Sunday, September 27, 2009

அப்பத்தா! - ப‌ட‌ல‌ம் 3


அழகி க‌ல்யாணம் சீரும் சிறப்புமா நடந்தேறிச்சு. பந்தி முடிஞ்ச கையோட அம்மான் மக்க எல்லோரும் சொல்லாம கொள்ளாம வண்டியேறி போயிட்டாக. மனசு நெறஞ்ச கவலையோடவும் கண்ணு கொள்ளாத கண்ணீரோடவும். புதுப்பொண்ணு அம்மான் வீட்ட விட்டு கெளம்புறா. நல்லபடியா கரையேத்திட்டோம்கிற நம்பிக்கை அம்மானுக்கு. பாவம் வெள்ளந்தியான‌ மனுசந்தானே. மாப்பிள்ளய மட்டும் பாத்து ஏமாந்துட்டாரு.

'சல் சல்'ன்னு தாளத்த சிந்துன சதங்க சத்தம், பக்கத்துல தாலி கட்டுன புருசன்,சர சரக்குற கூரை புடவை.கதம்பமும் சந்தனமும் கலந்த வாடை. ஒரு திணுசான மயக்கத்துல இருந்தா அழகி. இப்போ நடக்குற பெரும்பாலான க‌ல்யாண‌த்துக்கு மாப்பிள்ள மட்டும் போதும், தனிக்குடித்தனம் வழக்கத்துல இல்லாத அந்த காலத்துல மாப்பிள்ளைய விடவும் மாப்பிள்ளைய சார்ந்தவுங்க ரொம்ப முக்கியம். அதுலயும் அழகி வாக்கப்பட்டு போற அந்த வீடு இருக்கே, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா பிரச்சினைகள் வந்தமேனிக்கு இருக்கும்.ஆளாளுக்கு நாட்டாமை.புது அடிமைதான் நாம‌ அங்கன்னு தெரியாத‌ அழ‌கி, ந‌ம‌க்குன்னு ஒரு கூடு கெட‌ச்சிருச்சு,இப்ப‌டி வாழ‌னும் அப்ப‌டி வாழ‌னுமுன்னு க‌ண் நெறைய‌ க‌ன‌வோட, ஏகப்பட்ட எதிர்பார்ப்போட‌ மாமியார் வீட்டுக்கு போறா.
மாட்டு வ‌ண்டி நிக்குது, சுய‌ நென‌வுக்கு வ‌ந்த‌வ‌ளா திடுமென‌ முழிக்குறா. க‌ம்மாயிக்கு எதுக்க‌ மாதிரி ஒரு காலி எட‌ம், ந‌டுவுல‌ ஒரு வ‌ட்ட‌ குடிசை. 

'இது தான் ந‌ம்ம‌ வீடு எற‌ங்கு', ப‌தில் வ‌ந்த‌ தெச‌ய‌ பாத்தா சிரிக்க‌வே தெரியாத‌ மாதிரி ஒரு பொண்ணு நெற மாச சூலோட‌.மாப்பிள்ளையோட‌ த‌ம்பி பொண்டாட்டியாம்.சீம‌க் கெல்லாம் போன‌வ‌ருன்னாங்க‌ ஒரு வ‌ட்ட‌ குடுசையும் நால‌ஞ்சு ஆட்டுக் குட்டியும் தான் சொத்து போல‌.

க‌ல்யாண‌ வீடுன்னாங்க‌ ஒரு ச‌ன‌த்தையும் காணும். லேசா அழ‌கிக்கு உள்ளுக்குள்ள‌ கிலி பிடிக்குது.அம்மான் தான் விசயத்துல‌ ஏமாந்துட்டாருன்னு ம‌றுநா விடிஞ்ச‌தும் தெளிவா தெரிஞ்சு போச்சு.ஆனா என்ன‌ தோதுக்கு இந்த‌ க‌லியாண‌முன்னு ம‌ட்டும் புரிய‌வே மாட்டேங்குது அவ‌ளுக்கு.இங்க‌ எல்லாமே மாமியாரு ராஜ்ஜியமுன்னு புரிஞ்சி போச்சி அவ‌ளுக்கு. அரச புர‌சலா தெரிய‌ வ‌ருது மூத்த‌வ‌ நோவால‌ சாக‌ல, இவ‌ங்க படுத்தின பாடு தாங்காம செத்துப் போயிட்டான்னு.

