Monday, October 14, 2013

காதலா!

எல்லாப் பொழுதுகளிலும் நினைவுகளாய் இருப்பதாகவும்
தனிமை அவனால் நிரம்பிக் கிடப்பதாகவும்
பிதற்றிக் கொண்டிருந்தான்
அன்றாடங்களை அச்சுப்பிசகாமல்
சொன்னபோதெல்லாம் சுவர்களிலிருக்கும்
கண்களைத் தேடிக்கொண்டிருந்தேன்
விட்டுப் பிரிதலும் விரகத் துயரும்
சாதலினும் கொடிதென்றாய்
சிற்றின்ப போகியென்று சீற்றம் கொண்டு
மூதுரை சொல்லிவைத்தேன்

கூற்றுகளையும் இளக்காரப் புன்னகைகளையும்
கிழித்தெறிவதற்கெனவே
வேடமிட்டுக் கொண்டேன்
வாட்டமிகு முகத்தை புன்னகை பூசி மறைத்தேன்
ஏக்கங்களத்தனையும் எழுத்தில் வராமல்
பார்த்துக் கொண்டேன்
நட்பின் வட்டத்தை நீயின்றி செதுக்கிக் கொண்டேன்
இனியொருமுறை எதிரில் வந்தால் காறியுமிழ்வதென
கணக்கற்ற வெறுப்பினை வளர்த்துக் கொண்டேன்
செல்பேசி அழைப்பிலெல்லாம்
இதழ்பூட்டிக் கொண்டன வார்த்தைகள்

எங்கோயிருந்த நீ இங்கே வந்துதித்த போது...
என்னையுமறியாமல்
ஏதேதோ மாற்றங்கள்

ஆம்!
முன்போல் இருட்டுக்கு பயமில்லை
பல்லிகளையும் பாசமாய் பார்க்கிறேன்
மின்வெட்டுத் தருணங்களிலெல்லாம் விதிர்த்தெழாமல்
கவிதை பேசிக் கொண்டிருக்கிறேன்
இசையை இன்னும் அதிர்ந்து உள்வாங்குகிறேன்
நேரில் பார்த்துக் கொண்டபோது
ஏன் கட்டிக் கொண்டழுதேன்?
விடாமல் நீயுமேன் விசும்பிக் கொண்டிருந்தாய்?

1 comment:

priyamudan said...


கவிதையானு அறிந்து கொள்ளும் பக்குவம் எனக்கில்லை....
ஆனா நல்ல இருக்குங்க

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!