Wednesday, July 17, 2013

இசையாய் ஒரு நட்பு

என்ன பேசுவது

எல்லாம் தீர்ந்துவிட்டது

மௌனப் புரிதல் சாத்தியப்பட்டபின் சுயவிளக்கங்கள் விலகி நிற்கின்றன.

வசமாகி வசப்பட்டு மீண்டெழும் நிமிடங்களில் கோலோச்சிப் போகிறதொரு வனப் பறவை. ஒவ்வொரு மீட்சியிலும் நுகரும் பிம்பங்களிலெல்லாம் அதன் அன்பின் மொழியே....

கையில் வேலோடு கூர்மையாய் பார்த்தபடியிருக்கிறான் வேடனொருவன். கண்ணிமைக்கும் நொடியில் மரணம். சூழல் புரியாது பாடித் திரிகிறதொரு வெளிச்சக் கெண்டை. சடுதியில் அவன் பார்வை திசைமாற்றி தப்புவிக்கிறது அவ்வனப்பறவை.

உயிர் பிழைத்து தூரத்து நதியுள் அமிழ்ந்தெழும்பும் சின்னஞ் சிறு கெண்டையின் பரவச நீந்தலில் தன்னிலை மறந்து சிறகடிக்கிறது வனப்பறவை. பிறர் சுகத்தில் தான் மகிழும் மகிழ் பறவை.

வனத்துள் அமலோற்சவங்கள் வாடிக்கையென்பதால் உந்திப் பறக்கும் அதன் சிறகுகளில் கர்வமேயில்லை.

அங்கயற் கூடலுள் மெலிதாய் கிசுகிசுக்க இப்போதெல்லாம் பறவையின் பாசமே காரணமாயிருக்கிறது.

நன்றிப் பெருக்கிலும் நட்பின் பாசத்திலும் இணங்கிக் கிடக்கின்றன அற்புத ஜீவிகள்.

பாருங்களேன்... பறவையின் சிறகடித்தலுக்கு மௌனமாய் யாழிசைக்கிறது நன்னீர்க் கெண்டை.

இசையின் தேன்மொழியில் காலம் எழுதிக் கொண்டிருக்கிறது பறவைக்கும் கயலுக்குமான மகோன்னத நட்பினை...

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!