Wednesday, March 30, 2011

சிதிலமான நினைவுகள்






நத்தையின் ஓடு போல
இலகுவாய் இயல்பாய்
தசையொற்றி கிடக்கிறது
என் பெண்மை!

வேண்டியமட்டும் இறுக
போர்த்திக் கொண்டிருக்கிறேன்
தன்மானத்தை ஆடையாய்!

அன்பே என்றவனும்
அழகே என்றவனும்
அக்கா என்றவனும்
அம்மா என்றவனும்
தோழி என்றவனும்

ஏதொவொரு பொழுதில்
எப்போதோ எதற்காகவோ
என்னை அழச் செய்தவர்கள்தாம்!

காதலைத் தந்தவனைத் தவிர
எல்லோரயும் விலக்கித் தான்
வைக்கிறது மனசு
வெறுப்பின் மிகுதியில்!

சூடாத கிரீடமென்றாலும்
நிலைக்காத பட்டமென்றாலும்
அவனுலகோடு பங்கிடவழைத்ததின்
நன்றி நவிலலாய் இருக்கக்கூடும்

எப்போதும் என்றில்லை
எப்போதாவது...
இணையைப் பிரிந்து வருந்தியழைக்கும்
பேடையின் கதறலை செவியுறும்
அக்கணம் மட்டும்

நானிழந்த அவனுக்காய்
நானில்லாத அவனோடு
மௌனமொழி பேசி
முற்றாக
விழியோரம் இருதுளி!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!