Monday, September 30, 2013

ஐயம்

நூற்றாண்டு மரத்திலிருந்து
உதிர்ந்த சருகுகளும்
உரிந்த பட்டைகளும்
மரத்தின் திசுக்களில்
தன்னிருப்பை எழுதி வந்திருக்குமோ
என்னவோ!
வெட்டப்பட்டக் கிளையின் வேதனையில்
பக்கக் கிளை வளருமே தவிர
அப்பாகம் துளிர்ப்பதில்லை காண்!
உடைபட்டக் கிளை பதித்து
அங்கோர் மரம் வளர்ந்ததுவும் காண்!
ஒளிர்வும் பொலிவும்
உற்றுநோக்கலும்
கற்றுத் தேர்தலும் வேர்பிடித்தலில் இருக்கிறது
தசை பெருக்கும்
தாவர சுழற்சியுள்
வெயில் மழை காற்று
என்பனவாகிய காலத்தின் கூறுகள்
பற்றுதலிலின்றி பரிணமிப்பதில்லை
தென்றலின் வருடலில்
உடல் கூசிப் பெருமூச்செறியும்
அவயங்களுடன் கதை பேச வந்திருக்கிறேன்
செவ்விக்குடன்படுமா அப்பெருமரம்?!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!