Monday, October 14, 2013

நானாகவேயிருந்தால்...

யாரையோ என்னில் தேடிக்கொண்டிருந்தாய்
யாரெனக் கேட்டேன் பதிலேயில்லை
யாராயிருந்தாலுமென்ன தாயாயிருப்பதென்றானபின்?
எண்ணித் துணிந்தவொரு தேவகணத்தில்
என்னுள் நீ தேடியது யாரென்று விளங்கியது
யாராகவுமில்லாதிருந்த நீ யாரோவாக முயல்கிறாய்
பாசமிகு தாயா?
பருவம் நிறை காதலியா?
பால்யத்து சினேகிதியா?
இப்போது சொல் நான் யாருனக்கு?
எத்தனை கேட்டாலும்
எப்படி பதிலளித்தாலும்
அவளைப் பற்றிய பிரதிபலிப்புகளில்
சஞ்சலப்பட்டு
அதிர்ந்தலைவுறுகிறது
அமைதிக்கு பெயர் போனயென் ஆழ்மனம்....
அவளாகவுமில்லாமல்
உனதாகவுமில்லாமல்
நானாகவேயிருந்தால் ஏற்காதோ உன் மனம்?

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!