Wednesday, September 18, 2013

அழகு தானில்லையா?!

விளையாடிக் கொண்டிருக்கிறோம்
உன் கவிதையில் நானும்
என் கவிதையில் நீயும்
சொல்லிக் கொள்ளாமல் நீண்டபடியிருக்கிறது
பொய்முகமூடி தானென்றாலும்
யார் முதலில் கழற்றி வைப்பதென்றே...
ம்ம்ம்...
இருபுறமும் துளையிட்ட குழல் என்கிறாய்
அதனுள் இசைத்தபடி நகரும்
காற்றென்கிறேன்
எவரோடு போனாலும் - எனை
வேரோடு பறித்துவரும் வல்லமை சாற்றுகிறாய்
ஆண்மையில் திளைத்துப் போய்
மௌனிக்கிறேன்
மனக்குதிரையை லாவகமாய் செலுத்துகிறாய்
உரசி வரும் உனை நான் காதலாய் பார்ப்பதும்
நீ என்னைச் சீண்டிச் சிரிப்பதுவும்
நகர்த்தும் சாட்டை எவரிடம்?
இசைந்தபடி இழுத்துக் கொண்டோடும்
காதலைத் தான் கேட்க வேண்டும்
அழகாய் இருக்கிறதிந்த
கவிதைக்கு பதிலாய் இன்னொரு கவிதை....

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!