Saturday, September 28, 2013

அவளாகி நானும்....

இன்னும் அந்தக் குழந்தைக்கு தலை நிற்கவில்லை. எல்லா விரல்களும் வாயினுள் விட்டு சப்புக் கொட்டிக் கொண்டிருந்தது.கிட்ட நெருக்கிய கணம், மற்றொரு கையால் என் தலை முடியைப் பிடித்துக் கொண்டது. மெதுவாய் விடுவித்துக் கொண்ட அதே நேரம் அந்தக் குழந்தையின் அம்மா என்னை நோக்கித் திரும்பினாள். புன்னகைத்தபடி
“கொஞ்சம் பிடிச்சக்கறீங்களா? இதோ வந்துடறேன்”

சென்னையில் இது போலும் நான் பார்த்ததில்லை.அத்தனை எளிதில் குழந்தையைப் பிறரிடம் தரும் தாய்மார்களைப் பார்த்ததில்லை. சுடிதார்ல குழந்தை பாத்ரூம் போனா என்னாகும் இங்கிருந்து வங்கிக்கு வேற போகனுமே.. அப்பாடா! வெள்ளை கவுன் பாதுகாப்பு அம்சங்கள் சகிதம் என் கைக்கு வந்தது அந்தக் குட்டி தேவதை. கழிப்பறை நோக்கிப் போனவள் முப்பது நிமிடம் ஆகியும் திரும்பி வரவில்லை. எந்த லக்கேஜூம் இல்லை. குழந்தையைத் தூக்கிக் கொண்டு பொதுவிடத்து வருகிறவள் போல் தெரியவில்லை. அவளும் ஏதோ குழப்பத்தில் இருப்பது போலவும்.... அய்யோ! சடாரென குழந்தை திருட்டு சம்பந்தமான எல்லா திரைப்படங்களும் செய்திகளும் வந்து போயின..

கண்சிகிச்சைப் பிரிவின் தளம் இது. இது போல நிறைய தளங்கள் உண்டு. ஒவ்வொரு வகை மருத்துவத்திற்கும் ஒவ்வொரு தளம். நான் வேறு இத்தனை நேரமாக குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தேனே தவிர அவள் என்னவானாள் என்கிற கேள்வி என்னுள் கேட்டுக்கொள்ளாமல் இருந்தேனே! என்னை நானே நொந்து கொண்டு அவளைத் தேடத் துவங்கினேன். பயம் வேறு. இதற்கிடையில் கொஞ்சமும் அழாமல் தோளில் சாய்ந்தபடி கன்னம் காது என எச்சிலபிஷேகம் நடந்தபடியிருந்தது. முதல் தளம் இரண்டாம் தளமென்று தேடியும் கண்ணில் தட்டுப்படவில்லை. அலைபேசிய தோழி வேறு போலீஸ் கம்ளைண்ட் ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்தாள். போட்டோ எடுத்தியா? அந்தப் பொண்ணு எப்டி இருப்பான்னெல்லாம்... மிரண்டு போய்ட்டேன். இதென்னடா சனிக்கிழமையும் அதுவுமா இப்படி ?
கீழே ரிஷ்ப்சன் வரை இறங்கிப் போய் CCTV ரிக்கார்டிங் பார் என தோழியின் சமயோஜிதம் ஆறுதல் தந்தது.

என் அப்பாயின்மெண்ட் வந்து விட்டது. குழந்தையோடு உள்ளே நுழைந்தேன். கண் பரிசோதனையின் போது குழந்தை கையில் இருக்கக் கூடாதென்றார்கள். நர்சிடம் போவதற்கு அத்தனை கத்தியது குழந்தை. அதிசயமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு இவங்கம்மா வந்தா நான் இங்க இருக்கேன்னு சொல்லுங்க என்றேன் நர்சிடம். இருபது நிமிட பரிசோதனைக்குப் பின் குழந்தையோடு வெளியில் வந்தேன். முழுதாய் ஒரு மணி நேரம் என்ன செய்கிறாள் கழிப்பறையில்? செம கடுப்பாக வந்தது. என்னோடு இன்னும் இரண்டு நர்சுகளும் தேடிக் கொண்டிருந்தார்கள்.எங்கு தேடியும் அவளைக் காணவில்லை. வேறு தளத்திற்கு சென்று விட்டாளோ? சமர்த்தாக தோளில் சாய்ந்தபடி இருந்தது அந்தப் பஞ்சுக் குட்டி. அத்தனை அழகான குழந்தை. பேசாமல் ஆரம்பத்தில் இருந்த இடத்துக்கே வந்து உட்கார்ந்தேன். இன்னும் ஒரு 40 நிமிடம் கடந்து ஒரு வயதான பாட்டியுடன் மெதுவாய் வந்தாள்.

”கஷ்டப்படுத்திட்டாளா குழந்தை?”
“அதில்ல. எங்க போனீங்க?ஒரு மணி நேரமா தேடிட்டு இருக்கேன். என்னங்க நீங்க”
“இல்ல பாட்டிக்கு லேப் டெஸ்ட் எடுக்கக் கொடுத்திருந்தேன். கூட்டி வர லேட்டாயிடுச்சு. அதான்”
“சொல்லி இருக்கலாம்ல? பயந்தே போயிட்டேன்”
“என்ன பயம்?” சிரித்தபடி கேட்டாள். ஒன்றும் சொல்ல முடியவில்லை. குழந்தையை வாங்கிக் கொண்டாள். வாயிலிருந்து கையை எடுத்ததும் முன்போல் கத்த ஆரம்பித்தது.இதானா காரணம். நான் கூட முன் ஜென்ம பந்தம் ஒட்டுதல் ரேஞ்சுக்கு பீல் பண்ணிட்டேனே! நல்ல அம்மா நல்ல குழந்தை. நல்லா வருவீக!

விடைபெறும் போது சொன்னாள்,

“முகத்தைப் பார்த்தா தெரியாதாங்க. நம்பிக்கையானவங்களா இல்லையான்னு?”

அது சரி! இளிச்சவாய்ன்னு பார்த்தாவே தெரியும் போல. சனிக்கிழமை வேறு. வங்கி சம்பந்தமான முன்று வேலைகள் முடிக்கமுடியாமல் போனது.இனி செவ்வாய் கிழமை தான்.

ஆனாலும் அந்தச் செல்லக்குட்டி.க்யூட். கண்ணுக்குள்ளேயே நிக்குது.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

ஆனாலும் அந்தச் செல்லக்குட்டி.க்யூட். கண்ணுக்குள்ளேயே நிக்குது.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!