Wednesday, October 2, 2013

கவிக்கோர்வை - 19

****

எனக்கான கேள்வியொன்றை
கேட்டுவிடு பார்க்கலாம்
அதற்கான
ஆகச் சிறந்த பதிலை
நிச்சயம் தருவேன்

***
கண்ணாடியால் சூழப்பட்ட அறையில்
தான் வசிக்கிறேன்
ஆக
முதுகில் கண் இருப்பது
அவசியமற்று போனது

***

உமையொரு பாகமென்று பாடாதீர்கள்
கவிஞர்களே!
அவளுள் சிவனொரு பாகமென்று
பாடிப் பழகுங்கள்

****

இவர் சொன்னார்
அவர் சொன்னார்
அதையே/இதையும்/எதையோ சொன்னார்
இதுவரை
எவரும்
உண்மை சொன்னதில்லை

****

கிட்டத் தெரியும் தட்டான்களும்
தூரத் தெரியும் விமானங்களும்
ஒரே மாதிரியான
ஆச்சரியங்கள் தான் குழந்தைகளுக்கு....

****

நிமிடத்திற்கு நிமிடம்
மாறிக் கொண்டிருக்கிறேன்
சோப்புக் குமிழி போல் படர்ந்த
வண்ணங்களை வேடிக்கை பார்க்கிறாய்
பரிணாமங்களில் ஒன்றைத் தான்
திரும்பத்திரும்ப சொல்லியாக வேண்டும்
நானும் கூட
நிலையற்றவள் தான்

****

மன்னித்துவிடு!
கதவு தட்டாமல் அறை நுழைந்துவிட்டேன்
சம்பிரதாயத்திற்கென வெளியேறி
அனுமதியோடு மீண்டும் வருகிறேன்
அன்றேனும்
சிரித்தபடி உபசரி பார்க்கலாம்!

****

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

கிட்டத் தெரியும் தட்டான்களும்
தூரத் தெரியும் விமானங்களும்
ஒரே மாதிரியான
ஆச்சரியங்கள் தான் குழந்தைகளுக்கு....

உண்மைதான் ..!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!