Wednesday, October 27, 2010

காதலுறை பனிக்காலம்


 கூட்டவும் பெருக்கவும்
மட்டுமே முடிகிறது
கழிக்கவோ வகுக்கவோ
வெட்கம் தடுக்கிறது
வினோதமிந்த
’முத்தக்’கணக்கு!








மென் கழுத்தில் 
சிலபல சங்கதிகளை
கோலமாய் வரைந்தபடி நின் விரல்...
படர்தலின் விபரீதத்தில்
விதிர்த்து எழுகிறேன்
’இல்ல சங்கிலி தங்கமான்னு...?’ 
திணறலில் கோழையாகினும்
முத்தம் சிந்தியபின்னே மீள்கிறது
உன் காதலான காமம்!




சாலச் சிறந்த கவிகளெல்லாம்
’இதென்ன பிரமாதம்’
இளப்பமாய் விமர்சித்தவன்
’உன் இதழ்களைத் தா’
எழுதிக்காட்டுகிறேன்
’சிற்றின்பக் கதம்பம்’ என்றான்
வழமை போல் அன்றும்
இமை தாழ்த்தி இம்சித்தேன்  
பதிலேதுமில்லாமல்...
பொறுமையிழந்து வீரனாய்
விஸ்ரூபமெடுத்தவன்
சிறையெடுத்திருந்தான்
அதரங்களிரண்டையும்...












அவனின்றி
அழகற்றிருப்பதாய் சொன்னதும்
ஆத்திரமாய் தரையில் எறிந்தேன்
ஆயிரஞ் சில்லாய் சிதறிச் சிரித்து
அதையே தீர்க்கமாய்ச் சொன்னது
கண்ணாடி!

Tuesday, October 26, 2010

முத்துக்கள் மூன்று


நீர்க்கோலத்துத் தாமரைகளென
நாலைந்துக் குற்றலைகள்
சலனமடங்குமுன் அமிழ்ந்து போனது
புள்ளியிட்டக் கல்

***

தொண்ணூறுபாகையில்
சூரியதரிசனம்
தகிப்பில் பாதம் பணிந்தது
நிழல்!

**

பசியில் சலசலத்தது கூடு
இடுக்கிய இரையுடன் தாய்ப்பறவை
குடையாகித் தொடர்ந்தது மேகம்

*

Monday, October 25, 2010

என் தேவதைக்கு

”ஹலோ! யாருங்க..?”

“நாந்தாம்மா பேசுறேன். எப்டி இருக்க?”

நாந்தாம்மா என்கிற அழுத்தத்தில் முகம் ரோசாப்பூவாய் சில்லிட்டது.

”நீ..நீங்களா? இருங்க மாடிக்கு வர்றேன். இங்க பேசமுடியாது” கொஞ்சலாய் வெளிப்பட்டது வார்த்தைகள்.
கேள்வியோடு மாமியார் பார்வையையும் சட்டை செய்யாமல் மாடியேறி மூச்சிறைக்க,

“சொல்லுங்க.. மாடியில இருக்கேன்.”

“சாப்பிட்டியாடா நீ!” கரகரத்த ஆண்குரலில் பாசம் பொங்கியது.

“ம்ம்!” விசும்பலாய் வந்தது வார்த்தைகள்.

பத்து நிமிட உரையாடலில் ஏனோ அவள் எதிர்பார்த்த விசயம் தவிர எல்லா சம்பிரதாய விசாரிப்புகளும்.

“அப்புறம்”

சிலுசிலுவென சிறகடித்த இதயத்தின் மத்தியில் நரம்பொன்றை கத்தரித்த வலி வரும் அவளுக்கு இந்த வார்த்தையை கேக்கும் போதெல்லாம்.வெளியூரிலிருக்கும் கணவனின் அழைப்பிற்கு ஏங்கித் தவிப்பதும்,வந்ததும் குதுகலிப்பதும் அவன் குரல் கேக்கும் இந்த சில நிமிடங்களுக்கு தானே.அவனுக்கு தன்னிடம் பகிர விசயமே இல்லாது எல்லாமும் தீர்ந்து போயிற்று என்கிற வெறுமையை வலியோடு உணர்த்தும் இந்த வார்த்தை நிச்சயம் கொடிது.

“ம்ம்.. சரி ஒண்ணுமில்ல” வீம்பாய் சொன்னாலும் பரிதவிக்கும் மனசு.இன்னிக்கும் அப்படித்தான்.ஆனால் கண்ணீர் மட்டும் முட்டிக்கொண்டு வந்தது.

“சரிம்மா. பாத்துக்கோ!அடுத்தவாரம் பேசுறேன்”

”ம்ம்...வந்து..” சொல்லி முடிப்பதற்குள் அலைபேசி அடக்கமானது.

ஏனோ அழனும் போல இருந்தது.சின்னதா ஒரு வாழ்த்து சொல்லியிருக்கலாம்.என்ன தான் வேலையினாலும் பொண்டாட்டி பிறந்தநாள் கூடவா மறந்துபோகும்.எல்லாமே நானா சொல்லிச் சொல்லி வாங்கனுமா என்ன? காலையில் பால் பாயசம் செஞ்சதுக்கே நக்கல் தாங்கல. ரெண்டு பிள்ளைங்களுக்கப்புறம், இந்த வயசுல இது வேறயான்னு? இப்படி அழுறது தெரிஞ்சா நாத்தி நமட்டு சிரிப்பு சிரிச்சே கொன்னுருவா. ஏன்மா என்னப் பெத்தே? அனாவசிமாய் அம்மாவுக்கு வசவு விழுந்தது. அவனை குறை சொல்ல முடியாத கோவம் கேவலாய் வந்தது.கண்களைத் துடைத்துக் கொண்டு வேகவேகமாய் நடந்தாள். மூச்சை மெல்ல இழுத்துவிட்டுக்கொண்டாள். சமாதானமானது மனது.

