Saturday, July 13, 2013

மதுமலர்

மதுவழியும் மலர்களின் மடியில்
கவிழ்ந்துறங்கும் நிலவுக்கென
சலசலக்கும் குளக்கரையில்
சலனமற்று காத்திருக்கிறேன்
சத்தமாய் சதிராடிக் கொண்டிருக்கிறது
ரசனையில் ஊறித் திளைத்த மனம்

கவலையற்ற காதலோடு
களமிறங்கி ஒளிவீசுகிறது தண்ணிலவு
களங்கமெல்லாம் மச்சமென
திமிறி வசப்படுகிறது மனது

முன்னிரவுத் தொடுகையில்
முளைக்கத் துவங்கின சிறகது
பின்னிரவுக்கெல்லாம் பறக்கத் தயாராய்
பேதை நான் அறிந்தேனில்லை

எட்டி உதைத்து எம்பிப் பிடித்தேன்
தூரத்தே பூமி
தொடும் தொலைவின் வானம்
சுமந்து பறந்த நிலா
நடுவானில் மல்லாந்து சிரிக்க
உதிரத் துவங்கிய நான்
பறக்கத் துவங்கினேன்
அட!
ஒடுங்கிய சிறகுகள்
விரிந்த கணம்
வசப்பட்டது வானம்
கன்னஞ் சுடும் கதிரொளியில்
கனவென்று உறைக்கக் கூடும்
அதுவரையில்....
நிலவு கலமாகவும்
நான் அதில் பயணியாகவும்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!