Sunday, September 15, 2013

சுயம்பென்றாலே தான்தோன்றிகள் தாம்!

நண்பனோடு உறவு கொள்வதில்லை
அவன் நண்பன்
நண்பன் மட்டுமே
தெளிவாகியிருக்கும் இந்நேரம்
நம்பாமல் கிசுகிசுத்தாலும்
கடுகளவும் மதிக்கப்போவதில்லை
உங்களுக்கு அவசியமில்லாத எதற்கும்
என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள்!
உறவுக்கழைக்கும் காதலனிடம் நட்பை வேண்டுகிறேன்
தாலிக்குப் பின்னென்ற
தீர்மானத்தை முன் வைக்கிறேன்
காதலன் கணவனாவதை தற்காலிகமாக தள்ளிவைக்கிறான்
என் நியாயம் இப்படி....
ஒருநாள் விருந்துக்கு
வாழ்நாள் மரத்தை வெட்டுவானேன்...
போலிகள் மீது நம்பிக்கையில்லாதயென்னை
சுற்றம் வெறுக்கிறது
இருந்தாலும்.....
கடலளவு பாசத்தோடு கரை தொடுகிறேன்
எதிர்படும் எல்லோருமென்னை
'கட்டுப்பெட்டிப் பட்டிக்காடு' என்கிறார்கள்
அங்கே தானே இம்மரம் வேர்பிடித்தது?
மிகையுணர்ச்சிகளுகாட்படும் வழக்கமில்லையாதலால்
பிள்ளைமை சிந்தும் செம்மொழிக்கவி
ஒரு கோப்பைத் தேநீர்
இரண்டு மெல்லிசைக் கோர்வைகள் போதும்
இயல்புக்கு வர....
அந்தோ பரிதாபம்!
அடிபட்டு எதிரியானோர் அணியில்
புறம்பேசி பல்கழன்றவர்களும் சேர்ந்திடுகிறார்கள்
எதிர்படும் நாளில் மலர்வாய் புன்னகைக்க வேண்டும்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!