மாடியிறங்கி வந்தாள். வழக்கம் போல சலனமற்ற முகத்துடன்...

துணிமடிக்கையில் வாசலில் அழைப்புமணி சத்தம்.

”அம்மா பார்சல் வந்திருக்கு.”

யாருக்கிட்ட இருந்து? பெயர் எதுவும் இல்லாமல் ரோஜாக்கள் சகிதம் உள்ளே அழகான ஒரு தேவதை பொம்மை. நேர்த்தியும் அழகும் குழைந்து ஏதோ மனதை ஈர்த்தது.

என் தேவதைக்கு என்றெழுதியதை தவிர வேறேதும் இல்லை. வினாடி நிதானித்தவள் வந்த சில நிமிடங்களில் இறக்கைகள் முளைத்து கணவனிடம் தேடி பறக்கலானாள்.

”அண்ணி... அது... அது எனக்கு வந்தது... நரேன் கிட்ட இருந்து. அதான்... அம்மாட்ட சொல்லிராதீங்க”

வருங்கால கணவனிடமிருந்து அவளுக்கு வந்த பரிசு.

“யாருக்குன்னு தெரியாமத்தான் நித்தி...மன்னிச்சிடு. சிக்கிரம் எடுத்துட்டுப் போ.அத்தை வந்திடுவாங்க”

நட்பாய் சிரித்தாள் அவள். ஏனோ குதூகலித்தது மனசு.

Friday, October 15, 2010

எப்போதேனும்...


எப்போதும்
எளிதாய்க் கடந்துவிடுகிற
காட்சிதான் அது,
பள்ளிக்குப் போகும் குழந்தைக்கு
முத்தமிட்டு வழியனுப்பும் தாய்!
ஏனோ
பார்த்தயென் கன்னம் முழுவதும்
ஈரம்
கண்களிலும் அதன்
மிச்சசொச்சம்

* * * * *

”என்  ராசாத்தி”
வருடிச் சொடுக்கெடுக்கும்
கரங்கள்
திருஷ்டிக்குப் பலியாகும்
உப்புக் கட்டிகள்
யாருமில்லாத பொழுதொன்றில்
மிளகாய்கமறலோடு
சன்னமான வெடிச்சத்தம்
என் செவிக்கு மட்டும்!

* * * *

மொத்தமாய் ஐந்துரூபாய்
பட்டாணியா?
தேன்மிட்டாயா?
குச்சி ஐஸா?
பலவேறு குழப்பங்களுடன்
கணக்குப் புத்தகத்தில்
ஓய்வெடுக்கும் திருவிழாக்காசு
உறக்கமிழந்த இரவுகள்

* * *

“இந்தா ஒருவாய்ச் சாப்பிட்டிரு”
கெஞ்சலும் என் சிணுங்கலும்
விரவி ஓய்ந்த
பின்னிரவு நாட்கள்
மனம் ஒன்றா உணவோடும்
வெறும் வயிற்றோடும்
எவருமில்லா வெறுமையில்
அயர்வாய் விழுகையில்
அனிச்சையாய்த் துடைக்கிறது கை
உதட்டோரம் ஒற்றைப் பருக்கை

* *

உருமிச் சத்தம்
பாண்டிச் சாமியாடி
பூம்பூம் மாடு
குடுகுடுப்பைக்காரன்
கிறுக்குச் சுப்பைய்யா
இன்னபிறவும் உண்டு
பயமூட்டும் பட்டியலில்...
மனதில் வாசித்துச் சிரிப்பதுண்டு
பேரிடிச் முழக்கம் கேட்கையில்
தொடைநடுங்கும் பயத்தினோடே
அனிச்சையாய் மொழியும்
’அர்ச்சுனன் அபயமும்’
தானாய் தேடும்
அப்பாவின் அருகாமையும்...

*
சலங்கை வைத்த கொலுசு
பட்டுப் பாவாடை
அரையடி குடுமிக்கு
ஆறுமுழம் மல்லிப்பூ
குலுங்கிச் சிரிக்கும் வளையல்கள்
தீட்டித் தீர்ந்த மை
சூதோ வினையோ ஏதுமில்லாது
சட்டென நம்பி ஒட்டாதாயின்
பட்டென விலகிய
வெள்ளந்தி பால்யம்
இப்படி...
காலச் சக்கரத்தில்
நாகரிகம் கருதி
இழந்துவிட்ட எல்லாமும்
எப்போதேனும்
மிக அரிதாக எப்போதேனும்...


Thursday, October 14, 2010

தென்றல் வந்து தீண்டும் போது...

