Monday, October 7, 2013

கூண்டுப் பறவையின் உலகம்

தீர்ந்திடாத வாழ்க்கையில்
திகட்டும் சுவையுடன்
ருசிக்கப்படாத பக்கங்கள்
எல்லோரிடமும் இருக்கலாம்...
அதை ஏன்
காதலோடும் திருமணத்தோடு
சேர்த்து முடிச்சிடுகிறீர்கள்

அந்தக் கிராமத்து அங்கன்வாடியில்
ஆட்டிசக் குழந்தையொன்று
ஆவிபறக்க வைக்கப்பட்டிருந்த
காய்கறிச் சோற்றை
அள்ளித் தின்ன அத்தனை ஆவலாய்...
மனதின் கட்டளையை
அதன் கை செயல்படுத்தவில்லை
காரணம் கேட்டேன்
பிறப்பிலே அப்படித் தானென்றார்கள்
ஊதி ஊதி ஊட்டிவிட
உற்சாகப் பெருவெள்ளம்
அதற்கும் எனக்கும்....

இராமாயணம் வாசித்த
கொஞ்ச நேரத்திலேயே
தூங்கிவிடும் அத்தைக்கு
நானில்லாத பொழுதுகளில்
மாத்திரையின்றி
நித்திரை வருவதில்லையாம்
அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்
தனிமையின் காரணமாயிருக்கலாம்
பதிலாய் நிரப்பிவிட்டேன் வெற்றிடத்தை...

அவளில் இரண்டாம் கருவும்
சிதைவுற்றதொரு நாளில்
நகரம் தாண்டி நானிருக்குமிடம்
தேடி வந்து கதறிய தோழிக்கு
என்ன செய்தேன் நினைவேயில்லை
அதிராமல் அழைத்து வந்து வீடு சேர்த்த பின்
அவளை விடவும் அத்தனை அழுதேன்
அவளறியாமல்...

சம்பிரதாயங்களில்லாத காதல் அது
ஒரு முறை கூட
நேசிப்பை காதலை
வார்த்தைக்குள் சிக்க வைத்ததில்லை
கண்களும் உணர்வுகளும் ஒருங்கே பேசும்
பிரிந்தாலும் புலனுணரும்
என்பதே தெளிவு

எல்லாவற்றையும்
சொல்ல வேண்டுமென்ற கட்டாயமெதற்கு?
ஒரு கூண்டுப் பறவையின்
உலகத்திலும்
எண்ணிக் கொள்ள கம்பிகளுண்டு...

2 comments:

வால்பையன் said...

//ஒரு கூண்டுப் பறவையின்
உலகத்திலும்
எண்ணிக் கொள்ள கம்பிகளுண்டு...//

உண்மை தான்...

வால்பையன் said...

//சம்பிரதாயங்களில்லாத காதல் //

காதலுக்கு எப்போ சம்பிரதாயமெல்லாம் வந்தது?

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!