Sunday, July 14, 2013

நான் யாரென ஆய்ந்தறி

தானே நீள்கிறது 
தண்மையாய் ஒரு கரம்
பாசத்திற்கு வறுமை தானே
வாஞ்சையாய் வாரியணைக்கிறேன்
கை தொட்டதால் ஒட்டிய தீட்டென்னவோ ?
களமாறி கைகோர்த்தலென்ற
அங்கலாய்ப்புகளில் ஏதும் புரிவதேயில்லை
அட!
மிதிபட்டெழுந்து வந்தவள்
வலியினைச் சொன்னால்
பூசும் சாயம் சாதியா?
வலுவில் செல்வதில்லை
வந்தததை விடுவதில்லை
முதிராத மனமில்லை
முற்றிலும் துறவுமில்லை
பிழையொன்று கண்டேன் அதில்
பரிதாபத்துக்கென்று
பச்சாதாபத்தில்
அன்பொழுக நடிக்காதீர்கள்
அதன் பின்
அலுக்காதீர்கள்
உங்கள் சூதறியா
என் சுயம் அத்தனை அசிங்கப்படும்
எழுத்தில் சொல்லிடமுடியாது
என் சுயம் அத்தனை அசிங்கப்படும்
அன்பிற்கென வளைந்த என் முதுகில்
அதிகாரமாய் ஏறாதீர்கள்
விசிறியடிக்குமென் தன்மானக் குதிரை
வேகமாய் விலகுங்கள்
வேறு வேலையிருக்கிறது....

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!