படித்ததில் பிடித்தது

இப்போ கொஞ்ச நாளா தான் இவங்களப் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். மரபிசைத் தமிழோட மொத்த சுவையும் தளும்ப தளும்ப ... இவங்களும் நம்ம சக பயணின்னு நெனைக்கிறப்போ ரொம்ப பெருமையா இருக்குங்க. பெண்ணீயம், பதிவரசியல் இதையெல்லாம் கலக்காம தமிழ்....தமிழ் மட்டுமே வாசிக்கத் தருகிற அற்புதமான படைப்பாளி - கவிஞர். ஒவ்வொரு கவியும் பொருள் புரிய அத்தனை நேரம் பிடித்தது எனக்கு. எல்லாமே நல்லாயிருந்தாலும் என்னைப் பத்தி(?) இவங்க எழுதின இந்த கவிதை ரொம்ப பிடிச்சதுங்க.
மீன் = கயல். அதனால .....

மீன்

கடல் கொழிக்கும் நீரின் இனத்தில்
வளையும் வாளில் தண்மை இல்லா
கொதிக்கும் புனலாய் புள் மறையும்
கொத்தும் அலகில் குதித்து கீறும்


வாய் அகலும் மச்சத்தின் உள்புகும்
சிற்சில்லுயிரின் சிறை இரையாய்
வலை காணா வலிகாண் வல்லினம்
கடிமரத்தின் திசை போகா கலத்தில்


கெளிற்றின் கொள்வாய் கௌவை
அலை ஆழம் பாசிக்குள் முகிழும்
தூண்டில் வழுவி சிற்றலை தழுவும்
ஒற்றை புற்றில் ஓர் நிலை அறியா


கற்றலையின் சிறுகண் தப்பும் அவ்விலை
தூங்கா திரையில் கலக்கும் பொழுது
வாட்டும் ஒளிக்கீற்று கூசித் தேடும்
கள்ளூறா பாறை இடுங்கில் பெருக


என்பின் முள்ளாய் துருத்தும்
தசையில் உணவாய் கரைய
நசையற்று நவிலும் ஓசை
உப்பில் ஊறும் ஒரு சுவை.


துள்ளும் வாலில் கெண்டை சிக்க
தளரா பாய்ச்சலில் கழுகும் கொத்த
தீரா பகை தீரும் கண்ணியில்
வாழா வினை பகருமோ மீன்.


- 'Writer' Mubeen Sadhika

கேட்டதில் பிடித்தது

எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி தான் எனக்கும் இசைஞானிய பிடிக்கும்.ஆனா இந்த பாட்டை கேக்கும் போது ஏனோ அவரை ரொம்ப... ரொம்பப் பிடிக்கும்.




பார்த்ததில் பிடித்தது

ஊரிலே இருந்து தோழி வந்திருக்கா. எங்கயாவது போலாம்டீன்னு ஒரே நச்சு. அவள கூட்டிட்டு போய் பாஸ் படம் பார்த்தோம். முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் பார்த்திட்டாலும் நாங்க ரெண்டு பேரும் +  இன்னும் இரண்டு கல்லூரித் தோழிகள் சேர்ந்து பாக்குறதுன்னா... செம காமெடியா இருக்கும். நானெல்லாம் படம் பார்க்கப் போறது அந்தப் பாப்கார்னுக்கும் ஐஸ்கீரீமுக்கும் தான். ஆனா அம்மணி படத்தப் பாத்துட்டு மெசேஜ் ஏதாவது இருக்கான்னு தேடுற ஆளு. ஈரானியப் படங்கள்,அகிரா குரோசவான்னு வாய் ஓயாம பேசும். அவளே படம் முடியிற வரைக்கும் சிரிச்சிட்டே இருந்தா. நல்ல படம். எந்திரன்? விசில் ஓயட்டும். மெதுவா பாத்துக்கறேன்.

படம் பார்த்திட்டு கடை கடையா சுமாரான விலையில ஒரு புடவை தேடி அலைஞ்சப்போ... கண்ணுல பட்டு ஒட்டிக்கிட்டது இது.

ஆசைக்கு அலைபேசில படம்பிடிச்சிட்டு வந்தாச்சு. பின்ன நெசத்துல வாங்குறதுன்னா Diva க்கு என்னோட மொத்த சொத்தையும்(?) எழுதி வைக்கணும். திருமண வகைகள்ல இருந்திச்சு. நேரிலே இன்னும் அழகாயிருந்திச்சி. என் ஓட்டை மொபைல்லையே இவ்வளோ அழகுன்னா பாத்துக்கோங்க. நாளைக்கு மாம்ஸ் வந்து உனக்கு என்ன வேணும்ன்னு கேப்பாரில்ல அன்னிக்கு இதான் வேணும்ன்னு சொல்லுறதுக்காக. ஒரு தொலைநோக்கு பார்வை தாங்க :)

Tuesday, October 12, 2010

திருக்கூத்து

அருஞ்சுவை உண்டி அமரவர் உப்பரிக்கை
அம்பாரி பவனி ஆஞ்சநேயம் வியந்தோதி
வான்பொழி அமிழ்தம் அந்தாதி பிதற்றல்
மேருகொள் தீரம் ஆழியமிழ் பொறைமை
உளங்கனி திருவருட் சிந்தை பகர்ந்து
சொலவடை இலக்கணம் கூறு பிரித்து
சிலேடை முகர்ந்து சிறுநகையூட்டி மீள,
ஆவிபோக்கி மிடரு விழுங்கும் வன்பசி
அல்லையரற்றி அறுந்துவிழும் சுவைநரம்புகள்
கரவொலி கேட்டு கண்ணொளியது உயிர்பெற
கதிரவன் தகித்தும் அகமலர்ந்து குரல்மீட்டி
மாயவன் எழிலை மாசற வடிக்கலானான்
காலாஞ்சி சிறுகடலை கைப்பிடிச்சோறு தாம்பூலத்தோடு
இறைவன் சூடிக்கழித்த மாலையும் கைவர!

