Saturday, October 12, 2013

துவேஷம்

துவேசத்தின் மழையின் நனையும்
எனதன்பின் நட்புகள்
சறுக்கிய இடங்களையே
கவனமாய் சேகரிக்கிறார்கள்

எழுதி வைத்தவைகளில்
சாதகமானவைகள் மட்டும்
அவரால் படிக்கப்படுகிறது
தவறாமலொரு அறிவிப்பு
என் முகவரிக்கு

நண்பர்களாய் இருந்தார்களென்று
கடந்ததில் சொல்வதில்
இரண்டு பக்கமிருக்கிறது

மகிழ்வின் கணங்களை மறுபடி ஓட்டிப்பார்ப்பது
அதன்பின்
இழைக்கப்பட்டதை நினைத்து வருந்துவது

இரண்டும் நடக்குமெனினும்
முதலாவதையே
முழுதாய் விரும்புகின்றேன்

பேரன்பில் மூழ்கிப் பயணிக்கும்
மீனாய் இருந்துவிட்டுப் போயேன்
நதியின் மீது நட்புக் கொண்டதாய்
சொல்லிக் கொண்டு
ஏன்
வலைவிரித்துக் காத்திருக்கிறாய்?
மிதப்பவைகளை வைத்துக்கொண்டு
என்ன செய்துவிடுவாய்
கரை சேரும் படகின் நகர்வே
மிஞ்சிக் கிடக்கும் நட்பின் தயவால் தான்...

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!