Saturday, June 11, 2011

காதல் செவ்வாய்





யாரெனக் கேட்கிறார்கள்
யாரெனச் சொல்லட்டும்
யாராவது இருந்தால் தானே!
வெறும் கையில்
பூக்களை அளந்தெடுக்கிறேன்
விற்பனைக்கல்ல
சந்திக்கும் நாளிலென்
விரகத்தின் வீதம் எத்தனையென்று
உன்னிடம் சொல்ல!
=====
கைவளைகளை
ஒட்டிப் பிரித்துக் கொண்டிருந்தேன்
திடுமென உன் நினைவு!
இதழொற்றி
மீண்டதும் ...
சப்தித்தன வளையல்கள்
சிலிர்த்துக் கொண்டேன் நான்
இப்படியாக...
நீயும் நானும்!
=====
பிடித்தவை
வெறுப்பவை
ரசிப்பவை
நீ உவந்து ருசிப்பவை
எல்லாமும்
மனப்பாடம்!
என் விருப்பம் ஏதேனுமொன்று
தெரியுமா உனக்கு?
=====
தினவேறிய தோளோடு
திமிர் தளும்பும் கண்ணோடு
தெளிவான மதியோடு
தெவிட்டாத தமிழோடு....
எல்லாக் கனவும்
பொய்த்தும் கூட
இன்னும்
இயங்கிக் கொண்டிதானிருக்கிறேன்
நீயென்பது கைவரும்
நாளொன்றிற்காய்....
======
காத்திருத்தல்
தவம்
அதன் பின்
பிறவிப் பயனாய்
உன் தரிசனம் கிடைப்பதால்
காத்திருத்தல் தவம்!
=====
எப்படிச் சொன்னாலும்
விளங்கவில்லை உனக்கு!
என்னுலுறையும்
எல்லாமும் நீயென
எப்படிச் சொன்னாலும்
விளங்கவில்லை உனக்கு!
சரி!
இலக்கணம் உடைக்கிறேன்
முத்த வாசகமாவது
புரியுமா உனக்கு!
=====
விண்ணில் நிலவும்
என்னில் நீயும்
தேய்ந்தும் வளரும்
நிரந்தரமென்றாய்!
அதற்குபின்
நானோ
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
பயணித்தபடியிருக்கிறேன்
கனவுகளின் ஊடாக!
=====
இதயம் மூளை
இதில் எங்கடி
இருக்கிறாய் நீ!
கேட்டதும்
தீயாய் எரிந்தது
நான் பக்கதிலிருந்தேன்
அப்போது!
=====
கொஞ்சம் இளநரை
தோல் சுருக்கம்
கருவளையம்
முகப்பரு
எல்லாமும்
புலம்பி முடிக்கையில்
மெதுவாய் சொல்கிறாய்
“இருந்தாலும் அழகுடி நீ!”
=====
வருத்தங்களிலென்
தோள் சாய்வாய் நீ!
அப்போதெல்லாம்
வசந்தங்களை
சுவாசிக்கிறேன் நான்!
=====
கண்பார்வையில்
பட்டதை எல்லாம்
கவிதை சமைக்கிறேன்
உன் கண் தொட்டபின்
கல்லாய்
உறைகிறேன்!
=====
வார்த்தைகளெல்லாம்
வலுவிழந்து போயின
உன் மூச்சுக் காற்றின்
ஸ்பரிசத்தில்....
தள்ளி நிலென்று
நீயோ நானோ
சொல்லவேயில்லை
கடைசிவரை!
=====
எனக்குள்
நூறுமுறை
சொல்லிச் சொல்லி
சிலாகித்துக் கொள்கிறேன்
உன் பெயருக்குமுன்
திருமதி சேர்த்து!
=====
எல்லாமும்
எல்லோரும்
எப்போதும்
அழகாய் ....
கண்ணில் நீ
இருப்பதனாலா?
=====
பிரபஞ்ச வெளிச்சம்
புகாத என் மனவறையின்
கதவுகளில் தேவதைகள்
காவல் புரிகிறார்கள்
உள்ளே நீயோ
கொடுவாள் கொண்டு
உன்னை எழுதிக்
கொண்டிருக்கிறாய்!
=====
உன்னைச் சுற்றியே
சுழன்றபடியிருக்கிறது
மனது!
பயமாயிருக்கிறது
சுற்றலின் முடிவில்
சூனியமாகிவிடுமா
என் காதல்!
=====
என்னில்
எல்லாமும் குறை
உனக்கு!
மனமெங்கும் நீ
நிறைந்திருப்பதை
அறிந்து சொல்லுமா
உன் கண்கள்?
=====
அனைத்துலக வாத்தியமும்
ஒருங்கே ஓதினாலும
என் மௌனங்களின்
சக்கரவர்த்தி நீ!
=====
நல்லதை நினை
நல்லதை பார்
நல்லதை கேள்
பார்த்துக் கொண்டே
கேட்டபடியிருக்கிறேன்
உன்னையும்
உன்னாலான நினைவுகளையும்!
=====
உலர்ந்த உதடுகளை
ஈரமாக்கினாய்
நனைந்திருந்தேன்
என்னுள் காதல்மழை

Wednesday, June 1, 2011

இதுவாகவும் கூடுமோ?

இன்னது நிகழ்ந்தால்
இன்னாரெல்லாம்
இகழ்ந்துரைப்பர்!

இவரவரெல்லாம்
யாரோவெனப் போவார்
இனிதாய் ஒலித்தவை
இன்னலாய் மாறக்கூடும்
இவ்விதமானால்
இளக்காரம் நிச்சயம்
இப்படியாக இன்னார்
இச்சேதி தெளிவுற்றால்
இழிந்து உமிழக்கூடும்!

எங்ஙனம்
எவரெவர் வாய்
எப்பொருள்படினும்

உன்னில் நானும்
என்னுள் நீயும்
கருத்தொருமித்தே
காதலானோம்!

சுவாதினமாய் இதழ்
விரியும் மொட்டொன்றாய்
மலர்ந்தது காதல்...

காதலை பேசிப்பேசி
காதலரானோம்

தூற்றலாய்
பிதற்றலாய்
சாபமாய்
கிண்டலாய்
கேலியாய்
ஒதுக்கலாய்

நம்மீது
சொல்லெறியும் நாக்குகள்
எதற்கும் மனவொழுக்கம்
சொந்தமில்லை என்பதறிக!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!