Saturday, October 25, 2014

இலக்கின் பாதையில்....

இயல்பில் நதியாய் இருப்பதால் ஓடிக் கொண்டிருத்தல் பிடித்திருக்கிறது.
எவருக்கானது என் பயணங்கள்?
எவருக்கானது என் உழைப்பு?
எவருக்கானது என் பிரார்த்தனைகள்?
எவருக்கானது என் கனவுகள்?
எல்லாக் கேள்விக்கும் பதிலாய் என்னைத் தவிர எவரோ இருந்திருக்கிறார்கள்.
எதற்கென்றும் இதற்கெல்லாம் எத்தனை பலனென்றும் எப்போதும் சிந்தித்தேனில்லை.
குட்டையாய் தேங்கி, சுயநலம் நாற்றமெடுக்குமோவென்ற பயம்.
போலியான சிரிப்புகளில்,
முதுகில் குத்தும் நையாண்டிகளில்,
தார்மீக ஆதரவோ பாதுகாப்போ எதுவுமேயின்றி
விமர்ச்சிக்க மட்டும் வரிசை கட்டும் உறவுகள் எப்போதும் பெரும் சவால்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நண்பர்கள் மற்றோர் சவால்.
நதிக்கு போர்க்குணங்களின் பழக்கமிருந்தால் கொன்றமிழ்த்தி, அடித்துக் கரைத்து தன்வழி போய்க் கொண்டிருக்கும்.
காட்டாறு அல்லவே....
வாஞ்சையில் படர்ந்த ஈரம் காரணமாய் பிழைக்கத் தெரியாத பைத்தியமென்ற எள்ளலோடு எச்சில் வார்த்தைகள்.
விழுமியச் சிதறலை தன் பவித்திரத்தில் கரைத்தபடி சலசலக்கிறது அந்த வழித்தடங்கள்.
நிதானிக்க நேரமின்றி ஓடும் பயணத்தில் சிலருக்கு மீன்களும் கழிமுகங்களில் தேக்கி விட எண்ணற்ற ஏக்கங்களுமென கடலுள் கலக்கும் கனவுகளில் லயித்தபடி ஓடிக் கொண்டிருக்கிறது நதி.
மந்திரச் சொற்களின் மாயையுள் மனம் நிறையும் நிம்மதியோடு....
வாழ்க வளமுடன் நண்பர்காள்!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!