Sunday, October 10, 2010

சேது (எ) சேதுராமன்

மனம் போல் வாழ்வது எத்தனை சுகம் தெரியுமா? ஒரு இறகின் பயணம் போல இலகுவாய்.. கனமேதுமில்லாமல்.. அரிதாய் வாய்ப்பதுண்டு.அப்படி வாழபவர்கள் நிச்சயம் திறமைசாலிகள்.இந்த தத்துவத்துக்குப் பின்னாடியிருக்க கத என்னான்னா? அதிகப்படியான விடுமுறைகளை எப்படித் தள்ளுறதுன்னு தெரியாம முழிக்க வேண்டியதாயிருக்கு. வெட்டியா இருக்கோமுங்குறத எப்படி எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.அட.. பொழுதே போகமாட்டேங்குதுப்பா!
பாட்டுக் கேக்கலாம். ம்ம்ஹ்ஹும் எல்லாப்பாட்டும் கேட்டாச்சு. புதுசா எதாவது கேக்கறதுன்னா? பதிவிறக்கம் ம்ம் பொறுமை அவசியம். இன்னிக்கு இல்ல இன்னொரு நாளைக்கு...

படம்,பார்க்,பீச் இப்படி எங்காவது போகலாம். யாருமே இல்ல வெறிச்சோடிக் கிடக்குது இங்க. துணைக்கு யாருமில்லாம எப்படி... தோழிகள் யாரையாவது கூப்பிட்டால்?ஞாயிற்றுக்கிழமை கணவன்மார் சாபத்துக்கு ஆளாகக்கூடும்.

எங்காவது கடைக்கு போயிட்டு வரலாம். ஹிக்கிம்போதம்ஸ் போகலாம்.கூட்டமா இருக்கும் கூடவே ஆர்வக்கோளாறு பர்ஸ காலி பண்ணிடும். போகவேணாமுன்னு தோணுது.கோயில்? நேத்து கூட்டத்துல சிக்கி நூலானது போதும். அடுத்தவாரம் பாத்துக்கலாம்.

அலைபேசலாம். நேத்தி பூரா அம்மாட்ட பேசிப்பேசி வாய்வலிக்குது.அறிவுரை திலகம் என் அருமை உடன்பிறப்பு பொழிஞ்ச அக்கறையில(!) காது ரெண்டும் உய்ய்ய்ய்ங்குது.

எதாவது படிக்கலாம்.இருக்க புத்தகம் எல்லாமும் படிச்சாச்சு.முறிந்த சிறகுகள் - இன்னொரு முறை படிக்கலாம். ஆனா அடுத்து என்னவரி வரும்ன்னு தெரிஞ்சே படிக்கிறதுக்கு ரசிகத்தன்மை வேணும். அதில்ல இப்போ. இன்னிக்கு ஏதும் புதிதாய் படிக்க மனமில்லை.

ரொம்ப நாளாச்சு பெயிண்டிங் பண்ணி.இன்னிக்கு பண்ணுவோம். பாதிவரை முடித்ததும் ஒன்றுதல் இல்லாமல் ....

கதிரி கேட்கலாம்... கிருஷ்ணா நீ வேதமே.... சாக்ஸோஃபோன் உருகிக் கொண்டிருந்ததது.அதையடுத்த அரைமணி நேரத்தில் அறுவதுக்கும் மேற்பட்ட பாடல்கள். ஹி ஹி ஹி. ஆரம்பம் மட்டும் கேட்டேன்.இந்த நிலையற்ற மனநிலைக்கு தீர்வு?

ம்ம். நல்ல காஃபி சாப்பிட்டா இதமா இருக்கும். கூடவே அண்ணியோட நக்கலும் நையாண்டியும்..என் அருமை வாலுங்க கூட்டமும் அங்கதானே? சரி போய்வரலாம்.போனவாரம் வா வான்னு கூப்பிட்டாங்க.போகமுடியல. இன்னிக்கு போகலாம்.முன்னறிவிப்பில்லாம போறோமே? பரவால்ல சொல்லிட்டு போனா நாகரீகமா இருக்காது.

****************************

இருபது நிமிட பயணம்.நகரின் பிரபலமான அடுக்குமாடிக் கட்டடம். பத்தாவது தளம். வீடு பூட்டப்பட்டிருந்தது. அலைபேசவும், “என்னம்மா? தியேட்டர்ல இருக்கேன்.எல்லாரும் வந்தோம்.பக்கத்துல தான். நீ எங்க இருக்க?”
“உங்களபாக்க வந்தேண்ணா. சரி நான் கிளம்புறேன். இன்னொரு நாளைக்கு வர்றேன்.”