மொத‌க் கோழி கூவுறதுக்கு முன்னாடி காட்டுக்கு போனா பொழுது சாய‌த்தான் திரும்ப‌ முடியுது,ராவுல‌ வாற‌ புருச‌னோ முழுக்க போதையில‌. என்ன‌ செய்யுற‌து? ஆன துணி கட்ட கூடாது,பக்கத்து வீடுகள்ல யாரோடயும் பேசக் கூடாது.அப்படி இப்படின்னு ஆயிரம் சட்டம்.குருவியா பறந்து திரிஞ்சவள கூண்டுக்குள்ள சுருக்குன மாதிரி. ஆசை மோகம் எல்லாஞ் சேத்து தொண்ணூறு நாளைக்கெல்லாம் தவிப்புகள் அத்தனையும் நத்தையா சுருங்கிப் போச்சு.ஆனா ஏதானாலும் யாருக்கிட்டேயும் கையேந்தி நிக்க மாட்டேன்னு ம‌னசுல‌ எழுதிக்கிட்டா.

இது தான் வாழ்க்கை, இதுல‌ தான் நீந்தி க‌ரையேற‌னும். எங்க‌ போக‌னுமின்னு தெரியாட்டினாலும் எங்க‌ போக‌க் கூடாதுன்னு தீர்மான‌ம் ப‌ண்ணிக்கிட்டா.அனாதையா நின்ன‌வ‌ள‌ தூக்கி எடுத்து,ம‌க‌ளுக்கும் மேலா வ‌ள‌த்த‌வ‌ரு த‌லை நிமிர‌ வாழ‌னுமின்னு முடிவு ப‌ண்ணிக்கிட்டா. ”மறு வீடு” கூட வராத மாப்பிள்ளையையும் பொண்ணையும் பாக்க‌ கூட்டாளி ச‌கித‌மா ஆசையோட அம்மான் வ‌ந்திருக்காரு. காத்துக் கெட‌க்காரு காத்துக் கெட‌க்காரு ம‌ணிக்க‌ண‌க்கா. இம்புட்டும் தெரியாம‌ அழ‌கி வாறா அலுத்துக் க‌ளைச்சு பொழுது சாய‌.

'வாடா. வாடா.ன்னு சொல்லி , மெல்ல நிமிந்து பாக்குறாரு‌ இவ‌ வந்து நின்னக் கோல‌த்த‌ப் பாத்து 'அய்யோ' ன்னு அல‌றிப் போயிட்டாரு. வாடி வ‌த‌ங்குன‌ வெத்த‌ல‌ கொடியா, நிக்க‌வும் தெர‌ணிய‌த்துப் போயி,அப்ப‌டியே சாஞ்சு நின்ன‌வ‌ள‌ உத்து பாக்குறாரு. ச‌ந்தோச‌த்துக்கான‌ அறிகுறி ஒன்னயும் காணும் அந்த கண்ணுல. 

ப‌திலுக்கு, அவ ஒடம்புல தழும்புகளும் காயங்களும் அம்மான் மனச ரணமாக்கிடுச்சு. வெறி கொண‌ட‌ வேங்கையா சீறுறாரு எல்லாருகிட்டேயும் . நியாய‌ம் கேக்குறாரு. என்ன‌ பிர‌யோச‌ன‌ம்? ஒரு அனாத‌ புள்ள‌ வாழ்க்க‌யில‌ வெள‌யாடிப்புட்டோமே.குடிகார‌ப் ப‌ய‌ வாக்க‌ ந‌ம்பி ஏமாந்துட்டோமேன்னு மெதுவா ஏறுது புத்திக்குள்ள‌.குத்தமுள்ள‌ நெஞ்சு ப‌ரிகார‌ம் தேட‌ நெனைக்குது.ஆனா பாவ‌ப்ப‌ட்ட‌ அழ‌கியோட‌ த‌லை எழுத்தோ அத்த‌ன‌ சீக்கிர‌ம் சீராயிடுமா என்ன‌?

<========= அழகி புராணம் தொடரும் ==========>

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!