Tuesday, October 8, 2013

மௌனம் உடையும் தருணம் பார்த்து...

ஆளில்லாத போது சரி
உன்னோடிருக்கும் போதுமா
அந்தரப் பட்சியோடு
மௌனம் பேச வேண்டும்?

பார்வையால் எனையளந்தது போதும்
சிமிட்டும் இமைகளும்
வலியில் துடிக்கின்றன

வார்த்தையால் எதையாவது பேசி
வருத்தாமல் எதையாவது சொல்லி
வாஞ்சை கலந்து காதல் மொழியோடு
மகிழ்வாய் கலைந்திட வேண்டுமிந்த கணங்கள்

மென்று விழுங்கியபடி
பயத்தில் நடுங்கியபடி
தலை கவிழ்ந்தபடி
எங்கோ வெறித்தபடி

பிடித்தமில்லை உன் போக்கு...

என் ஒரு கணம்
உனக்கொரு யுகம்

ஏன் இத்தனை அவஸ்தைகளோடு
என்னோடு கழிக்க விரும்புகிறாய்
வாழ்வின்
அர்த்தமிகு  கணங்களை....
சம்பிரதாயங்களில் சிக்கிடாத
சுதந்திர மனுஷி தான்
கோழையென அறிவித்திட
ஒருபோதும் துணிந்தேனில்லை

நீயே தான் ஓட்டுக்குள்
முடங்கிக் கொள்கிறாய்
ஆமையோட்டுக்குள் வசித்திருக்கவும்
சம்மதித்தாயிற்று

அதே பேரமைதி தான்

சொல்லெறிந்து
கலைக்க விரும்பவில்லை
முன்னொரு காலத்தில்
கட்டுவித்த காதல்
கனவுகளின் கூடு
நீயே கலைந்துவிடு!
அரற்றி அழுதுவிட்டு
மௌனம் பழகிக் கொள்கிறேன்
வாழ்ந்து கொண்டே சாகும்
வரமெனக்கு வேண்டாமே!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!