Monday, October 7, 2013

தீங்கென்பது யாதெனில்...

புழுக்கள் நெளியும்
சாக்கடை  கலந்த குடி நீர்
கொதித்தும் தீரா அசூயையுடன்
குடிக்கப் பழகியவரா நீங்கள்

நெகிழிப் பைகளுக்குள்
வாழ்க்கையை சுருட்டி
இடம்பெயரும்
அடையாளமற்றவரா நீங்கள்

பிணவாடை வீசும் மருத்துவமனைக்குள்
எலிகளோடு போராடி
உயிர்தப்பிய போராளியா நீங்கள்

சட்டைப் பையில்
காசில்லாத காரணத்தால்
உறவுகளில் எவரையேனும்
மரணத்திற்கு தாரை வார்த்த
தோற்றுப் போன மனிதரா

இத்தனைக்கும் பதில்
ஆமோதிப்பான தலையசைப்பெனில்...

மிக மிகக் கொடுமையான
ஒரு திரைப்படத்தையும்
கண்ணீர் சிந்தியேனும்
கடைசி வரை பார்த்துவிடுமளவு
பொறுமை
உங்களுக்கு பழக்கப்பட்டிருக்குமா

தெரியாது

ஆனாலும்
உங்களுக்காக போராடுவதாய்
வாய்கிழிய பேசித் திரிபவரை
கடவுளாய் கொண்டாடி
நீங்கள்
உங்கள் சந்ததிக்கும் தீங்கிழைக்கிறீர்கள்

உங்கள் தாத்தனும் அப்பனும்
உங்களுக்கிழைத்த தீங்கினைப் போலவே....

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!