Sunday, October 6, 2013

முன்னறிதலும் பலவீனமே

இப்படியொரு சொல்லுக்கு எதிராய்
இன்ன வகைச்சொல் தான் வரும்
இந்த நடவடிக்கைக்கு
இப்படி தான் பதில் பேசும் எதிரணி
எனக்கெதிரான யுத்திகளின் நகர்த்தல்
எனக்குத் தெரிந்த
ஏதாவதொரு உபாயமாகத் தானிருக்கும்
என் படையும்
அவர் படையும்
நான் சொல்கிறபடியே போரிடுகின்றன
கூர்மதி வட்டம் தாண்டிய
அனிச்சை கொந்தளிப்புகளும் மனப்பாடம்
மூன்றாம் எதிரியின் வழி
நான்காம் உலகமும் படிகத் துவங்கியாயிற்று
ஜெயித்துக் கொண்டேயிருப்பது
அத்தனை உவப்பல்ல காண்பீர்
அவர் முகத்து உவகைக்கென
ஆங்கே தோற்பதும் கடமையாகிறது
கனத்த மனத்தின் திறப்புக்கென
கனகச்சிதமான சொற்சாவிகள்
எம் வசமிருக்கின்றன
ரகசியங்களுக்கென தனியொரு அறையில்லை
நீர்குமிழ் மேவிப் பூசியதை
நான் சொல்லாமல் எவரும் உடைத்துவிட முடியாது
கைப்பிடிக்குள் சூழலை
சிறைப்பிடித்திருப்பதும் எரிச்சலூட்டுகிறது
ஆச்சர்யங்களும் பிரம்மிப்புகளும்
ஏமாற்றமும் எதிர்பாராதவையுமின்றி
என்ன வாழ்க்கையிது
நத்தைக் கூட்டுக்குள் மூழ்கிவிட்டு
சமுத்திரம் படித்ததாய் சத்தமிடுவது?
எதையும் மதித்திடாத ஆணவத் திமிருக்குத் தீனியாய்
எத்தனை படித்தாலும்
நெடுநேரம் குழந்தையாய் வைத்திருப்பதில்லை
பிறகென்ன வாசிப்பு
மீண்டெழும் எல்லாவுணர்ச்சிக்குப் பின்னும்
எள்ளின் நுனியளவேயாயினும்
குழந்தையாகிச் சிரிப்பேனாகில்....
அன்று பேசலாம் வாருங்கள்
ஆகச் சிறந்த படைப்பின் பெருஞ்சீற்றத்தை...

1 comment:

vasan said...

பலமுறை படித்தேன் .தேர்ந்த சொல்லாட்சிகள் .அந்த பலவீனத்தை வெல்ல முடியுமா என்ன !!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!