Wednesday, August 21, 2013

மைனா




மனமுழுக்க எத்தனையோ கதைகளுண்டு.. என்னோடிருந்த மைனாவை இங்கே தான் தொலைத்து விட்டேன். மிளகாய் பழம், சிறகு நறுக்கல் என எல்லா சித்திரைவதைகளும் செய்தபடி அத்தனை பேரன்பு அதன் மேல்....அதற்கும் அதே பேரன்பு என் மேல் உண்டு. உண்மை தான் நம்புங்கள். என்னோடு பேசப் பழகிய இடைப்பட்ட நாட்களில் சிறகு வளர்ந்திருந்தும் பேரன்பினோடு தத்தித் தத்தி நடந்தபடியிருக்கும்.

யாருமே தேவையில்லையெனத் தோன்றிய நாளொன்றில் அதனையும் துரத்திட... விடாமல் வட்டமடித்தபடி என்னோடே இருந்தது.

என் தோள் பற்றி அனுசரணைக்கு அலைந்த அச்சிறு பறவையின் பாசம் இன்னும் கண்ணுக்குள்ளே...

எவர் திட்டினாலும் அதன் முன் அமர்ந்து கொண்டழுவது வாடிக்கை.. நான் மகிழ்வோடிருக்கையில் என்னிதழுள் பொதிந்த நெல்மணிகளை கவனமாய் தின்னத் தருவேன்.
அந்தக் கணங்களுக்காய் என்னைச் சுற்றிப் பறந்ததென நினைத்திருந்தேன். உண்மை அதுவல்ல... வட்டில் நிறைய நெல்மணிகளிருந்தும் பட்டினியில் செத்தேவிட்டது என் சில நாள் பிரிவில்.

அதன் பின் பறவைகளே வளர்க்கவில்லை. அக்காவின் வீட்டில் பார்த்திருக்கிறேன் குலவும் லவ்பேர்ட்ஸ். அத்தனை ஆசை நானும் வளர்க்க. ஆனாலும் வேண்டாம்.

பறவைகளே வளர்ப்பதில்லை. பறவையாதல் பைத்தியம் பிடித்துவிடுமென்று பறவைகளே வளர்ப்பதில்லை.

இதோ நீளுமிந்த மண்பாதையில், மூங்கில் புதர்களில், தத்தி தத்தி அது நடக்க, கூடவே நானும் நடந்த நினைவுகளை இழுத்துக் கொண்டு பறந்தபடியிருக்கிறது ‘மீனா’ என்று பெயரிடப்பட்ட மைனா.

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!