Monday, October 7, 2013

நிழலிருக்கும் என்னோடு...

என்ன பெரிதாய் கிடைத்துவிடும்
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
தூது சொல்லி
தூபம் போடுபவர்களுக்கு ..?!

மனிதர்கள் வினோதமானவர்கள்
மறைபொருள் ஏதுமில்லாதவிடத்தும்
ரகசியங்களிருப்பதாய்
போர் மூட்டி விடுகிறார்கள்

எத்தனை பாசம் தந்தாலும்
திருந்தும் வழி பாராது
நம்பிக்கைகளைச் சாம்பலாக்கிவிடுகிறதோர்
தீய நட்பு

சுட்டபோதும்
கலங்கினேனில்லை
உயிர்த்துடிப்பை சோதித்த பின்
உதிரம் குடிக்கின்றன காட்டேறிகள்

வலித்தபோதும்
கத்தினேனில்லை
கழுவேற்றி சாணம் தெளித்த பின்
வஞ்சம் தீர்க்கின்றன மானுட மிருகங்கள்

எல்லாமும்
பண்டமாற்றாகி
பணம் கொழுத்த சமூகத்தில்
கொடுத்தும் எதிர்பாராதிருப்பவன்
கவனிக்கப்பட மாட்டான் தானே!

இத்தனைக்குப் பின்னும்
இன்னுமா உலகை நம்புகிறாய்?
கேட்டபடி சிரிக்கிறான்
தற்கொலைக்கென நெடுநாளாய்
வாழ்ந்து கொண்டிருப்பவன்

அலட்டிக் கொள்ளாத
அன்புருவெல்லாம்
அத்தனை அதிசயமில்லை
அக்கம் பக்கம் பார்
அது போதும்

ஒட்டிய வயிறோடு
பரட்டைச் சிறுமியொருத்தியின்
கண்ணிறஞ்சுதலுக்கு முன்னே
இவையென்ன பெரிதா?

நடக்கிறேன்!

நிழலிருக்கும் என்னோடு....

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!