Monday, September 23, 2013

கவிக் கோர்வை - 18

எண்ணம் இடுதிரியோ
எரியும் சுடர் தான்
என் கவியோ?!
*****
சலங்கையிலிருந்து உதிர்ந்த
தனியொரு முத்துக்கும்
குலுங்கிச் சிரிக்கும் திறனுண்டு

*****
சொல்லாமல் வந்துவிட்டேன்
மயிற்கற்றைச் சுருளை அலுத்தபடி
பெருக்கித் தள்ளும் நாளில்
நினைத்துக் கொள்வாயா அம்மா?

*****
வாய்க்கூடணிந்த கன்றொன்று
மண் தின்பதற்கென்று அலைவுறுகிறது...

*****
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை
கடவுளுடனான சினேகத்தில்
மகிழ்கிறது

*****
நூறு சதவீதம் நிரம்பிய குளமும்
காற்றுக் குமிழிகளைத் துப்பியபடியிருக்கிறது....

*****
இரண்டாம் யாமத்தில்
வானக் குளத்து நிலா
பூமியில் மிதந்தபடியிருக்கிறது

*****
நிகழ் இரவில்
நிழல் தேடி...
தீபங்களேந்தியபடி
நகர்கிறதந்த நிஜம்

*****

1 comment:

Unknown said...

நான் மிகுந்த எதேச்சையாக தங்களின் ப்ளாக்கை படிக்க நேர்ந்தது இம்மாதிரியான நிகழ்வுகள் நேர்த்தியாக அமைவது அபூர்வம் தங்களின் படைப்புகளை போன்று தங்கள் எழுத்து கூர்வாள் அன்று உண்மையின் மென்மையான் தேடல்கள்

இங்கனம் பி டி ராஜன்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!