Saturday, October 5, 2013

இப்படியாகத் தான்....

மனநோய்க்கான ஒட்டுமொத்த மருந்துகளுடன்
செவிலியுடையணிந்த
மருத்துவர்கள் கதவு தட்டுகிறார்கள்

தெளிவாயிருப்பதாய் சொல்கிறேன்

எல்லா பைத்தியங்களும்
இதுபோல் தான் சொல்லுமென்ற
இளக்காரத்தை இதழிடையில்
உடுத்திக் கொள்கிறார்கள்

சிரிஞ்சுகளில் உறிஞ்சப்படும்
மருந்தின் நிறம்
ஏதேதோ கலவைகளாய்...

அதனழகை ரசித்து
அந்தாதி பாடுகிறேன்
ஆமோதிப்பாய் தலையசைத்து
பலவந்தமாய் படுக்கையில் கிடத்துகிறார்கள்

பயங்கரமான அலறலோடு
பகற்கனவு முடிவுக்கு வருகிறது

எவர் செவி கிடைக்குமென்ற
ஏக்கத் தேடலின் தோல்வி
ஒரு கவிதையில் முடிகிறது....

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!