Wednesday, October 2, 2013

கனவில் பயணங்கள் -1

உயிர் உறிஞ்சி உடல் துப்புகிறாய்
எந்தக் கனவில் தொலைந்தாய்
இமைமூடி பொழுது புலருமிந்த
நித்திரை விளையாட்டுக்களனைத்தும்
நேற்றைய நம்மைத் தேடிக் கண்டடையவே

ஆழ்மனதை எழுத்தில் பேசுவதின்
சிரமம் என்ன தெரியுமா?
படிப்பவரெல்லாம் எனக்காக கண்ணீர்
சிந்துவார்கள்
அதிலே சிலருன் பாத்திரமேற்று
நிகழ்வில் வலம்வர ஒப்புதல் வேண்டியும்
பாத்திரப் படைப்பின் பின்புலம்
தானென்று தர்க்கமிட்டும் வருகிறார்கள்

போகட்டும்
நேற்றைய கனவில்
உன்னைத் தேடியொரு ரயில்பயணம்
ஓட்டைப்பல் சிறுமியொருத்தி
சினேகமாய் வந்தென் பெயர் கேட்கிறாள்
கன்னம் கிள்ளியபடி சொல்கிறேன்
மாராப்புக்குள் மறைந்தும் தெரியும்
திருமதியென்பதன் அடையாளம்
எதிர்வரிசையிலொரு மூதாட்டி
பார்த்தபின்னும் கேட்கிறாள்
பெருமிதமாய் பதில் சொல்கிறேன்
பெரியவர்கள் மௌனத்தால் ஒதுக்குகிறார்கள்
குழந்தைகள் கரையொதுங்கிய
சிப்பியைத் தான் தீண்டுவார்கள்
முத்துக்களற்றிருப்பதன் கவலையேதுமில்லை
வலைவிரித்து மீன் பிடிக்கவும் தேவையற்ற மனம்
பயணத்தில் நீயும் உடன் இருந்திருக்கலாம்
பல்லழகியும் அவள் பசுந்தமிழும்....
கதை சொல்லி மடியிருத்தி போக்குக் காட்டி
அந்தப் பயணத்தை நீடித்தபடியிருந்தேன்
பார்!
வெண்ணுரை பெருக்கி நீலக்கடல்
தூரத்தே சப்தமிடுகிறது

அலையோசைக்கு யார்
அலார மணியோசையை
பிண்ணனி சேர்த்தது...?

[விடியல் -1]

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!