Thursday, September 19, 2013

நினைவுகளை ஏன் வைத்திருக்கிறேன்?

பதியமிட்ட ரோஜாச் செடி
நட்டுவைத்த முருங்கைக் கொம்பு
பிடுங்கி நட்ட பக்கவாழை
வேலியோரத்தில் செழித்து நிற்கும்
அடுக்குமல்லி
சிரிக்கக் காத்திருந்த
இதழ் வளர்ந்த செம்பருத்தி
மல்லி புதினா மணக்க கடும்புதரென
கறிவேப்பிலைக் காடு
வேம்பு பலா மா சேர நீண்டுயர்ந்த
தென்னைக் கூட்டம்
குளவிகள் கொசுக்களென்றிருந்தும்
சொக்கி நிற்க காரணமாய்
சிறு குருவிக் கூடு
கயிற்றுக் கட்டிலும்
கவிதைப் புத்தகங்களும்...
வெயில் பூசி தென்றல் ஆற்றும்
மிதஞ்சூட்டில் நித்திரைக் கனவு
எல்லாமும் விட்டு வந்தேன்
நினைவுகளை ஏன் வைத்திருக்கிறேன்?

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!