Thursday, October 3, 2013

திணை ஆறு


*

நினைத்த மாத்திரத்தில்
அன்பால் நெருங்கிவிடும்
சாத்தியக் கனவு நீ!
புனலாடி பெருமகிழ்வு
திண்புயக் பெருங்காவல்
நுதல் நனைக்கும்
மென்சூட்டு மான்முத்தம்

**

கார்மேகத் தோகையோடு
மழையாடும் நடனத்தில்
நானிசைக்கும்
ஆம்பல் பண் நீ!

***

குரலினிமையில் சொக்கிக் கிறங்கும்
அஞ்சிறைத் தும்பி நான்
கிங்கர கீதமிசைத்தபடியிரு!
பயமின்றி துஞ்சட்டுமென் இமைகள்
நூற்றாண்டுக் கவலை மறந்து....

****

கொந்தளிக்கும் கடலுள்
சறுக்கிக் கொண்டோடும்
அலைவிசைப் பலகையென
துவளும் பணைத்தோளேந்தி எழுதிவிடு
இன்னுமொரு காமுறு கவி!

*****

எல்லாமும் நீ என்றானபின்
என்னுள் எதாவது மிச்சமிருக்கிறதா
எனக்கே எனக்கென்று...
அதீதம் தான்
ஆனாலும் இனிக்கிறது
தாழற்று ததும்பும்
நின் தரணிப் பெருங்காதல்

*******

கொட்டும் பறையதிர
விட்டெழும்பும் தூளிப்படலமென
இதழ் சிவக்கும் முத்தப்பறை
மீட்டி யெழுப்பட்டும்
அழுந்தக்கட்டிய பெண்மையின்
அந்தரக் கனவுறை
யாழின் நரம்புகளை...

*********

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!