Sunday, September 22, 2013

இருண்மை வலி

இருண்மை படர்ந்த கவிதையுள்
உருகும் சிறுமெழுகென
ஒளிசிந்திப் போகிறது ஏதோவொரு வரி
விலங்கிட்ட கைகளுடன்
பளீரிடும் சிரிப்பை உதிர்க்கும்
அவளை வெளிச்சத்தில் பாருங்கள்
ஒளி குன்றும் போதில் குளமாகிய கண்கள்
எழுத நினைத்த அனைத்தையும் மறந்துவிட்டேன்
இன்னொரு மெழுகுவர்த்தியைக் கொல்ல வேண்டும்
இப்போதைக்கு அவ்வளவு தான்
விலங்கை விடவும் இருளே அதிகம் அச்சுறுத்துகிறது
அவளையும் என்னையும்...
முடிந்தால் பூட்டிய விலங்குடைக்க
நாளை ஏதேனும் செய்யவேண்டும்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!