Friday, October 4, 2013

கதை கேட்கலாம் வாங்க!

அவனைக் காதலித்தால்
செத்துவிடுவேனென்றாள்
அம்மா!
அப்போது அவர்களிருவருக்கும்
நிச்சயம் முடிந்திருந்தது...
அவளைக் கரம் பிடித்தால்
கருகிவிடுவேனென்றாள்
அவனின் அம்மா!
அத்தைகளும் சித்திகளும்
முறுக்கிக் கொண்டிருந்தார்கள்
பெரியம்மாக்களும்
இன்ன பிற பெரிசுகளும்
தத்தம் வஞ்சத்தை இவர்தம் வாழ்க்கையில்
தீர்த்துக் கொண்டார்கள்
வணங்காமுடி அப்பாவுக்கு
அவர்கள் தரும் தண்டனையாம்
வீட்டுக்கு அடங்கியவன் தானே
விட்டு விலகிப் போனான்
திருமணத்தில் மணப்பெண் மாறிப்போனாள்
செழுமையான பணத்தோடும்
சீர்வகை கார் பங்களாவோடும்...
வந்தவளை வாழ்த்த அம்மாவும் போயிருந்தாளாம்
திருமணப் புகைப்படங்களில் பார்த்தேன்
கம்பீரமாய் இருந்தான் மாப்பிள்ளை
காதலைக் கட்டிக் கொண்டு
கண்ணீரோடு வாழ்த்தியபடி ஒரு ஜீவன்
குடும்ப அரசியலில்
எல்லோரும் வேட்பாளர்கள்
எல்லோரும் பதவியேற்கிறார்கள்
நாதியற்றவர்கள் மட்டும்
பாதிக்கப்பட்டும் பாரம் சுமக்கிறார்கள்
அம்மாவும்
ஆச்சியும்
அவனும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
நித்தமும் இங்கொருத்தி செத்துக் கொண்டிருக்கிறாள்
ஆண்டுகள் கடந்தும் அவனோடு சேர்த்திணைத்து...
இன்னமும் உலவிக் கொண்டிருக்கின்றன வதந்திகள்
கிண்டலாய் நக்கலாய் எகத்தாளமாய்
நலம் விசாரிக்கும் எல்லோருக்குமிது
பொது அறிவிப்பு
அவளுலகில் அவனுலகில்...
அவனுமில்லை அவளுலகில்...
இருவேறு பாதைகள் பிரிந்து நெடுங்காலமாயிற்று
இதில் வரும் ’அவள்’ போல்
யாரிருந்தாலும்
உரிமையாய் இரண்டு விசயம்...
”முதுகெலும்பிலிகளை காதலிக்காதீர்கள்!”
“முடங்கிக் கிடக்காதீர்கள்! உலகம் பெரிது!”

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!