Thursday, October 3, 2013

காடு

ஆகுளி பறையிசைத்து
முழவு கொட்டி
கொம்பூதி
அதிர்ந்தபடியிருக்கிறது
வளம் சூழ் தருக்க வனம்
முழுநிலவுக் கொண்டாட்டம்
வனக்காளி எழுந்தருளக் கூடும்

நேற்றைய மழைக்கு பிறந்து
இன்றிரவில் சிறகுதிர்த்த
கரும் ஈசல் போராளிகள்
மின்மினிப் பூச்சிகளின் திடீர் ஒளிர்வுகள்
கிணையதிர்ந்து பேரமைதி காடதிர
குலவிக் கொண்டிருக்கும் அன்றில் பறவைகள்
இணை பிரிந்து இமை மரித்தன
தூப நடனத்தில் வெளிக்கிளம்பும் வனதேவதைகள்
வேட்டையை விஞ்சிய அதகளம்
சன்னதக் கூப்பாடுகளில்
பிய்ந்து தொங்கும் வார்த்தைகள்
வந்து விழ முந்தி ஏந்தி நிற்கும்
தளர்முலை தாய்க்குலத்தார்
அவர்தம் ஆள்படையென அதிர்ஷ்ட மயக்கத்தில்....

சீறியாழ் கூட்டமொன்று
கோடாரி கையோடு செந்தீப்பந்தமேந்திய
குரலொருமித்து மௌனம் கிழித்த வானதிர்வில்
முயல்களும் பன்றிகளும் ஒரே பாதையிலோடுகின்றன
முன்னேற்பாட்டு வலைகளில்
வசமாய் சிக்கிய வேட்டையிலொரு பங்கு
வெளிக் கிளப்பிய வனதேவதைக்கு...
அந்நிய முதலாளிகளின் சந்தனக்காப்பு

கழுத்தறுபடுமுன் முயல் சிந்திய சாபத்தில்
உறுத்தும் அறத்தின்படி
காடு விட்டு நகரமேகியது
ஆதி தெய்வம்

அவளில்லை பலியுமில்லை
கறைகழுவப்பட்ட பீடங்களில்
சுகித்துக் கிடக்கிறது அப்பெருவனம்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!