Wednesday, February 15, 2012

தடுமாற்றம்

இடது கண் துடித்துக் கொண்டிருக்கிறது
சகுனம் சரியில்லையென்றாள் ஒருத்தி
சத்துக் குறைவென்றாள் இன்னொருத்தி
’தூங்கினால் தானே’ அலுத்துக் கொண்டாள்
மற்றொருத்தி!
’கண்ணுக்கு மூக்குக் கண்ணாடியிடு’
சிரிப்பலைகள் பரவி ஓய்ந்தன.

தோழிகளின் சீண்டல்களைப் போலவே
நிற்காமல் துடித்துக் கொண்டிருக்கிறது
தாழிடாமலும்
முற்றிலும் திறந்திடாமலும்
காற்றில் அல்லாடும் கதவுபோல
இமைகளோடு இடது கண்!

அதே லயத்தில் 
பார்வையில் பருகிய உன்னை
பத்திரப்படுத்தவா வேண்டாமா
பதறிக் கொண்டிருக்கிறது இதயம்

Monday, February 6, 2012

நிரம்பியவை

கோடிட்ட இடங்களில் 
வசதிப்படி வந்தமர்கின்றன 
வார்த்தைகள்
முழுமையடைகிறது 
வாக்கியம்!
அதற்குள்
அனேகமுறை 
நிரப்பி 
அழித்து 
களைத்துவிட்டது 
மனம்