Friday, October 11, 2013

’நான்’ எனும் திமிர்




ன்னுலகம்
பட்டாம்பூச்சிகளாலும்
மீன் தொட்டி மீன்களாலும்
குழந்தையின் கால் தடங்களாலும்
பரிமளித்து வந்தது

உலகை வெளித்தள்ளி
ஓட்டுக்குள் முடங்கியிருந்தேன்
நம்பிக்கை தந்தார்கள்
அணை கட்டுவித்த
பேரன்பின் நதியாயிருந்தேன்
பாசத்தால் உடைத்தெடுத்தார்கள்

மொழியால்
இசையால்
அன்பால்
தன்னுள் கூடுகட்டவென்று
அழைப்புகள் வேறு....

இல்லாத பிரச்சினைக்கு
இருப்பாய் எனையேன் தேர்ந்தார்
இன்றுவரை பதிலில்லை

கறுப்பு நாளிலொன்றில் 
கண்கள் திறந்து போது
புலப்பட்டதந்தக் காட்சிப்பிழை

அன்பை சந்தேகித்தோ
அதை புறகணித்தோ
பழகியிராத கண்களிலெல்லாம்
வேதனையின் காத்திரம்

மீண்டும்
முடங்கிக் கொண்டேன் கூட்டுக்குள்
இம்முறை
தீப்பிடித்து எரிகிறது
என்னுள் அடங்கமறுக்கும்
நதி!

குற்றமற்றிருப்பதாகவும்
விசாரிக்கப்படாது
தண்டனை ஏற்றதாகவும்
சொல்லிப் புலம்புகிறார்கள்
நான் விட்டுப் பிரிந்தவர்கள்....

உன்னைப் பற்றி
இன்னது சொன்னது
தானில்லையென்று
அடித்துச் சொல்கிறார்கள்
பொதுவில் பேசியவர்கள்
ஆதி யாதென அறிவேன் தானே!

புறம்பேசிகளைப் பற்றி
எப்போதும் கவலையில்லை

ஏங்கிக் கிடக்கிறாளென
ஏளனம் பேசி
என்னோடே பயணிக்கும்
கருப்பு நண்பர்களைத் தான்
துரோகிகள் என்கிறேன்

பேசித் தீர்த்திருக்கலாம்
திட்டித் தீர்த்திருக்கலாம்
இல்லை
சின்ன புறக்கணிப்பில்
துடித்திறக்கச் செய்திருக்கலாம்
எதுவுமில்லாமல்
ஏன் நட்பாய் நடிக்கிறார்கள்?

தனிமைக்குள் ஓடிவந்து
தானாய் ஒட்டிக் கொள்ளும்
நாயுருவிகளை
நட்பென்றா சொல்வது....?

யாருக்குமல்ல
எனக்கே பயந்து வாழ்பவள்
நான்!

இங்கே ‘நான்’ என்பது
சமரசங்களில்லா
நேர்மையின் கர்வம்
தீயிலிட்டாலும்
ஜொலிக்கும் வெண்சங்கின்
பவித்திரம்
ஆகச் சிறந்த பெண்மையின்
திமிர்

நான் என்றுமே
என்னுடனிருக்கும்
நான்

எவர் தூற்றியும்
எவர் இகழ்ந்தும்
எவர் உமிழ்ந்தும்

என்னோடிருப்பது
’நான்’ எனும் திமிர்
அழிவேனாகிலும்
அடங்க மறுக்குமென் சுயம்

4 comments:

'பரிவை' சே.குமார் said...

அழகிய கவிதை...
தொடர்ந்து எழுதுங்க கயல்.

Unknown said...

The words are very strong, choosy and rightly placed. But just it is not portraying the character more introvert rather than fighting one.

With regards,

PT

priyamudan said...


வலி கூட்டும் அனுபவங்கள்
"தென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது!" - சரிதான்

மதி said...

//இங்கே ‘நான்’ என்பது
சமரசங்களில்லா
நேர்மையின் கர்வம்
தீயிலிட்டாலும்
ஜொலிக்கும் வெண்சங்கின்
பவித்திரம்
ஆகச் சிறந்த பெண்மையின்
திமிர்
//

மிக உண்மையான வரிகள்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!