மீள்பதிவுகளில்
உறுத்திக் கொண்டிருக்கிறது
இன்னும் காயாத நினைவொன்றின்
வலியுணர்த்தியபடி
இன்றும் கசியும் பசுங்குருதி
மீச்சிறு
மீப்பெரு
மிகைப்படுத்தப்பட்ட அளவீடுகளில்லை
துல்லியமாக
எங்கே எப்போது
எப்படியாக
களவாடப்பட்டிருக்கிறதென் இதயம்
பட்டியலுண்டு எம்மிடம்
மீட்புப் போரில் தோற்றுத் தான் போகிறாய்
இருந்தும் ஓயாமல்
வாள் சுழற்றி போராடுகிறேன்
குழப்பம் நீடிக்கிறது
யார் தோற்றதென்று...
கிறங்கிச் சொருகும்
இமைகளில் எப்போதுமொரு
கனவு தொக்கி நிற்கிறது
முடமாகிக் கிடக்கும்
நிகழ்வைப் தூற்றாமல்
எதிர்காலத்தைப் பற்றிக்கொண்டு...
தன்மானத்தோடு தன்னம்பிக்கையும்
கைகோர்க்கும் தருணங்களில்
விழித்திருக்கவே பிடிக்கிறது
கனவின் நீட்சி கூட
அற்பமெனவே
தலை சிலுப்பி விழி திறக்கிறேன்
தடைகள் யாவும் தகர்ந்தே போகிறது
பிரிவுக்கு முந்திய கணத்தை
அழித்துவிட முயல்கிறேன்
சவலையாய் நகர மறுக்கிறது
அதுதான் காரணமாயிருக்கக் கூடும்
இத்தனை குழப்பத்துக்கும்
தீர்வுகாண்கையில் அதற்கும் முந்திய கணத்தில்
நின் வருகைக்குக் காத்துக் கிடந்த
கண்களாவது சாட்சிக்கு வேண்டும்
கடுஞ்சொல் பொழிவித்த கண்ணீர்
கரைக்காத காதலை தரிசிக்க....
பிடரி மயிர் கூச்செரியும்
மின்வெட்டு இரவுகளில்
அச்சுறுத்தும் குறட்டை ஒலிகளுக்கிடையில்
அசுரன் ஒருவனின் அட்டகாசம் அதிகமிருக்கிறது
கையிலேந்திய வாட்களில் சொட்டும் குருதி
ராஜபாட்டையில் ரத்தக்கம்பளம் விரித்துப் போகிறது
குளம்படிகளின் பேரிரைச்சலைக் காட்டிலும்
தூசிப் படலத்தில் மூச்சுத் திணறுகிறது
கறைபடிந்த பற்களின் அசுத்தத்தைப் போலவே
அவன் வார்த்தைகளும்...
முகஞ்சுளிக்கிறேன்
குதிரையிலிருந்தபடியே
என் தலை கொய்து போகிறான்
பிரிந்த உடலின் தவிப்பை பாடியபடி
இமைக்க மறக்கிறேன் மெல்ல மெல்ல...
சாம்பிராணி புகையோடு
தினப்படி வசைபாடும் அம்மாவும்
புழுதி பறக்கும் மண்சாலையும்...
எது நிசமெனத் தெளியுமுன்
இயந்திரமாய் அலுவலகம் நுழைகிறேன்
நாளைய கனவிலேனும்
வெட்டப்படுமுன் விழித்துவிடவேண்டும்
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!