“இரு இரு.படம் முடிய இன்னும் 20 நிமிசந்தான். மொத்தமா அரைமணிநேரம் பொறுமை கிடையாதா? திடீர்ன்னு வந்திட்டு இப்படி ஓடற. இரு இரு. உங்க அண்ணி வந்து உனக்கு பேயோட்டுனாத்தான் அடங்குவ.போனவாரம் நீ ஏன் வரல.ம்ம்?” திரையரங்க இரைச்சலுக்குள்ளும் அண்ணாவின் கர்ஜனை கொஞ்சம் நடுக்கத்தை தந்தது.
“சரி சரி.வாங்கண்ணா. இருக்கேன்”

சொல்லாமல் வந்ததற்கு மனதிற்குள் நொந்தவாறே திரும்பவும், இடிப்பது போல் ஒரு முதியவர் வந்து எதிரே நிற்க திணறிப்போனேன். அவருக்கு சுமார் 60-65 வயதிருக்கலாம்.மிடுக்காக உடையணிந்தபடி இளமை துள்ளும் கண்களை மறைத்த கண்ணாடி, கையில் இந்தியா டுடே. என்னை விட சற்றே உயரம். அதாவது குள்ளம் - சராசரிக்கும் குறைவான உயரம்.ஏதோ நடைபயிற்சி சென்று திரும்பியிருக்க வேண்டும்.ஆயத்தங்கள் அவ்விதம் உரைத்தன.

”யாருவேணும் உங்களுக்கு?நான் ஏதேனும் உதவலாமா?”

பொதுவாக இதுபோலும் பிளாட்டில் உள்ளவர்கள் எதிரில் வருபவர்களை ஏதோ வேற்று கிரகவாசிகள் போல் பார்ப்பது வழக்கம். தவறி ”இதானே E10” என்கிற மாதிரியான கேள்விகளுக்குக் கூட இயந்திரதனமாய் பதில் வரும்.இந்த முதியவர் போல் வலிய வந்து கேட்பவர்கள் மிகச் சிலர்.அப்படிக் கேட்பவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களாக இருக்கக்கூடும். இப்போது தான் கவனிக்கிறேன் போன முறை வந்தபோது காலியாய் இருந்த வீடு....குடி வந்தாயிற்று போல.சேதுராமன்,மரகதம் என மின்னியது பெயர் பலகை.

”உங்களத்தான் மேடம். என்ன பாக்குறீங்க. யாரப்பாக்க வந்தீங்கன்னு சொல்லுறது ஒண்ணும் அத்தனை தவறான விசயம் கிடையாதே!” முதலில் தமிழில் கேட்டவர்,சிறு இளக்கத்துடன் சுத்தமான ஆங்கிலத்தில் மறுபடிக் கேட்கவும் சிரித்தபடி தமிழில் பதில் சொன்னேன்.

“ஓ. கணேசன் வீட்டுக்கா? நமக்கு இந்த வீடும்மா. நம்மூரு பொண்ணா நீ? திமிரா பேசயிலேயே தெரிஞ்சது வைகையாத்து வாசம்.” கலகலவெனப் பேசிக் கொண்டே கதவருகில் சென்று ”மரகதம் கணேசன் தங்கை வந்திருக்காம்மா.ரெண்டு காபி குடு” என்றபடி உள்ளே போனார். நான் தயங்குவது தெரிஞ்சதும்,”உள்ளவா நாங்களும் மதுரக்காரங்க தான்.பயப்படாதே என் மனைவி நல்லா காபி போடுவா” சிரித்தபடி பேசியவர் ஏனோ நெடுநாள் பழகியதான உணர்வை தந்தார்.கூடவே தமிழனுக்குள்ளான பிரிவினை வலிக்கத்தான் செய்தது. மதுரையா? கோவையா? காவிரிக்கரையா? எனக்கேட்டு கேட்டு கூட்டம் சேரும் மாண்பு அப்படியே சிலிர்க்க(?) வைத்தது.அதுபோலும் குறுகிய வட்டமோ இது என்கிற வருத்ததை அடுத்த சில நொடிகளில் போக்கினார் சேது.

“வாம்மா!உள்ளவா!கணேசனுக்கு உறவா?தங்கையின மாதிரிக் கேட்டது.” மென்மையான மதுர குரல்.அழகான லட்சுமிகரமான முகம். தேஜஸான முகத்தில் மஞ்சள் குங்குமம் அதையும் மிஞ்சி ஜொலிக்கும் கல்மூக்குத்தி. ஒரு கறுப்பு முடிகூட எடுக்க முடியாது என்கிற அளவுக்கு வெளுத்த கேசம்.
நான் எழுந்து கரம் குவிக்கவும், “என்னைவிட இவ கொஞ்சம் வயசானமாதிரி தெரியுறால்ல?அதானே வணக்கமெல்லாம் சொல்லுறே! நீ வேணா அவள பாட்டீன்னு கூப்பிடு. என்ன சேதுன்னே கூப்பிடு.” என்றபடி நமட்டலாய் சிரித்தார் சேது.

“ம்ம்க்கும்! யாராவது சின்னப் பொண்ணுங்க வந்திட்டா போதும்.கமலஹாசன் மாதிரி நெனச்சுக்கும் கிழம். இருங்க இருங்க காபிக்கு sugarfree கூட போட போறதில்ல.கொழுப்பு அடங்கட்டும்” அந்த அழகான ஊடலை ரசித்தபடி இருக்க, அண்ணா வரும் வரை பொழுது போவது ஒன்றும் அத்தனை கடினமல்ல எனப் புரிந்தது.
சாலை கடக்கும் பொழுதுகளில் கைபிடிக்கும் யாரோ, கூட்டநெரிசலில் தவறி விழப் போகையில் தோள் பற்றும் யாரோ, ஏதோ ஒரு நகைச்சுவைக்கு பொதுவில் சிரிக்கையில் சினேகித பார்வை பகிரும் எவரோ,முகம் தெரியாத சிலருடன் மின்னாடலில் பகிரும் வார்த்தைகளின் வழியே உணரும் பாசம் இப்படி அறிவிற்கு எட்டாத ஏதோ ஒரு விசயம் மனிதம் இருப்பதை எப்போதுமெனக்கு நினைவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறது.இயல்பான வாழ்க்கை மீதான என் காதலும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

