Friday, December 31, 2010

மெல்ல மெல்ல...

“ஏய் பப்ளிமாஸ்! இங்க வாடி”
“என்ன மாமா?”
“நீ என் கண்ணுக்குட்டியாம்ல.இந்த நம்பருக்கு போட்டு நித்யா இருக்காங்களான்னு கேளு.நான் அவ கூடப் படிக்கிறேன். பேசனுமின்னு சொல்லு”
“கேட்டு...உங்கிட்ட குடுக்கணும்மாக்கும்? எனக்கென்ன லாபம்?”
“அப்டியே வச்சன்னா. லஞ்சமா கேக்குற.. இரு இரு.“
“அப்ப முடியாது போ”
”அய்யோ ஏ...ஏய்... நில்லுடி. சைக்கிள் ஓட்ட கத்துக்கணுமின்னு சொன்னேயில்ல?சின்ன சைக்கிள் வாடகைக்கு எடுத்து தருவேன்.என் நித்து மட்டும் பேசிட்டா, எனக்கு அது போதும்.”
இரண்டு மூன்று முறை உளரலுக்குப் பின், நித்யா தொலைபேசியில் வருவதற்குள் நாலைந்து குட்டுகளுடன் தலை விண்ணென்று வீங்கியிருக்கும். எல்லாமும் சைக்கிள் மீதான ஆசையில்.. இமை தாண்டி வராது சத்தியத்திற்கு கட்டுப்பட்டிருக்கும் கண்ணீர் துளிகள்.
தொலைபேசியில் முடிஞ்சதும், நேரில் பார்க்கும் ஆசை வருமோ என்னவோ? எனக்குத் தந்த எல்லா வாக்குறுதிகளும் புகையாய் கக்கியபடி அந்த இருசக்கர வாகனம் அம்மாச்சி வீட்டு எல்லை கடந்திருக்கும்.

********

”ஏய் குட்டிம்மா. இங்க வாடாச் செல்லம்”
”போடி வாடில்லாம் விட்டுட்டியா மாமா? இவ்ளோ பாசமா கூப்பிடுற?”
“இல்ல செல்லம் இந்த நம்பருக்கு கால் பண்ணி ரேவதி இருக்காங்களான்னு கேளு. அவங்க பேசுனதும் என்கிட்ட குடு”
“பேரு வேறயா இருக்கே.... போன பொங்கலுக்கு நித்தியான்னு சொன்னே? அதுக்குள்ளயும் மாறிடுச்சா?”
“அவ ஒரு நம்பிக்கைத் துரோகிடி. அவளப் பத்தி பேசாத.. சொன்னத செய்யாம என்ன பெரிய மனுசியாட்டம் கேள்வி கேட்டுக்கிட்டு”
”சரி சரி கத்தாத...நான் இல்லயினா யாருவச்சு மாமா போன் பண்ணுவ?“
“ம்ம்...அது எதுக்கு இப்போ? நீதாண்டி ராசிக்காரி உன்னமாதிரி வருமா?”
அவள் அழைப்பில் வந்ததும் இவன் உருகும் அழகை பார்த்தபடி, விசமத்தோடு, கதவோரம்....
“என்னடி பார்வை.பெரியவங்க பேசுறதெல்லாம் வேடிக்கை பாக்கக் கூடாது. போ விளையாடு போ!”
”மாமா... நீ அந்தக்காவ... லவ் பண்ணுறியா?”
”ஆமாடி. கல்யாணம் பண்ணிக்கப் போறேன்”
”இவங்களே கடைசியா இருக்கட்டும். எனக்குத் தெரிந்து இப்பவே கணக்குக்கு நாலு..பாத்துக்க”
“இவ என் உசுரு தெரியுமா.எங்களுக்கே புத்தி சொல்லுறீகளோ..?”
அடிக்க வரவும், சிரித்தபடி நகர்ந்த அந்த நேரத்தில் ஏனோ மனது முழுக்க சந்தோசம்.

*********

பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில்....

“எங்காச்சி மாமா?”
” ”
“ஊரு சுத்தப் போயிட்டாரா? ரெண்டு வருசம் கழிச்சு வர்றேன். என்னப் பார்க்காம எங்க சுத்தப் போயிட்டாரு உங்க புள்ள?”
“ ”
”சின்னாச்சி? ஏன் அழுவுறீங்க?”
விம்மலோடு,”அவன் அறையில கிடப்பான் பாரு.”

