Friday, October 11, 2013

சுயவிளக்கம்....

யார் கைதூக்கிவிட்டும் யாராலும் முன்னுக்கு வர முடியாது.யார் இகழ்ந்தும் காழ்ப்பில் ஒதுக்கியும் யாரையும் பின்னுக்குத் தள்ள முடியாது.
அவருக்கென்று சுயமாக திறமையோ தெளிவான அறிவோ இல்லாத வரை அவர் முன்னேற தான் மட்டுமெ காரணமென்று அலுத்துக் கொள்ளும் கூட்டம் முளைத்துக் கொண்டேயிருக்கும்.

இன்னும் சில இடங்களில், வளர்ந்து வரும் சிலர் தான் தாக்கப்படுவதாகவும் ஒடுக்கப்படுவதாகவும் தானே புரளியைக் கிளப்பி பெரிய பச்சாதாபத்தையும் கருணையும் கொண்டு தன்னை நிலை நிறுத்தத் துடிக்கிறார்கள். படுகேவலமான விளம்பர யுக்தி. ’என்னடா விளம்பரம்? அந்த சினிமாக்காரங்க தான் அப்டின்னா’ கரகாட்டக்காரன் காமெடி தான் நினைவுக்கு வருது.

இந்த நவீன இலக்கிய உலகை, இலக்கியவாதி என்கிற தகுதியில்லாமல் பொதுவான பார்வையாளராக வெகுநாட்களாக கவனித்து வருகிறேன். எனக்கெல்லாம் எழுத்தென்பது மனதில் நினைப்பதை எழுத்தாக்கும் முயற்சி. முயற்சித்துக் கொண்டேயிருக்கும் மாணவி தான் நான் இன்னும். நவீன இலக்க்கியவாதிகள் பேசித் திரியும் ஆயிரம் வரிகளில் ஒன்றிற்கு கூட அவர்கள் எழுத நினைத்த அந்த மறைபொருள் கருவை உள்வாங்குமளவு அத்தனை பெரிய அறிவுஜீவியுமில்லை. அதே சமயம் எழுத்துக்கும் நடத்தைக்கும் இம்மியளவு சம்பந்தமுமில்லாத பல ஆளுமைகளைப் பார்த்து எரிச்சலடைந்து இருக்கிறேன். தனிமனித அறம் கடைபிடித்தலென்ன அத்தனை கஷ்டமா? ’நீ வாழ அடுத்தவனைத் தூற்றாதே’ இந்தமட்டும் கூடவா கஷ்டம்?

தலித்தியம் பெரியாரிஸம் பெண்ணியம் இதெல்லாம் முன்னெடுக்கும் பெரும்பாலோர் தன் சுய விளம்பரத்துக்காக,அரைகுறை உணர்வோடு பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். மிகவும் வருத்தமான விசயம் இது. லைக்கும் கமெண்டுக்குமென இது போலான மதிப்பும் வலியுமிக்க விசயங்களை முன்னிறுத்த என்ன அவசியம் வந்தது? பிறப்பால் நீ இன்னவனென்று ஒதுக்கப்படும் ஒரு நிலையில், அவன் அட! ஏன் இப்பிறவியெடுத்தோம்ன்னு கூனிக் குறுகிப் போதல் எத்தனை வலியோடான வருத்தம். இன்னும் நடக்குது தானே... ?அதையே குத்திப் பேசி இன்னும் மிருகமாய் அலையும் பலர் பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தைப் படிக்க மறந்து வல்லுநர் ஆனார்கள் போலும். நான் கடந்த வலிமிகு விசயங்களை நிச்சயம் பதிவேன். இதற்கு சாதிச் சாயம் பூசப்பட்டாலும் உண்மை என்பதை படிப்பவர்கள் நிச்சயம் உணர முடியும். கவிதையில் பொய் சொல்லிவிடலாம். ஆனால் உரைநடையில் மிகை உணர்வு பொய் தூவல் எல்லாம் எளிதில் புரிந்திடும் தானே ... ?

இதோ இங்கே பெரியாரையும் தலித்தியத்தையும் (உயர்வாகவோ / தாழ்வாகவோ) பேசி தன்னை நிறுப்பித்துக் கொள்ளும் எவரும் அந்த கருத்துக்களையும் அவர்தம் வலியையும் உணர்ந்தாரில்லை. எங்களைப் போன்று இதன் எல்லாபடிநிலைகளிலும் வாழ வாய்ப்புக் கிடைத்தவர்களையும் மட்டமாக இந்த முகனூல் கலாச்சாரத்தில் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பது எரிச்சல் மிகுந்த வலி. இதில் புதிதாய் வந்தவர்கள் என்கிற ஹைலைட் வேறு. சங்கத் தமிழ் பேசுவதாலேயே எழுதுவதாலேயே எல்லாமும் ஏற்கனவே பதியப்பட்டதென்றும் படியெடுக்கிறோம் என்கிற சொல்லாடலும் தவறு. எனக்கும் கற்பனா சக்தி உண்டு. கொஞ்சம் எழுத வருதுன்னும் சொல்லாம்ன்னு நெனைக்கறேன். சங்கத் தமிழ் படித்த ஒருவனுக்கு தான் மட்டுமே தமிழின் சுமை தாங்கி என்கிற அனாவசிய கர்வம் இல்லாது போகும். தமிழ் நிறைவுடை மொழி. புரியாதவனுக்குத் தான் எழுத்தாளுமையென்றும் எழுதுவதாலேயே தலைக்குப் பின் சூரிய வட்டமிருக்கிறதென்கிற கனமும் இருக்கும்.

சங்கப் பாடல்களில் எல்லா உணர்வுகளிலும் தமிழன் ஊறித்திளைத்திருக்கிறான். நம் தேவைக்கேற்ப புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. ஒரு தனிமனித வாழ்வியல் சூழல் என்கிறமட்டும்.. சமூக ஏற்றத் தாழ்வு எத்தனையோ ஆண்டுக் கொடுமை. அது தவறென வாதம் புரியும் நவீனங்கள் வரவேற்கத் தக்கன. இன்னமும் ஒருவன்/ஒருத்தியின் மனநிலை சார்ந்து தானே எழுதப்படுகிறது படிப்பவருக்கும் புரிந்தும் சில நேரம் புரியாமலும்.... ஆக கடமைக்கென கவியெழுதல் அத்தனை உடன்படும் விசயமல்ல என்றாகிறது. இதே தொனியில் எழுதிக்கொண்டும் பிதற்றிக் கொண்டும்.. கடுப்பா இருக்கு. என்னையும் நான் படிக்கிற எழுத்துக்களையும் சேர்த்து தான் சொல்றேன். ஆனால் பாருங்க, நானெல்லாம் இலக்கிய வட்டத்துக்குள்ள நுழையவேயில்லை. அது என் விருப்பத் தெரிவுமல்ல. ஒளிவட்டம்,ஆசிச்சொல்,அகமலர் நிறைவாழ்வுத் தழும்பலகளென பெரிய சுயபிரசங்கமும் செய்வதில்லை.

ஆதலினால் என்னைச் சீண்டாது படிக்கவிடுங்கள். ஆயுள் முடிவதற்குள் ஆன்ம படைப்பிற்கென அவசியமிருக்கிறது.

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!