சேதுராமன் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். ஏதோ ராணுவக் கிட்டங்கியில் வேலைபார்த்ததாகவும்,பின்னர் சில காலம் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும் சொன்னார்.மகனும் மருமகளும் லண்டனில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.பரஸ்பரம் அறிமுகப்படலம் முடிந்து வீட்டை சுற்றிக்காண்பிக்கலானார்.மனுசன் அறுபதுகளில் ரொம்ப ரசனையான உலகத்தை அனுபவித்தவர் போலும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை சொன்னார்.கல்லூரி நாட்களில் காரைக்குடி CECRIயில் வருடம் ஒருமுறை அறிவியற்கண்காட்சி நடத்தப்படும்.அதில் ஹைதர் காலத்து(?) ஃபிளாப்பி டிரைவ் எல்லாம் இருக்கும்.பார்க்க வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும்.அதே உணர்வும் ஆர்வமும் அந்த வீட்டில் உள்ளவற்றை காணும் போதும். எல்லாமே மிகவும் அருமையான கலைப்பொக்கிஷங்கள்.அதுல ஒரு பொருள் மிகவும் கவர்ந்தது.டேப் ரிக்கார்டுகளுக்கு முந்தைய இசையுலகம். கிராமோஃபோன்.நான் பிறக்கும்போதே கிராமஃபோன்கள் செல்வாக்கை இழந்திருந்தன. என் வீட்டில் ஒரு பெரிய கறுப்பு நிற டேப்ரிக்கார்டர் இருந்ததாக நினைவு. இந்தக்கருவியை நான் சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்.நேரில் அதன் செயல்பாட்டை பார்க்க வாய்த்த அரிதான சந்தர்ப்பம்.


 சேதுவிடம் நிறைய இசைத்தட்டுகள் இருந்தது. சிலவகை அபூர்வமான குரல்களெல்லாம் தன்னிடம் உண்டு என்பதாகச் சொன்னதோடல்லாமல் ஒவ்வொன்றாக போட்டு வேறு காண்பித்தார். கேவி மகாதேவன் மீது மிகப்பற்றுள்ள காரணத்ததால் அவரது பாடல்களே அலமாரியெங்கும் நிரம்பி வழிந்தன. அதுல ஒரு பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சதுங்க. ஆடவந்த தெய்வம் படத்துக்காக டி.ஆர்.மகாலிங்கம் பாடின பாட்டு. ’கோடி கோடி இன்பம் தரவே’ எனத் தொடங்குமது. கொஞ்சம் கீறலோடும் இழுத்தவாறும் இருந்தாலும் அமுதமாய் இருந்தது இசையும் குரலும்.பாடலுக்கு நடுவே காபியோடு மரகதம்மா வரவும், அவங்கள நோக்கி பாடியபடி ஆடவும் செய்தார் சேது. ’ம்ம்க்கும் இதுக்கொன்னும் குறைச்சலில்லை’ என்று வாய் சொன்னாலும் அவரையும் அவர் பாவங்களையும் ரசித்துக்கொண்டிருந்தாள். அன்று வெட்கப் பொழிவோடு சிரித்த அம்முகத்துக்கு நிகரான உயிருள்ள ஓவியம் இருக்கவே முடியாது நான் பார்த்தவரையில்.அவரது இசையார்வம் குறித்து பேசிக்கொண்டு இருந்தார்.வெகுநேரமாய் உறுத்திக்கொண்டிருந்த கேள்வி கேட்டேவிட்டேன்.

“ஓய்வுக்குப் பின்னாடி சொந்த கிராமத்துக்குப்போயி வாழறவங்களத்தான் பார்த்திருக்கேன்.ஆனா இந்த வயசுல தனியா இங்க சொந்தபந்தமில்லாம இருக்கீங்களே.கஷ்டமாயில்லையா?”