கல்லூரியில் நடனத்திற்காக, பாட்டுக்காக,விளையாட்டுக்காக என அவன் வாங்கிக் குவித்திருந்த கோப்பைகளும்,கேடயங்களும்.... எப்போதும் தோழிகளுடன் சொல்லி பெருமையடித்துக் கொள்ள என் வட்டத்தில் இவன் மட்டுமே.படிப்பைத் தவிர நிறைய தனித்திறமைகள் கொண்டவன். சீட்டுக்கட்டு,கோலிக்குண்டு, உண்டி வில் இப்படி எனக்கு அவனால் கற்பிக்கப்பட்ட வீரவிளையாட்டுக்கள் எல்லாவற்றிலும் வல்லவன் என்பதை விடவும் தடகள வீரன் என்பதும் மாவட்ட அளவில் பல முறை பரிசு பெற்றவன் எனபதும் கூடுதல் செய்தி. எப்போதும் துள்ளலுடன், நெற்றி புரளும் கேசத்தை லாவகமாய் கோதிச் சிரிக்கும் அவனும் அந்த வசிகரிக்கும் புன்னகையும் எதிர்பார்த்தபடி....

”மாமா”

“மாமா.....”

அறையின் வடகோடியில், ஒரு ஒடிசலான கருப்பு உருவம். எழுந்து மீண்டும் குப்புறப் படுத்துக்கொண்டது. நிதானித்த சில நிமிடங்களில் ஏதோ உணர்வொன்று உந்தித் தள்ள, அது அது.... அவனே தான்... என் கைகோர்த்து விளையாடிய அதே.. அந்த பால்யத்து நண்பனே தான்...

“மாமா....ஆஆஆ” பெருங்கதறலொன்று அறை நிறைத்தது.

“போடி...இங்கயிருந்து.” கண்ணீரை சிந்தியபடி பலவீனமாய், அவன் குரல் கட்டியம் கூறியது அவனே தான்.

மொட்டைத்தலையும், கறுத்து ஜீவனிழந்திருந்த கண்களும் உடலும் அவன் ஏதோ.. ஏதோ தோல்வியின் உச்சத்திலிருப்பதாயும்,தவறான பாதையின் பிடியிலிருப்பதையும் சொல்ல. தெளிவான தீர்மானத்துக்கு வர எனக்கு மூன்று நான்கு நாட்கள் பிடித்திருந்தது.

*********

அந்த மாபெரும் கலைஞன், போதையின் பிடியில் வெளியுலக சுவாசமே இல்லாது ஒரு எட்டுக்கு எட்டு அறைக்குள் தன் வாழ்வை சுருக்கிக் கொண்டிருந்த காலமது. காதல் தோல்வியிலும் அப்பெண்ணின் அலட்சியமான நிராகரிப்பிலும் தன் இருபத்து நான்கு வருட வாழ்க்கையை துச்சமெனக் கொண்டிருந்த காலம். வாழ்க்கை மீதான வெறுப்பு வளர வளர போதை இவனுள் ஸ்திரமாய் இறங்கிக் கொண்டிருந்தது.

“அங்க போகதடி... அவன் தண்ணியடிச்சிட்டு கிடக்கான். உங்கப்பா எங்க வீட்டுக்கு வந்தாவே திட்டுவாரு. இதுல அவங்கூட பேசுனா அவளோதான்”

“ம்ம். என்ன சொல்லிருவாரு? என் மாமா நான் அப்டி தான் பேசுவேன். யாரு என்ன சொன்னாலும் என் மாமா தானே சின்னாச்சி...ஒரு வேளை மாமாக்கு பதிலா அண்ணான்னு கூப்பிட்டு பழகியிருந்தா பேசுறது ஒண்ணும் தப்பில்லாம போயிருக்குமோ?” வாயடக்கச் செய்துவிட்டு, அலங்கோலமாய் கிடப்பவனை நிமிர்த்த போராடிக் கொண்டிருப்பேன்.

யாரும் நுழையமுடியாத அவன் அறைக்கதவுகள் என் விசும்பலாலும் நட்புக்கரத்தாலும் திறப்பதே பலருக்கு அதிசயம் தான்.பகலெல்லாம் தலையாட்டுபவன் இரவானால் எப்படியோ தலைகிறுகிறுக்கும் போதையுடன் நிற்கக் கூடமுடியாமல்... தாத்தாவின் அர்ச்சனையும் சின்னாச்சியின் அழுகையும் அம்மாச்சி வீட்டு மாடியிலிருந்து தெளிவாய் தெரியும்.கொஞ்சங் கொஞ்சமாய் என் நண்பனை வெளிச்சம் பார்க்க வைப்பதற்குள் விடுமுறையில் பாதி கழிந்து விட்டிருந்தது. எல்லா வயதினனும் குழந்தை போலத் தான் தன் கடந்த காலக் கதைகளை சொல்லிக் கேட்கையில். பழங்கதைகளை பேசிக் கழிப்பது இது போலும் தோல்வித் தருணங்களில், அதுவும் சிறுவயது சினேகிதியால்,அப்பேறு கிடைக்கப் பெற்றவன் மிகச்சிறந்த அதிர்ஷ்டசாலி.என் ஆறுதலும் அசட்டுத்தனங்களும் பெரிய இம்சை தரவே முன்போல் அறைக்குள் யாருடனும் பேசாமல் முடங்கிக் கிடப்பதில்லை. வண்டியில் ஊர் சுற்ற ஆரம்பித்த வரையில் நிம்மதி.

