Tuesday, July 2, 2013

சகலமானவர்களுக்கும்...

ஆரோக்கியசாமியின் கல்லறைத் திண்டில்
முப்பத்தாறு இரவுகள்
எங்குமில்லாத நித்திரை தழுவல்
அங்குதான் அனுகூலமானது

இந்துச் சுடுகாட்டில்
மின்சாரத்தில் பஸ்பமாகும்
பிணவாடை முகர்ந்தபடி
பல சாயந்திரங்கள்
போனவாரத்தின் மின்வெட்டுப் பகலில்
இருபத்திரண்டு வயதிலொரு
இளம்யுவதி
நிர்மலாவென்று சொல்லியழுதார்கள்
விம்மி எழும்பும்
விலா எலும்புகள் தெறிக்க
அடித்து ஒடுக்கினான்
சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தேன்

பேய் பிடித்தவர்களை
தர்ஹாவின் புகைக்கு மத்தியில்
தலைவிரித்தாடி பார்த்திருக்கிறேன்
தினப்படி காட்சி தான்
கொஞ்சமும் பயந்தேனில்லை

கிராமத்துப் பூசாரியின்
உடுக்கை சத்தமும்
விளாசியெடுக்கும் சாட்டையும்
மிதமிஞ்சிய வன்முறைதான்

பேய்களே இல்லை
அது மூடநம்பிக்கை

குழல் விளக்கைத் தவிர
ஏதும் நிறைக்காத
காலியான தனியறையில்
ஏதோ இருக்கிறது
எவரோ அழுகிறார்கள்
எவரோ நடக்கிறார்கள்
எவரோ சிரிக்கிறார்கள்
என்னமோ நடக்கிறது

தனக்கென எழும்பும்
சுவர்களுக்குள்ளே தான்
பேய்கள் மனிதர்களைப் பிடிக்கின்றன

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!