமேயில்லை. அதை மாற்ற நாம் என்ன செய்தோம் என்பதே கேள்வி! காந்தியை பிடிக்காதென்பதை தன் தனித்தன்மையாக எடுத்துரைப்போரும் இங்குண்டு. போஷின் செயல்பாடுகளை விமர்ச்சிப்பவரும் இங்குண்டு.

அவர்க்கெல்லாம் பதிலாய் ஒரு கேள்வி..,

“விமர்ச்சிக்க சுதந்திரம் பெற்றாய் பதிலாய் விமர்சிப்பதை தவிர நாட்டுக்காய் நீயென்ன செய்தாய்?“

செவிவழியாய் கேட்டுக்கேட்டு என் நரம்புகளுக்குள் உள்வாங்கிக் கொள்கிறேன் சுதந்திரமென்றால் என்னவென்பதை.

என் சந்ததிக்கு அதை சொல்லி வளர்க்கும் பொறுப்போடு....!

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் அன்பர்காள்!

வாழிய பாரத மணித்திருநாடு!

வாழிய வாழியவே!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!