பாதிக்கிணறு தாண்டியவனை அதற்குப்பின் பார்க்க வாய்ப்பேதும் கிடைக்கவேயில்லை. வயதுப்பெண் என்கிற வரையறை வேறு.விடுமுறை முடிந்து கல்லூரி, புது வித சூழல் என மாறியபோதும், மாமா குறித்து சில சமயம் கொடூர சொப்பனங்கள் வந்து போகும். தொடர்பு கொள்ள எந்த பிடிப்பும் இல்லாமல் அவன் நல்வாழ்வுக்கான பிரார்த்தனைகள் மட்டும். சஷ்டிக்கவசமும் விநாயகர் அகவலும், எனக்குத் தெரிந்த மிகச்சிறந்த விரதங்கள்.அவனுக்காய் கடைபிடிக்கப்படும்.

**********

“அம்மு! சின்னாச்சி உன்ன பொண்ணு கேட்டு வந்து உங்கப்பா ஒரே களேபரம்.நேத்து காலையில நடந்த கூத்து.எனக்கு கூட ஆச தான்...” அம்மா நீட்டி முழக்கு முன், “மாமாவுக்கு தெரியுமா இதெல்லாம்..? ம்ம்?” கொதிப்புடன் சீறலும் தூக்கலாக, அம்மாவின் குரலில் பதட்டம் தெரிந்தது.

“அவனெங்க இங்க இருக்கான். பெங்களூர்லன்னா இருக்கான். இந்த பெரிசுங்க ஏதோ தப்பர்த்தம் பண்ணிக்கிட்டு... நீ ஒண்ணும் மனசில வச்சிக்கிடாத.. “ அப்படியே அந்தர்பல்டி. அம்மா எப்பவும் இப்படித்தான். எதிராளியின் மனநிலை பொறுத்து வார்த்தையின் போக்கை லாவகமாக மாற்றுவதில் கில்லாடி. நம் போக்கில் போய் அவள் இலக்கை அடையும் தந்திரசாலி.

உனக்கும் எனக்கும் கல்யாணமா மாமா? இது உன் சம்மதத்தோடா நடக்குது? நிச்சயமா இருக்காது. பின்பொரு நாள் அம்மாவின் மூலமாகவே பதிலும் கிடைத்தது. ’அவள அப்படி நான் பார்க்கல’ன்னு சொல்லிக் கத்தினானாம். ஊரிலேயிருந்து மாசி மகத்துக்கு ஆளுங்க வந்தாங்கல்ல அப்ப சொன்னாங்க.அவனுக்கு வேற பாக்குறாங்களாம்டீ.”

நட்பின் புரிதலில் ஆனந்தக்கண்ணீர் வந்தது.

Thursday, December 2, 2010

யாரோவென...

உன்
போலியான புன்னகையில்
நேர்மையற்ற கண்களில்
பசப்பலான வார்தைகளில்
மரணத்தின் வாயிலை
தொட்டு மீள்கிறது என்னுயிர்
சபிக்கப்பட்டழிந்த நட்பின் சுவடுகளை
வாஞ்சையுடன் வருடிப்போகின்றன
நினைவலைகள்
வலிதந்த காலங்கள் நீங்கலாக...

எனக்கிழைத்த துரோகத்தின் பின்புலம்
காதலோ கொடுங்காமமோ கூடாநட்போ
ஏதோவொன்றாயிருக்கலாம்
சுகித்து மீண்டதும்
இல்லை - அவ்விடம்
சூடுபட்டு விலகிய பொழுதேனும்
புரிந்திருக்க வேண்டும்
உன்மீதான நட்பும்
கொண்டாடிய நானும்
நியமங்களின்றி நிந்திக்கப்பட்டு
அந்நியமானது

உன் பெயரை
சுவாதீனமின்றி அர்ச்சிக்கும்
உதடுகள் என்றேனும்
வரம்பு மீறக்கூடும்
அன்றேனும் உயிர்த்தெழு
கர்வம் நீர்த்த சுயத்தோடு...

உன்னாலுடைந்த இதயத்தில்
கடைசிச் சில்லும்
நொறுங்கித் தீரும் வரை
மனவீதியெங்கும்
நிராகரித்தலின் பெருமிதத்தோடு
எக்காளமிடு
எனக்குள் நீ
யாரோவென...
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!