Thursday, June 20, 2013

சண்முகம் F/O கயல்விழி


அப்பாவுக்கு எம்.ஜி.ஆர் தான் பிடிக்கும். வெறிப்பிடித்த ரசிகர். அப்பாவென்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி கலர் டீவி வந்த பின்னாடியும் அடிக்கடி கருப்பு வெள்ளைப் படத்தை பார்க்க வைப்பார். அன்பே வா போன்ற படங்கள் ஆறுதல். வீட்டிலிருக்கும் நேரம் குறைவென்றாலும் இருக்கும் நேரம் முழுதும் எம்.ஜி.ஆர் மட்டும் தான். படுதீவிரமான அதிமுக காரர்.அ.தி.மு.க ஆரம்பித்த நாளிலிருந்து இன்னும் எந்தக் கட்சிக்கும் மாறாமல்(தாவாமல்), எந்தப் பெரிய பதவியும் தரப்படாமல், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டும் விசுவாசத்தினால் கட்சியில் இருக்கும் ஏமாளிகளைக் கணக்கெடுத்தால் பதிலாய் கிடைக்கும் அடிமட்டத் தொண்டர்களில் என் அப்பா நிச்சயம் இருப்பார். அம்மா புகழ்பாடும் விசிலடிச்சான்களுக்கு மத்தியில் இவரின் தமிழ் புலமை பாவம் என்ன செய்யும். தவிர சபை நாகரிகம் வேறு பார்ப்பார். அவர் தமிழுக்கும் அரசியல் வாழ்வுக்கும் உந்துதலாய் இருந்த பெருமக்கள் அப்படியான பெருமைக்குரியவர்கள்.

திராவிடக் கட்சியான அதிமுகவில் இருக்கும் பெரியார்
கொள்கையாளர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவர். காலில் விழாதவர்கள் கவனிக்கப்படமாட்டார்கள்.காரணம்,கட்சித் தலைமைக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அடிபொடிகள் வகுத்த கட்சியின் நியதி. மாறுதலுக்கு ஆட்படுமா எதிர்காலம். கேள்வி மட்டும் பதில் என்னிடமும் இல்லை.

அரசியல் நிலைப்பாடும் இலக்கிய ஆர்வமும் அவருக்கு வெவ்வேறு துருவங்கள். கலைஞரின் தமிழ் மிகவும் பிடிக்கும். நல்ல இலக்கிய ரசனை உள்ளவர். குறிஞ்சிப்பா பாடுவார். புறநானூற்றுப் பாடல்களத்தனையும் எளிதாய் சொல்லுவார். சிலப்பதிகாரம் அசை பிரித்து பொருள் விளக்குவார். இலக்கியவாதியான அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதேனும் எட்டிப் பார்க்கும் அந்த முகம். அவரின் சில நண்பர்கள். முக்கியமாக காரையூர் தமிழ் வாத்தியார். இருவரிடையே நிகழும் இலக்கிய விவாதங்களை கேட்க பார்க்க மிகவும் பிடிக்கும்.

’சண்முகம் பொண்ணா நீ? உச்சரிப்பே சரியில்ல’ இந்திரா டீச்சர் அழுந்தக் கொட்டியது இன்னும் நினைவிலிருக்கிறது. அவரின் கல்லூரித் தோழி. அப்பாவின் சொற்பொழிவுகள் பற்றிய பெரிய பிரசங்கம் அவர் நிகழ்த்தக் கேட்டிருக்கிறேன். அரசியலுக்கு வந்தபின் இலக்கியத்தை மறந்துவிட்டார் அப்பா. மீட்டு வர, வேண்டுமென்றே தப்புத்தப்பாய் சங்கத் தமிழ் வாசித்தால் போதும். அடங்காக் கோபத்துடன் வெளிப்படும் அந்த முகம். இழுத்து வைத்து அசை பிரித்து பொருள் விளக்கி என் காதும் சிவந்து....

பத்ரகாளி படத்துல வர்ற ‘கண்ணனொரு கைக் குழந்தை’ பாட்டு மிகவும் பிடிக்கும் அவருக்கு. இளையராஜாவை நாங்களெல்லாம் பெரிதாய் கொண்டாடும் போது பாவலரை பெருமையாய் நினைவுகூர்வார். இசையை விடவும் வரிகளை அதிகம் ரசிக்கும் அப்பாவுக்கு இன்றைய இசைவடிவம் எரிச்சலூட்டும் விடயம்.சமீபத்தில் அவருக்கு பிடித்த பாடல்கள், ‘அய்யங்காரு வீட்டு அழகே..’ ,’அனல் மேலே பனித்துளி’. :) தமிழ் காரணமா இருக்குமென்றே நம்புகிறேன்.

திரைபாடலுக்கென கண்ணதாசனையும், நா.காமராசனையும், மருதகாசியையும்,கலைவாணரையும் கொண்டாடுவார். வரிகளின் அமைப்பைக் கேட்ட மாத்திரத்தில் யார் எழுதியது என்று சொல்லிவிடுவார். வைரமுத்துவை அதிகம் விமர்ச்சித்தாலும் அவரின் புத்தகங்களில் எல்லாமும் வாங்கி வைத்திருப்பார். அதற்கு அவர் சொல்லும் காரணம், ‘யாரையும் படிக்காம விமர்ச்சிக்கக் கூடாது’.