“மதுரைப்பக்கம் ஒரு சின்ன கிராமம் என்னோடது. ஐந்து பெண்கள். நான் மூணாவது.அக்கா தங்கச்சிங்க வாழ்க்கையெல்லாம் சீராக்கின பின்னாடி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.என் மனைவிக்கு அப்போ என்னால தனிப்பட்ட வசதிவாய்ப்புகள் செய்து தரமுடியல.பையனும் கிராமத்து சூழ்நிலையில தான் படிச்சி வந்தான்.அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் தான் நாங்க இங்க வந்தது.ஏன்னா இன்னிக்கு கிராமம் எப்படியிருக்கு தெரியுமா? ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு கொடி பிடிச்சிக்கிட்டு இல்ல சாதி மதமுன்னு சிலபேரு ஊரக்கெடுத்திட்டிருக்கான். பங்காளிச்சண்டை சொத்துப்பிரச்சனையின்னு சில பேரு.இதையும் மீறி நாம ஏதாவது செஞ்சா நீயென்ன புதுசா தலைவராக பாக்குறியான்னு கேக்குறாங்கம்மா. நமக்கான வசதிகள் செஞ்சுக்கக் கூட பலபேரு தயவ எதிர்பார்க்கறதாயிருக்கு.காந்தி எதிர்பார்த்த சுதந்திரம் அங்கில்லமா.பலகிராமங்கள்ல கட்டப்பஞ்சாயத்து தான் நடந்திட்டு இருக்கு.அதுக்கும் மேல நாங்க ரெண்டு பேரும் வயசானவங்க மருத்துவ வசதி,போக்குவரத்து வசதி எங்களுக்கு வேணும்.தேசியகீதம் படம் பார்த்தியா அப்படிப்பட்ட சபிக்கப்பட்ட ஊர்கள்ல ஒரு ஊருதான் என்னோடது.அதான்மா கிராமத்த விட்டுட்டு இங்க வந்திட்டோம். கிராமத்துல நகரத்தோட சீரழிவுகள் கொஞ்சம் கொஞ்சமா இறங்கிட்டு இருக்கு. பாரு நான் இங்கே தன்னார்வத்தொண்டனா என்ன வேணா செய்யலாம். ஆனா கிராமத்துல என் சாதி முன்மொழியப்படும். அதான் மாசில்லா தண்ணியும் காத்தும் கூட வேணாமுன்னு இங்கயே...” நிறுத்தி நீண்ட பெருமூச்சு விட்டார் சேது.அவர் பக்கமும் நியாயமிருக்கக்கூடும். சாதிகள்,மதங்கள் இல்லாத இந்தியா வர என்ன செய்ய வேண்டும் கலாம்? கனவு மட்டும் கண்டு கொண்டிருக்கிறேன், ஆதிக்கமில்லாத சமுதாயம் வேண்டி.சிலபல ஆதிக்க சக்திகளுக்கு உட்பட்டு நானும் கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்கிறேன்.

”அத்தே என்ன மிலிட்டரி தாத்தா உங்க காதுல ரத்தம் வர வச்சிட்டாரா?அப்பா கூப்பிடுறாங்க தப்பிச்சி ஓடிடுங்க” சிவா, அண்ணாவின் பத்து வயது மகன் திடுமெனப் புகுந்தான் எங்கள் அமைதிக்குள்.

“அடி படவா!” என்றபடி துரத்தலானார் சேது.

அண்ணியிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட பிறகு, அண்ணாவிடம் மெதுவாய் கேட்டேன்.
“சென்னையில எங்கண்ணா கிராமஃபோன் கிடைக்கும்? அந்த இசைத்தட்டுகளும் வேணுமே”

புரிந்தாற்போல் மெல்லச் சிரித்தவர், “ரொம்ப சுவராஸ்யமான மனிதர்.நான் நிறைய பேசுவேன் அவர்கூட.அண்ணி தான் பேசவே விடமாட்டா.பொறாமை எங்க நட்ப பார்த்து”

”ஆமா ஆமா மிலிட்டரி சரக்கு உள்ள தள்ளிக்கிட்டே ரொம்ப பேசுவாங்க ரெண்டு பேரும்”, நக்கலான குரல் கேட்டது உள்ளிருந்து.

பின்குறிப்பு:-

சேதுவின் புண்ணியத்தில், அன்றைக்கு என்கிட்ட மின்னாடலிலே மாட்டின தொலைதூர நண்பர்கள் எல்லாரையும் கொடுமைப்படுத்திட்டேன் இந்தப்பாட்டுப் பாடி. தப்பிச்ச மீதிப்பேருக்கு மின்னஞ்சலா போயிருக்கும்.இடுகைய படிக்கற எல்லா பாவப்பட்ட மக்களும் இந்த பாட்ட தவறாம கேக்கனுமின்னு அகில உலக
அடாவடி மகளீர் அணி சார்பா கேட்டுக்கறேனுங்கோ!

Saturday, October 9, 2010

கபடந்தரி


பெருமழை பீடித்த பிரளய பொழுதொன்றில்
கடல் நுழைந்தது மரக்கலமொன்று
சுழற்றும் காற்றின் சூழ்ச்சியின் வலுவில்
சிக்கியதாய்க் குறைபட்டார் மாலுமி
ஆருடம் பலிக்கும் என்றார் சோதிடர்
வீரர்களுண்டு வாட்களுண்டென்றார் படைவீரர்
கடவுளருள் நிச்சயமுண்டென்றார் போதகர்

நீர்மிக்கத் தடாகத்தின் உட்சுழி சக்கரமாய்
குழப்பத்தில் சுழன்றபடியிருந்தது மிதவை
புறவிசை ஆளுமை தட்டிய தட்டிற்கு
சமனற்ற போக்கில் ஆடிக்கொண்டிருந்ததது
உடைவது மனமா தடுமாறும் கலமா
வசதியாய் இடியிடித்து வாதமுரைத்தது மழை!

’நலமே விளையும் நம்புக’
சத்தமாய் உச்சரித்தபடி
செத்து விழுந்த பறவையொன்றின் இறகோடு
கர்ம சிரத்தையாய் தன் காதுகுடையலானார்
நன்மொழி போதகர்.

எல்லோரும் எல்லாம் வல்லவனை
புகழ்ந்து பாடியபடியிருக்க
கடமையுணர்ந்து
நீர்புகும் உடைப்பையெல்லாம்
போராடிச் சரிசெய்தான் மாலுமி.

தீவின் கரைதொட்டது கலம்
நிலமுலர்ந்த பொழுதொன்றில்
புதையலும் மெய்ப்பட
பெரிதாய் படையலிட்டனர்
போதகன் போற்றிய கடவுளுக்கு!

சிரித்தபடி நடந்தான்
கரை சேர்த்தவன்.