ஜெயக்காந்தனை மிகவும் பிடிக்கும். அவரின் மிடுக்கான பேச்சை அதிகம் சிலாகிப்பார். அது போலவே நாகூர் ஹனிபாவின் குரலும். சிங்கத்தின் கர்ஜனை என்பார்.அவருக்குப் பிடித்த பேச்சாளர்கள் நிறையப் பேர் உண்டு. அதில் எப்போதும் ம.பொ.சி தான் அவருக்கு சட்டென நினைவில் வரும் பெயர்.குன்றக்குடி அடிகளாரின் பிரியத்துக்குரியவராகவும் இருந்திருக்கிறார். அதே சமயம் பெரியாரின் எல்லா அரசியல் நிகழ்வுகளும் விரல் நுனியிலிருக்கும். இப்போது அவருக்கு வழக்கில் உள்ள பெயர் பெரியார் சூட்டியது. நான் அதை உபயோகிப்பதில்லை. அவர் அப்பா அவருக்கு வைத்த பெயர் தான் எங்களின் எல்லா சான்றிதழ்களிலும் இருக்கும். நானும் அதைத் தான் பயன்படுத்துகிறேன்.
வீட்டிலிருக்கும் நேரங்களில் தோளில் துண்டோடும் கையில் கரண்டியோடும் ஏதோவொரு அசைவ சமையலில் அமர்க்களப்படுத்துமவர் அம்மாவை விடவும் அருமையாய் சமைப்பார். எப்போதும் சமைக்கும் அம்மாவை மறந்து அப்பாவுக்கு ஜால்ரா அடிப்போம். அசைவமாச்சே... பூஜை, நேரம்,காலம் எதுவும் கிடையாது.பார்க்கும் வரை-சாப்பிடாத வரைக்கும் விரதமென்பார். மிகச் சரியாய் கடைபிடிக்கிறேன். :)

பழகுவதற்கு மிகவும் இலகுவான மனிதராய், நகைச்சுவையும் குறும்புமாய் இருந்த இளமைக்கால அப்பாவை அவருள் தேடிப் பார்க்கிறேன். காணக்கிடைக்கவேயில்லை. அப்பாவின் குணநலன்களில் மாற்றம் எப்போது வந்தது? பெரிய தம்பியின் மறைவுக்குப் பின்னால், சின்னச் சின்ன விசயத்துக்கும் பதறிப் போகும் மனிதராய், விரக்தியோடு பற்றில்லாது, கடமைக்கென வாழும் மனிதராய் மாறிப் போனார். காயம் பட்ட சிங்கத்தைச் சீண்டி தன் வீரத்தை நிரூபித்துக் கொள்ளும் முயற்சியில் உறவென்னும் ஊண் தின்னி காகங்கள். சிதைந்து போகும் அபாயத்திலிருக்கும் கூட்டுக் குடும்பத்தை ஒட்ட வைக்கும் முயற்சியில் நிம்மதியிழந்த வீட்டுப் பெரியவர்கள் வரிசையில் இப்போது அப்பாவும். போதாக் குறைக்கு, எனக்கு அப்பாவென்கிற கூடுதல் பொறுப்பும். மகள்கள் எப்போதும் இளமையில் மகிழ்வாகவும் முதுமையில் சுமையாகவும் இருக்கிறார்கள். வாழ்க்கையை நகர்த்தும் காரணமாகவும்....

இத்தனைக்கு மத்தியிலும், அரசியல் கூட்டங்களுக்கு செல்வதும் பேரூரை ஆற்றுவதும் பொன்னாடைகளையும் மாலைகளையும் சொத்தாய்(!) சேர்ப்பதுவும் நிகழ்ந்தபடிதானிருக்கிறது. அவரின் தன்முகவரியுடை கடிதத்தாளில்(letter pad) ஒரு வாசகம் அச்சடிக்கப்பட்டிருக்கும்,

“வீரன் தோற்றதுண்டு விசுவாசி தோற்றதில்லை”

2 comments:

ulagathamizharmaiyam said...

எதேச்சையாக வந்து விட்டேன் அம்மணி. திருவாளர் ஷண்முகம் அவர்களைப் படித்த பிறகு இங்கு உங்களுக்கு எழுத வேண்டும் என்ற நட்புணர்வு பூத்திருக்கிறது.

நீங்கள் எழுதும் காதல் ரசம் ததும்பும் வரிகளில் எனக்குச் சிலபோழ்து சினம் வரினும் எழுத்தாற்றல் நிச்சயம் கவனிக்க வைக்கிறது.

உங்கள் தமிழை அறிவார்ந்த தேடலுக்கும் சாடலுக்கும் பயன் படுத்தினால் முதல் வாசகனாய்ப் பொறுப்பேற்கத் துணிவேன்.

திருவாளர் சண்முகம்,அவர்தான் உங்கள் அப்பா: என் தந்தை பாதி நான் பாதி என்று தோன்றுகிறார்.

அவருக்கு எனது அன்பையும் நட்பையும் எடுத்துச் சொல்லுங்கள்.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
1.7.2013

ulagathamizharmaiyam said...

எதேச்சையாக வந்து விட்டேன் அம்மணி. திருவாளர் ஷண்முகம் அவர்களைப் படித்த பிறகு இங்கு உங்களுக்கு எழுத வேண்டும் என்ற நட்புணர்வு பூத்திருக்கிறது.

நீங்கள் எழுதும் காதல் ரசம் ததும்பும் வரிகளில் எனக்குச் சிலபோழ்து சினம் வரினும் எழுத்தாற்றல் நிச்சயம் கவனிக்க வைக்கிறது.

உங்கள் தமிழை அறிவார்ந்த தேடலுக்கும் சாடலுக்கும் பயன் படுத்தினால் முதல் வாசகனாய்ப் பொறுப்பேற்கத் துணிவேன்.

திருவாளர் சண்முகம்,அவர்தான் உங்கள் அப்பா: என் தந்தை பாதி நான் பாதி என்று தோன்றுகிறார்.

அவருக்கு எனது அன்பையும் நட்பையும் எடுத்துச் சொல்லுங்கள்.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
1.7.2013

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!