Friday, October 8, 2010

அறிவிலி


பற்றி எரிகையிலும் பூப்பூக்க
உன்னால் மட்டுமே முடியும்
'மத்தாப்பூ'!

சுற்றி எரிகையிலும்
உள்ளே,
பூகம்பம் வெடிக்கையிலும்
சொர்க்க‌த்தில் இருப்ப‌தாய்
பாசாங்கு செய்ய
என்னால் ம‌ட்டுமே முடிகிற‌து

எள்ளி ந‌கையாடும் எல்லோரையும்
ஏதேதோ க‌தைக்கிறாரென‌
செவிடு பாய்ச்சுவ‌து
எப்ப‌டி அக‌ந்தையாகும்?
புற‌ம் பேசுத‌ல் த‌வ‌றென‌ப்ப‌டாத‌
உல‌க‌த்தில்....

பாச‌முட‌ன் விர‌ல் பிடித்து ந‌ட‌க்க‌
குழ‌ந்தைக‌ளே பிடிக்கிற‌து
கோரிக்கையோ கட்டளையோ
இல்லாத செல்லச் சிணுங்களில்
சிக்குண்டுச் சிரிப்பதை
ம‌ன‌ முதிர்ச்சி இல்லையென்ப‌தா?

செய‌ற்கையாய் சிரித்துச் சிரித்து
க‌ண்ணில் நீர்வர மெய்யாய்
சிரித்த‌து எப்போது?
நினைவேயில்லை

வலி நிர‌ப்பி வடித்த
வார்த்தைச் சித்திர‌மெல்லாம்
அரிதாய் வாசிக்க‌க் கிடைக்கையில்
அதே காயாத‌ குருதி வாச‌னை
கிழிக்க‌ப்ப‌ட்ட‌ இத‌ய‌ம் இன்னும்
தைக்க‌ப்படவேயில்லை

சுயமெனும் இருள்வெளி தாண்டி
புற‌வெளி உல‌வ‌க் கிடைத்த‌
வாய்ப்புகளெல்லாம் வாகாய்
வ‌ரிசையில் நிற்கின்ற‌ன‌
விரும்பிய‌ திசை எதுவென
தேர்ந்து செல்லும் ம‌ன‌திட‌மின்றி....

கிழிக்க‌ப்ப‌ட்ட‌ நாட்குறிப்புக‌ளை
க‌ண‌க்கெடுக்கும் ம‌ன‌சாட்சி
ஏனோ,
வாழ‌ப்ப‌டாத எஞ்சிய காலத்தை
வ‌ச‌ப்ப‌டுத்த‌ முய‌ல்வ‌தேயில்லை

கூர்மங்கிய நாக்குகளினால்
குத்தப்பட்ட சொற் காயங்கள்
உயிர் நீங்கலாக
மற்றதை மாய்த்தும்
அவர் மனம் நோகுமென
பதிலடி தராத பரிதாப தருணங்கள்
அறிவிலி வாழ்க்கையில்
அனேகம் நிகழ்வதால்
இப்பெயர் பெற்றேன்
காரணம் அறிக‌!

ஒரு வருத்தமான நிகழ்வின் போது எழுதியது.அதுபோலுமின்று ஐம்பதாம் நிகழ்வு. வாங்க கொண்டாடலாம்.:))

Thursday, October 7, 2010

யாழ் நீ


சிறு மென்விரல் தொடுகை
சந்நாதமெழ பதறினள்
கடம்பவன தேனீக்கள்
தீண்டலென என்னுயிரும்...

திம்மென்று கனத்தது நெஞ்சம்
எத்தனை திங்கள் கழித்திருந்தாள்
சுரமொழி மௌனியாய்...

நாண்கள் ஒவ்வொன்றாய்
இழுத்து மீட்ட உருப்பெற்றது
சிதிலமான கலைப்பொருள்
நிமிடத்தில் இசைப்பொருளாய்...

உயிர்பெற்றவள் ஆன்மத்தீண்டல்
தேனமிர்தத் திரட்டலாய்
செவியிறங்கி இதயம்வரைக்கும்
நிரம்பி வழிந்தது நாதம்
பெருமழையாய்...

Tuesday, October 5, 2010

சீழ்க்கை

திருவாய் மலர்ந்து
மடக்கிய நாக்கில்
இருவிரல் அழுத்தி
பூவிதழ் அணைப்பில்
சிறைசெய்த காற்றை
விடுதலை செய்ய...

ஏதும் நிகழாத தடுமாற்றத்தில் நான்
ஏதாவது நிகழாதா என்றேங்கியபடி அவன்

எண்ணிலடங்கா தோல்விக்குப்பின்
நான் மொழிந்ததை அவன் நடத்த
அன்றேயென் பாலகுருவானான்

நான் பயின்றபடியேயிருக்க
வகுப்பில் என்னைப் போல்
இன்னும் சில மாணவிகள்!

Saturday, October 2, 2010

வாழ்க நீ எம்மான்



முண்டாசு கவிஞன் பாரதியின் வரிகளில் மானுடருள் உயர்ந்து சிறந்த மகாத்மாவுக்கு என் வணக்கங்கள் சமர்ப்பணம்.


தேசிய கீதங்கள்

 வாழ்க நீ எம்மான்

மகாத்மா காந்தி பஞ்சகம் 


வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க! 1

அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்,
குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய், புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!2

வேறு

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ?
என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்!
தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை பெருமான்,
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனி லுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை!
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!